Skip to main content

அந்த கேவலமான பசங்களை எப்படியாவது புடிக்க வையுங்க  சார்... பொள்ளாச்சி சம்பவம்!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த ஏப். 28-ஆம் தேதியிலிருந்து மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரிக்க ஆரம்பித்ததும் விலகிக்கொண்டனர். ஆனாலும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி ரிஸ்வந்த் என்கிற சபரிராஜன் வீட்டிற்குள் சி.பி.ஐ. திடீரென நுழைந்து ஏகப்பட்ட ஆதாரங்களை அள்ளிச் சென்றதாகவும் அதற்கடுத்ததாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிலரிடம் விசாரித்ததாகவும் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. 
 

pollachi



இதை உறுதிப்படுத்துவதற்காக பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகரில் இருக்கும் சபரிராஜன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தோம். காலிங்பெல்லை அழுத்தியதும் பெண்களும் சிறுவர்களும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தனர். "சபரிராஜன் வீடு இதானே' என நாம் கேட்டதும்... "ஆமா நீங்க யாரு?' என்றார் சபரிராஜன் அம்மா. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுதான் தாமதம், "இங்கிருந்து உடனே கிளம்புங்க, உங்ககிட்டயெல்லாம் பேச முடியாது' என பட்டாசாக வெடித்தார். நாம் அவரை போட்டோ எடுப்பதைப் பார்த்ததும் முகத்தை சேலைத் தலைப்பால் மூடியபடி, இரும்புக் கேட்டை படாரென சாத்திவிட்டு, வீட்டுக்குள் போய்விட்டார். அந்த சிறுவர்களும் நம்மை வெறித்துப் பார்த்தபடி உள்ளே போய்விட்டனர். 
 

pollachi issues



அங்கிருந்து நாம் கிளம்பி, அந்த ஏரியாவில் வசிக்கும் முக்கிய பிரமுகர் ஒருவரைச் சந்தித்து சபரிராஜன் வீட்டிற்கு சி.பி.ஐ. வந்தது குறித்து விசாரித்தோம். ""இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டுக்குப் போகாம சபரிராஜன் வீட்டுக்குப் போனதுக்கு காரணம் இருக்கு. பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா இருந்த நடேசன் மற்றும் போலீஸ்காரர்கள் டீம் முதலில் தூக்கியது சபரிராஜனைத்தான். அவன் மூலமா திருநாவுக்கரசு வீட்டுக்குப் போகும்போது, அவன் அம்மாதான் அவனை தப்பிக்கவிடுகிறார்.
 

pollachi issues



அதுக்கப்புறம் சதீஷ்குமார், வசந்தகுமார்னு வரிசையா பலரை கைது செய்து, அவர்களிடமிருந்து சி.டி.க்கள், போட்டோக்களையெல்லாம் கைப்பற்றிவிட்டது  நடேசன் டீம். இப்ப எதுவுமே இல்லாத சபரிராஜன் வீட்டில் என்ன கிடைத்துவிடப்போகிறது?. பெரிய பில்டிங் காண்ட்ராக்டரான சபரிராஜனின் அப்பா அசோகனிடம், "உங்க பையன் எங்க வேலை பார்த்தான், எவ்வளவு சம்பளம் வாங்கினான், உங்க குடும்பத்துல எத்தனை பேரு'ன்னு கணக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க. இந்த சி.பி.ஐ. முதல்ல விசாரிக்க வேண்டியது, இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்.ஐ.க்கள் ராஜேந்திர பிரசாத், பாஸ்கர், எஸ்.எஸ். எஸ்.ஐ.ரகு ஆகிய இவர்களைத்தான்''’ என்றவர் மேலும் சில தகவல்களை சொல்லத் தொடங்கினார். 

 

pollachi issues



சபரிராஜனும் திருநாவுக்கரசும்தான் பொம்பளப் புள்ளைங்களைத் தூக்குறதுல கில்லாடிகள். மொதல்லயெல்லாம் சபரிராஜன் தாடி வச்சிருக்கமாட்டான். ஒரு ஆக்சிடெண்ட்ல தாடை கிழிஞ்சு போய், தையல் போட்டிருந்தாங்க. அந்த தழும்பு தெரிஞ்சா பொண்ணுங்க அசிங்கமா நினைக்கும்னுதான் தாடி வளத்துக்கிட்டுத் திரியுறான்''’என்றார். அங்கிருந்து கிளம்பி நேராக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று, நமக்கு பழக்கமான டாக்டர்கள் சிலரிடம் பேசிய போது, ""ஆமா சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தார்கள். கடந்த அஞ்சு வருஷத்துல எத்தனை இளம்  பொண்ணுங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, இல்ல வேற காரணங்களுக்காக அட்மிட் ஆனாங்களா, அவுங்களோட வீட்டு அட்ரஸ் ஆகிய விவரங்களையெல்லாம் கேட்டு வாங்கிட்டுப் போயிருக்காங்க''’என்றனர். 

பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் குறித்த விவரங்களை சி.பி.ஐ. சேகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில்... பொள்ளாச்சி பாலியல் வில்லன்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். சி.பி.ஐ. விசாரணையில் உண்மை அம்பலத்திற்கு வரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.இந்நிலையில் நமக்கு 2 போன்கால்கள் வந்தன. "நான் மேற்கு மண்டலத்துல இருக்கற ஒரு ஸ்டேஷன்ல இருந்து பேசறேன். நான் பொள்ளாச்சியில ஏழு வருசத்துக்கு முன்னால கிழக்கு போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.ஐயா இருக்கும் போது நடந்த சம்பவம் ஒண்ணு உங்ககிட்ட சொல்றேன்.

மகாலிங்கபுரம் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில முபாரக்குன்னு ஒருத்தரு இருக்காரு, இப்ப அவரு அ.தி.மு.க. அம்மா பேரவைச் செயலாளர். அவரு அப்ப ஒரு சி.டி. கடை வச்சிருந்தாரு. அவரு ஆபாச படங்கள் விக்கிறதா வந்த புகாரின் பேர்ல நைட்டோட நைட்டா கடைக்குள்ள ரெயிடு போகணும்னு அப்ப டி.எஸ்.பி.யா இருந்த பாலாஜி சார், மகாலிங்கபுரம் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டாரு.

5,000 சி.டி.க்களை புடிச்சோம். அந்த சி.டி.க்கள்ல சிலதை பிளேபண்ணி பார்த்தோம். அதுல பல பொண்ணுகளை பலவிதமா மெரட்டி பசங்க எடுத்த பல வீடியோக்கள் இருந்துச்சு. "இவனுங்க யாருன்னு கண்டுபிடிக்கோணும்'னு உயர் அதிகாரிகள்கிட்ட உணர்ச்சியா சொன்னேன். ஆனா அவங்க என்னைய அதற்கடுத்த நாளே டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. அப்ப  தவறவிட்ட அந்த  கேவலமான பசங்களை எப்படியாவது -இப்பவாவது புடிக்க வையுங்க  சார்'' என உணர்ச்சியாய் சொன்னார் அந்த போலீஸ் அதிகாரி.

இரண்டாவது போன்கால். "தவறாக எப்படி சொல்லலாம் பாஸ்ட்ஃபுட்  கடையை பற்றி? நீங்கள் எப்படி பொள்ளாச்சி கோட்டூர்புரம்  ரோட்டில் ஓம்பிரகாஷ் பெட்ரோல் பங்க்குக்கு எதிரில் உள்ள அடித்து உடைக்கப்பட்ட பாஸ்ட்ஃபுட் கடையை திரும்பவும்... அது பார் என்று சொல்லலாம்?' எனக் கேட்டது அந்தக் குரல். நாம், கடந்த 12-ந் தேதி காலை 11:20 மணிக்கு பெட்ரோல் பங்க்குக்கு முன்னால இருக்கற டாஸ்மாக் கடை (கடை எண்:1862)யை ஒட்டியுள்ள பாஸ்ட்ஃபுட் கடைக்குள் சென்று பார்த்தோம். அமோகமாக பிராந்தி, விஸ்கி, பீர் என டாஸ்மாக் கடை திறக்கும் 12 மணிக்கு முன்னதாகவே பாஸ்ட்ஃபுட்  கடையில் விற்கப்படுவதை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவுசெய்து வந்தோம். அமோகமாய் செயல்படுகிறது பாஸ்ட்புட் கடை. இவற்றையும் சி.பி.ஐ. கவனிக்கும் என்கிறார்கள். 
 

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

பிரான்ஸ் டூ ஏற்காடு; கொல்லப்பட்ட பெண் - உறைய வைக்கும் பின்னணி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Two youths were arrested in the case of the passed away of the young woman

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே மார்ச் 20 ஆம் தேதி, கடும் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனக்காவலர் பெருமாள் அங்கே சென்று பார்த்தபோது, வனப் பகுதிக்குள் 20 அடி பள்ளத்தில் ஒரு சூட்கேஸ் பெட்டி கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம சூட்கேஸை கைப்பற்றினர். அதைத் திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிக்குள் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்தது. கொலையுண்ட பெண் சுடிதார் டாப்ஸ் மற்றும் பேண்ட் ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.

தடயவியல் நிபுணர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூராய்வு செய்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸ் பெட்டிக்குள் அடைத்து, நீண்ட நாள்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் வீசியிருக்க வேண்டும் என்பதால், சடலம் முற்றிலும் சிதிலம் அடைந்து இருந்தது. அதனால் சடலமாகக் கிடப்பது யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை எஸ்.பி., அருண் கபிலன், சேலம் புறநகர் டி.எஸ்.பி. அமலா அட்வின் நிகழ்விடம் விரைந்தனர். கொலையுண்ட நபர் யார் என்று தெரிந்துவிட்டால், கொலையாளியை எளிதில் நெருங்கி விட முடியும் என்பதால், முதலில் சடலமாகக் கிடந்த இளம்பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரை முடுக்கிவிட்டார் எஸ்.பி., சடலம் கிடந்த சூட்கேஸ் பெட்டி புதியதாகவும், பெரியதாகவும் இருந்தது. அந்தப் பெட்டியை விற்பனை செய்த கடையின் ஸ்டிக்கர் இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து விசாரித்தபோது, கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள டிராவல்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடையிலிருந்து வாலிபர் ஒருவர் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ்(32) என்பவர்தான் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இளம்பெண் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழத் தொடங்கின. நடராஜை  கைது செய்து காவல்துறையினர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சினிமாவை விஞ்சும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  சூட்கேஸ் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்தது, தேனி மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33) என்பதும், அவரைத் தான்தான் கொலை செய்து பெட்டியில் அடைத்து, ஏற்காடு மலைப் பகுதியில் வீசிச் சென்றேன் என்றும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார் நடராஜ்.

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம்.  பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துள்ள நடராஜ், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாடுகளுக்கு பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் கன்சல்டன்சி நிறுவனமும் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகளும் பரவக்கோட்டையில் வசிக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பிரான்சில் வேலை செய்து வந்தபோது, மேட்ரிமோனி இணையதளத்தில் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேவை என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். அப்போது கத்தார் நாட்டில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, சுபலட்சுமியும் தன்னுடைய இரண்டாம் திருமணத்திற்கு மணமகன் தேவை என்றும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், நடராஜ் பதிவு செய்திருந்த அதே மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் விவரங்களை பதிவு செய்திருந்தார்.

Two youths were arrested in the case of the passed away of the young woman

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் அறிமுகமாகிக் கொண்ட இருவரும், தினமும் செல்போன் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு எல்லை தாண்டி, திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்தியா திரும்பியதும் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இந்தியா திரும்பினர். இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து விட்டு, மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, கோவை பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சுபலட்சுமி மீது காதல் வயப்பட்டு இருந்த நடராஜ், அவருடைய பெயரை தனது கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி 1ம் தேதி பரவக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் கோவை திரும்பினார் நடராஜ். கோவைக்கு வந்த நடராஜிடம், அவர் கையில் தனது பெயரின் டாட்டூ அழிக்கப்பட்டு இருந்தது குறித்து சுபலட்சுமி கேள்வி எழுப்பினார். பரவக்கோட்டையில் உள்ள தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றதாகவும், அதனால் டாட்டூவை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடராஜ். இதனால் ஜன. 1ம் தேதி இரவு அவர்களுக்குள் விடிய விடிய கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த நடராஜ், ஆத்திரத்தில் சுபலட்சுமியைப் பிடித்து இழுத்து அவருடைய தலையை சுவரில் மோதியுள்ளார். வீட்டில் இருந்த கட்டையாலும் அவருடைய தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சுபலட்சுமி, நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் இறந்துவிட்டதை அறிந்த நடராஜ், பதற்றம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர், பரவக்கோட்டையில் உள்ள தனது உறவுக்கார நண்பன் கனிவளவனை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

காவல்துறையில் சிக்காமல் இருக்க, பெண்ணின் சடலத்தை மறைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள், கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பெரிய அளவில் ஒரு டிராலி சூட்கேஸ் பெட்டியை வாங்கினர். அந்த பெட்டியில் சுபலட்சுமியின் சடலத்தை திணித்தனர். பிறகு ஒரு காரை வாடகைக்கு எடுத்த அவர்கள், அதில் சடலத்துடன் கூடிய பெட்டியை வைத்துக் கொண்டு, அவர்களே ஏற்காட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் காரை ஓட்டிச் சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத 40 அடி பாலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சடலத்துடன் கூடிய சூட்கேஸ் பெட்டியை தூக்கி வீசியுள்ளனர்.

பின்னர் மலையேறிய அவர்கள், அங்கிருந்து குப்பனூர் வழியாக இரவோடு இரவாக காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டரை மாதங்களாகியும் இந்த சம்பவம் குறித்து வெளியே செய்திகள் ஏதும் பரவாத நிலையில், இனியும் தங்களுக்கு சிக்கல் ஏதும் வராது என்று நடராஜ் கருதினார். இதனால் அவர் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், சூட்கேஸ் பெட்டியில் இருந்த சின்ன தடயத்தால் காவல்துறை பிடியில் சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையே, சடலத்தை வீசிய நாளிலிருந்து நடராஜ் ஒரே இடத்தில் வசிக்காமல், கோவை, சென்னை, பரவக்கோட்டை என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். மார்ச் 20ம் தேதி, சடலம் கைப்பற்றப்பட்ட தகவல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, அவர் பிரான்ஸூக்குச் சென்று தலைமறைவாகி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் வீசிவிடலாம் எனக் கருதி அங்கு சென்றுள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி சேர்வராயன் மலைப் பகுதிக்கு வந்த அவர்கள், கடைசியாக ஏற்காடு மலையைத் தேர்வு செய்து, சடலத்தை வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், ஏற்காடு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சடலம் கைப்பற்றப்பட்ட ஐந்தே நாள்களில், கொலையுண்ட பெண் யார் என்பதைக் கண்டறிந்து, கொலையாளிகளையும் கைது செய்த டிஎஸ்பி அமலா அட்வின், காவல் ஆய்வாளர்கள் செந்தில்ராஜ் மோகன், நாகராஜ், ஸ்ரீராம் தலைமையிலான தனிப்படையினரை சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஆகியோர் பாராட்டினர்.