Skip to main content

தமிழ் சினிமா தொடாததைத் தொடும் மலையாள சினிமா! சரியா? தவறா?

Published on 05/06/2021 | Edited on 05/06/2021
biriyani malayalam movie

 

பிரிக்க முடியாதது... அரசியலும் சினிமாவும்! - இது தமிழகத்துக்குப் பொருந்தும். ஆனால் கேரளத்தில் இந்த வாசகம் பொருந்தாது. அங்கு சினிமாக்காரர்கள் பெரிதாக அரசியல் பேசுவதில்லை, அரசியலில் நுழைந்தாலும் பெரிய வெற்றி பெறுவதில்லை. ஆனால், சினிமாவில் பேசப்படும் அரசியல், அரசியல் பேசும் சினிமாக்கள் என்னும் தலைப்பை எடுத்தால் தமிழகம், கேரளம் இரண்டிலுமே தொடர்ந்து பல படங்கள் இந்த வகையில் வெளியாகின்றன. ஆனால், பேசப்படும் விதம் என்பது இரண்டு மொழிகளிலும் மாறுபடுகின்றன. அந்தந்த மாநிலங்களின் அரசியல் தன்மை, சூழலுக்கு ஏற்றதுபோல மாறுவது இயற்கைதான்.

 

தமிழ் திரைப்படங்களில் ஆரம்பத்தில் தேசிய அரசியல், பிறகு திராவிட அரசியல், பொதுவுடைமை அரசியல் என காலம்தோறும் படங்களில் அரசியல் பரிணமித்து வந்தது. தொண்ணூறுகளில் அரசியல் படங்கள் என்றாலே லஞ்ச ஊழலுக்கு எதிரான காட்சிகளை வைத்து நடுத்தர மக்கள் பார்வையிலிருந்து வசனங்களை வைத்து மேலோட்டமான அரசியலை பேசும் படங்கள் என்றாகின. சாதி அரசியல் பேசும் படங்கள் அவ்வப்போது வந்தாலும் அவை ஒரு பக்கத்திலிருந்து எழுதப்பட்டு எடுக்கப்பட்ட படங்களாக பெரும்பாலும் இருந்தன. ஈழ அரசியல் பேசிய பல படங்கள், சரியாகப் பேசாததால் எதிர்ப்பை சம்பாரித்தன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக மீண்டும் தமிழ் படங்களில் ஆழமான அரசியல் பேசும் படங்களும் அரசியல் சரித்தன்மையுடன் பேசும் படங்களும் வரத்தொடங்கியுள்ளன. முக்கியமாக ஜனநாதன், ராஜு முருகன், பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வருகைக்குப் பிறகு இது நடந்துள்ளது. அதே நேரம் அரசியல் சரித்தன்மையை காக்க வேண்டியும் விமர்சனங்களை தவிர்க்க வேண்டியும் தமிழ்த் திரையுலகால் தொடப்படாத சில இடங்கள் உள்ளன. அந்த இடங்களை எளிதாகத் தொட்டுப் பேசி விளையாடி அதை விவாதமாக்குவது மலையாள சினிமாவின் வழக்கம். அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியாகியிருக்கிறது 'நாயாட்டு'.

 

trance fagath fazil

 

வேட்டை என்று அர்த்தப்படும் 'நாயாட்டு' என்ற டைட்டிலுடன் வந்திருக்கும் இந்தப் படத்தில் அரசியல் - அதிகார கூட்டணியால்  வேட்டையாடப்படுவது மூன்று போலீஸ்காரர்கள். இந்த கதைக்கருவே நமக்கு முரணாக இருக்கிறதல்லவா? அதிகாரமே அவர்களிடம்தான் இருக்கிறது? அவர்களை யார் வேட்டையாடுவது என்று கேட்கிறோமல்லவா? அவர்களை வேட்டையாடும் அரசியல் எது என்று தெரிந்தால் இந்த முரண் இன்னும் அதிகமாகும். படத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான பெண் போலீசை அவரது உறவினரான இளைஞன் தொல்லை செய்கிறான். இதற்காகக் கைது செய்யப்படும் அவன், தான் சார்ந்த தலித் அரசியல் இயக்கத்தின் அதிகாரத்தால் உடனே வெளியே வருகிறான். அவனுக்கும் இன்னும் இரண்டு போலீஸ் பாத்திரங்களாக வரும் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன் இருவருக்கும் நடக்கும் பிரச்சனை விபரீதமாக முடிய பெண் போலீஸான நிமிஷா உள்பட மூன்று போலீஸ்காரர்களும் தலைமறைவாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். படத்தில் தலித் அரசியல் இயக்கங்களின் செயல்பாடு, வாக்கு வங்கி தவறாகப் பயன்படுத்தப்படுவது போன்றவை சார்ந்து அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள், சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் ஆகியவைதான் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன. விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்திருப்பது தமிழ் சமூக ஊடக சூழலில்தான். கேரளத்தில் 'இது நடக்காததா? இப்படியும் நடக்கத்தானே செய்கிறது? அதையும் பேசலாம்...' என்று கேசுவலாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் சேட்டன்கள்.

 

தலித் அமைப்புகள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக உருவாகிய கட்சிகள் மெல்ல வளர்ந்து அரசியலில் முன் வரிசைக்கு வரும் இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட படங்கள் உண்டாகக்கூடிய விளைவு என்பது கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று. அதே நேரம் இந்தப் படம் கேரள அரசியல் சூழலுக்கு எழுதப்பட்ட ஒன்று, அதை நமது அரசியல் பார்வையில் பார்த்து விமர்சிக்க வேண்டியதில்லை என்கின்றனர் சில சினிமா, அரசியல் பார்வையாளர்கள். உண்மைதான், மலையாளத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழில் எடுக்கப்பட சாத்தியமில்லாதவை. ஃபகத் ஃபாசில் நடித்த 'ட்ரான்ஸ்', கடந்த ஆண்டு வெளியான திரைப்படம். கிறிஸ்தவ மத பிரச்சாரத்தை ஒரு மிகப்பெரிய தொழிலாக, ஏமாற்று வேலையாக ஒரு அமைப்பு செய்வதையும் அதனால் பலர் ஏமாறுவதையும் பாதிக்கப்படுவதையும் மிக விரிவாக, வெளிப்படையாகக் காட்டியிருந்தது 'ட்ரான்ஸ்'. இந்தப் படம் வெளிவந்த போது கேரளத்திலேயே எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் வெளியீட்டில் தடை, போராட்டம் என்று பெரிதாகவில்லை.

 

great indian kitchen

 

கடந்த ஆண்டு வெளியான இன்னொரு மலையாள படமான 'பிரியாணி', மத அடிப்படைவாத, தீவிரவாத இயக்கங்களின் மூளைச் சலவைக்கு பலியாகி தனது குடும்பத்தை விட்டு வெளியேறும் ஒரு இசுலாமிய இளைஞனின் செயலால் அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், முக்கியமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசியிருந்தது. சமூகத்தால் அலைக்கழிக்கப்படும் அந்தப் பெண் சமூகத்தை திருப்பித் தாக்க தேர்ந்தெடுக்கும் வழி நம்மை அதிர வைக்கிறது. இதுவும் கொஞ்சம் பிசகினாலும் தவறாக எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ள ஒரு கதைக்கரு. இந்தப் படம் வெகுவாகப் பாராட்டப்பட்டு பல விருதுகளையும் பெற்றது. முக்கிய பாத்திரத்தில் நடித்த பெண்ணான கனி குஸ்ருதி அங்கு கொண்டாடப்படுகிறார். சமீபத்தில் வெளிவந்து தமிழ் சூழலில் விவாதத்தைக் கிளப்பிய இன்னொரு மலையாளப் படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இந்திய பெண்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் அநீதியை மிக இயல்பாக சொல்லியிருந்தது. படத்தின் சிறப்பே, ஒரு வன்முறையாக, கொடுமையாக அல்லாமல் மிக இயல்பாக பெண்களே ஏற்றுகொள்ளும் வகையில் அவர்களின் வாழ்வு குடும்பம் என்னும் அமைப்பில் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை சொல்லியதுதான்.

 

மலையாளத்தில் நமது சர்கார், முதல்வன், மக்களாட்சி ஸ்டைல் நாயகத்தன்மை நிறைந்த கமர்ஷியல் அரசியல் படங்களும் வருகின்றன. அவர்களின் ஃபேவரிட்டான இடது சாரி நாயகனைக் கொண்ட படங்கள் அவ்வப்போது வருகின்றன. மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றியை பெற்ற 'லூசிஃபர்' அப்படியொரு படம்தான். தமிழகத்தில் 2016-17இல் நிலவிய அரசியல் சூழலை பிரதிபலிப்பதுபோல இருந்தது இப்படம். ஒரு பெரிய அரசியல் தலைவர் மறைய அவரது இடத்துக்கு நடக்கும் போட்டி, அரசியல் சதுரங்கம்தான் கதை. விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்திருந்தது லூசிஃபர். சமீபத்தில் மம்மூட்டி நடித்திருந்த 'ஒன்' திரைப்படத்தில் 'சரியாகப் பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறும் சட்டம் கொண்டுவர வேண்டும்' என்பதுதான் மையம். இப்படி மலையாளத்தில் பல விதமான அரசியல் படங்கள் வெளியாகின்றன. ஒரே விசயம் கொண்டாடப்படுவதும் கிண்டல் செய்யப்படுவதும் அங்கு சாதாரணமாக நிகழ்கின்றன. அதற்கான வெளி அங்கு இருப்பது நேர்மறையான விஷயம். பேசாப் பொருள்கள் அனைத்தும் பேசப்படவேண்டும் என்பது முக்கியம், அது தவறாகப் பேசப்பட்டுவிடக் கூடாது என்பதும் மிக முக்கியம்.  

 

                                                                     
 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.