Skip to main content

“உன் கடவுளையும் விடமாட்டேன்!” - காலா பேசும் ‘சுத்த’ அரசியல்!

Published on 08/06/2018 | Edited on 08/06/2018

காலாவை ரஜினி நடித்த படமாகவோ, வெறும் சினிமாவாகவோ பார்க்காமல், கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களை (வசனம்) மட்டுமே கவனித்தால், மெய்யாலுமே சிலிர்க்கிறது.

 

black rajini



தாராவி மக்களுக்காகப் போராடி உயிரை விட்டவர் வேங்கையன். தந்தை வழியிலேயே, அம்மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, தாதா பட்டத்தையும் சுமந்து வாழ்கிறார் காலா. தன் மகனுக்குப் புரட்சியாளர் லெனின் பெயரைச் சூட்டிய அவர், அவன் வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிலையில்,  கருத்து முரண்பாடு ஏற்பட்டு,  “வெளிய போ” என்று சொல்லும் இடத்தில், ‘சுடும் நிஜம்’ பேசுகிறார். மகனும் விவாதிக்கிறான். 

“பணக்காரனுக்கு ஏழைகள் மேல என்னைக்குலே அக்கறை வந்திருக்கு?”

“சுயநலம் பார்க்காம எவன் ஹெல்ப் பண்ண வருவான்? ஒருத்தனை காமிங்க பார்ப்போம்.”

“இதுக்குத்தான் சொன்னேன். ஒரு மண்ணும் செஞ்சு கிழிக்க வேணாம்னு. மண்ணைப் புரிஞ்சிக்காம, மக்களோட மனச புரிஞ்சிக்காம, ரெண்டு புஸ்தகத்த மட்டும் படிச்சிட்டு, மாற்றம் புரட்சின்னு லோலோன்னு திரியுறது. அடிப்படையைத் தெரிஞ்சிக்கணும்” என்று ஆதங்கத்தைக் கொட்டுகிறார். 

 

white nana patekar



வர்க்க பேதத்தை, மனிதத்தோல் நிறத்தின் வாயிலாக, வில்லன் ஹரிதாதாவையும், ஹீரோ காலாவையும் வார்த்தைகளால் உரசவிட்டு, காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

“காலா.. சொல்லும்போதே வாயெல்லாம் கூசுது. இந்தக் கருப்புக் கலர் இருக்கே. பார்க்கவே அசிங்கமா இருக்கு. உறுத்துது என் கண்ணு.”

 

 


“வெள்ளை தூய்மை.. கருப்பு அழுக்கு.. கண்ணு உறுத்துதுல்ல.. எவ்வளவு கேவலமான யோசனை? உன் பார்வையில்தான் கோளாறு இருக்கு. கருப்பு உழைப்போட வண்ணம். தாராவியில வந்து பாரு. அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும். சுத்தம்.. க்ளீன்.. ப்யூர்.. இதெல்லாம் உன் முகமூடி. என்ன வேணும் உனக்கு? நிலமா? நிலம் இன்னைக்கு ஒருத்தன் பேர்ல இருக்கும். நாளைக்கு இன்னொருத்தன் பேர்ல மாறும். செத்தா, ஆறடிகூட நிரந்தரம் கிடையாது. ஏன் இப்படி வெறி பிடிச்சு திரியிற? நிலம் உனக்கு அதிகாரம். நிலம் எங்களுக்கு வாழ்க்கை.”

“புதுசா ஏதாவது சொல்லு. அதிகாரம் மட்டும்தான் என்னோட வாழ்க்கை”

“என்னோட நிலத்தை பறிக்கிறதுதான் உன்னோட தர்மம். உன் கடவுளோட தர்மம்னா, உன் கடவுளையும்கூட விடமாட்டேன்.”

போராட்டம் உச்சத்தில் இருக்கும் காட்சி ஒன்றில், கரும்பலகையில் காணப்படும் எழுத்துக்கள் மூலம்,  காலாவுக்காக திருவள்ளுவரும் 'குறள்' கொடுத்திருக்கிறார். 

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை 

பொருள்: 

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர்,
ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். 

சத்தியமாகச் சொல்ல முடியும்! காலாவில் ஆன்மிக அரசியல் துளியும் இல்லை! 
 

 

 

 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.