Skip to main content

பதவிக்காக ஜெ பிணத்தில் அரசியல்!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

"என்னத்த விசாரிக்கிறாங்களோ' என மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் திடீரென மிகவும் சீரியஸான விசாரணையில் இறங்கியுள்ளது.

அடுத்த மாதம் 24-ம் தேதியோடு தனது விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில்தான் விசாரணையில் புதிய வேகம் தெரிகிறது. அடுத்த கட்ட சாட்சியங்களாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவை விசாரிக்க திட்டமிட்டுள்ளது என்கிறது ஆணைய வட்டாரம்.

 

jayadeath

jayadeath


அவர் மட்டுமல்ல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே இவர்களுடன் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சாட்சியமளிக்க சம்மன் அனுப்பி விசாரிக்கப் போவதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆணையம் மிகவும் சீரியஸான விசாரணைக் கட்டத்திற்கு சென்றிருப்பதை அப்பல்லோ மருத்துவமனையை ஆணையம் டீல் செய்ததிலிருந்து தெளிவாகிறது. முதலில், ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ அளித்த மருத்துவக் குறிப்புகளை படிக்க முடியாமல் ஆணையம் திணறியது. அதற்காக ஒரு மருத்துவக் குழுவை தாருங்கள் என ஆணையம் தமிழக அரசை கேட்டது. அதை அரசு சட்டை செய்யவில்லை. ஏனோதானோவென ஒரு மருத்துவக் குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவின் உதவியுடன் மருத்துவக் குறிப்புகளை படித்த ஆணையம் அதன்பிறகு திரும்பிப் பார்க்கவில்லை.

judgearumugamஅப்பல்லோவில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை சம்மன் அனுப்பி அழைத்து சாட்சி சொல்ல வைத்தது. டாக்டர்கள், நர்ஸ்கள், ஆயாக்கள் என ஜெ.வின் சிகிச்சையுடன் தொடர்புடைய அனைவரும் ஆணையத்திற்கு வந்தார்கள். அவர்கள் அளித்த சாட்சியங்களுக்கும் மருத்துவக் குறிப்புகளுக்கும் உள்ள முரண்பாடுகளை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் கேள்விக்குறியாக்கினர். அப்பல்லோ டாக்டர்களை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியும் குறுக்கு விசாரணை செய்தார். அந்த குறுக்கு விசாரணையில் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு காவேரி நதிநீர் விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார் என்பதை அவர் பதிவு செய்தார்.

அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமல்ல அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் வந்து பார்த்தார்கள். ஜெ. இறந்ததாக சொல்லப்படும் டிசம்பர் 5-ம் தேதிக்கு முன்பு 3-ம் தேதிவரை அவர் நல்ல உடல்நிலையில் இருந்தார் என எய்ம்ஸ் டாக்டர்களை வைத்து பதிவு செய்தார். ஆனால் "நாங்கள் அப்பல்லோ மருத்துவர்கள் சொன்ன தகவல்கள் அடிப்படையில்தான் சொன்னோம்' என பல்டி சாட்சியானார்கள்.

"ஜெ.வின் உடல்நிலையைப்பற்றி ஓ.பி.எஸ்., தம்பிதுரை ஆகியோரிடம் நாங்கள் விளக்கினோம்' என அப்பல்லோ டாக்டர்கள் சொன்னதை பதிவு செய்த ராஜா செந்தூர் பாண்டி தொடர்ந்து ஓ.பி.எஸ்.சை சாட்சியாக கொண்டுவர வாதிட்டார். அவரது வாதத்தை விசாரணை கமிஷன் ஏற்றுக் கொண்டது என நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறது ஆணைய வட்டாரம்.

அப்பல்லோவின் டாக்டர்களும் நர்ஸ்களும் அளித்த சாட்சியத்தில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான முரண்பாடுகளை கமிஷன் சீரியஸாக எடுத்துக் கொண்டது. ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற அறையை நேரில் சென்று பார்வையிட்டது. ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போது ஜூஸ் குடிக்கும் வீடியோ ஒன்றை வெற்றிவேல் வெளியிட்டார். அந்த வீடியோவில் இடம் பெற்ற அறையை கமிஷன் போய் பார்த்தபோது முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையை மட்டும் ஏன் மாற்றி அமைத்தீர்கள்' என அப்பல்லோவின் பொறியாளரை கேட்டதற்கு அவர், ஆணையத்திற்கு உரிய பதிலை தரவில்லை. அவரை எச்சரித்து அனுப்பினார் நீதிபதி ஆறுமுகசாமி. அடுத்ததாக அப்பல்லோவின் உரிமையாளர் பிரதாப் சி ரெட்டிக்கு சம்மன் அனுப்பினார். அவர் வரவில்லை. அவரது வழக்கறிஞர்கள்தான் வந்தார்கள்.

"அப்பல்லோ என்ன வானத்திலிருந்து குதித்த நிறுவனமா? ஜெ.வுக்கு சிகிச்சை அளித்ததற்கு பணம் பெற்றுக் கொண்டுதானே சிகிச்சை அளித்தீர்கள். அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதும் அவர் தொடர் சிகிச்சையில் அறைகள் மாற்றப்படும்போதும் ஸ்கேன் எடுக்க கொண்டு செல்லப்படும்போதும் எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள் எங்கே?' என கேட்டனர். அதற்குப் பதிலளித்த அப்பல்லோ நிர்வாகம், "ஜெ. சிகிச்சை பெறும்போது சி.சி.டி.வி. இயங்கவில்லை' என்றனர். ஜெ. "சிகிச்சையின் போது சி.சி.டி.வி. பதிவுகளை நிறுத்த அப்பல்லோ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது யார்' என ஆணையம் கேள்வி எழுப்பியது. அதுவரை ஆணையத்திற்கு ஒத்துழைக்காமல் நீக்கு போக்கு காட்டிய அப்பல்லோ அதன்பிறகு ஆணையத்திடம் சரணாகதி அடைந்தது. "எங்களிடம் ஜெ.வின் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளன. அதை ஆணையத்திடம் சமர்ப்பிக்கிறோம்' என்றது. "அதை உடனே கொடுங்கள்' என ஆணையம் சீரியஸாக உத்தரவிட்டுள்ளது.

"ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்பல்லோ தவறுகள் செய்திருந்தால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்கிறார் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி. அதேபோல், கவர்னர் வித்யாசாகர் ராவின் சிறப்பு செயலாளரான ரமேஷ் சந்த் மீனாவை சாட்சியத்திற்கு அழைத்த கமிஷனிடம் "கவர்னர் இரண்டுமுறை பார்த்தார், ஒருமுறை ஜெ. சீரியஸாக இருந்தார்'. இரண்டாவது முறை பிசியோதெரபி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெ., கவர்னரை பார்த்து கையசைத்ததாக கவர்னர் கூறினார்' என்றார். "இரண்டு முறை ஜெ.வை பார்த்த கவர்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஜெ.வை ஏன் பார்க்கவில்லை? கவர்னர் பார்க்கும்போது மிகவும் சீரியஸாக இருந்த ஜெ.வை தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெளிநாட்டு சிகிச்சைக்கு ஏன் கொண்டு செல்லவில்லை' என ஆணைய வழக்கறிஞர்கள் கிடுக்கிப்பிடி போட்டிருக்கின்றனர் என்கிறது ஆணைய வட்டாரம்.

இந்நிலையில், டிசம்பர் 5 நள்ளிரவு வாக்கில் ஜெ. மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று மாலையே புதிய முதல்வரும், அமைச்சர்களும் பதவியேற்க, ராஜ்பவனில் எல்லா வேலைகளும் நடந்துள்ளன. 5-ந்தேதி மாலையே அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கொடி இறக்கப்பட்டதும், மீடியாக்களில் ஜெ. மரணம் என ப்ளாஷ் நியூஸ் வெளியாகி, பின்னர் மாற்றப்பட்டாலும், ராஜ்பவனில் நடந்த ஏற்பாடுகளின் அடிப்படையில்தான் அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் தலைவி எப்படியாவது தேறி வந்துவிட மாட்டாரா என பரிதவித்திருந்த நேரத்தில் பதவிக்காக பிண அரசியல் நடத்தியுள்ளனர் அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையும்.

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.