Skip to main content

நடிகர்களாக மாறும் அரசியல்வாதிகள்! - 'TEA KADAI' அரசியல் எடுபடுமா?

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

ddd

 

இந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் டீக்கடை அரசியல் பிரதான இடத்தைப் பிடித்து வருகிறது. எடப்பாடி தனது பிரச்சாரத்தின் போது திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் உட்கார்ந்து, டீ குடித்து மக்களைக் கவரும் முயற்சியில் இறங்கினார். ஏற்கனவே அடுத்த ஆட்சி நாங்களே என்று பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலின், டீக்கடைகளுக்குச் சென்று டீ குடிப்பதும், ஏழை குழந்தையைக் கொஞ்சித் தூக்கி முத்தமிடுவதுமாக அதிரடி கிளப்பிவருகிறார். இவர்கள் மட்டுமல்லாது, தி.மு.க., அ.தி.மு.க.வில் இருக்கும் முன்னாள் இந்நாள் அமைச்சர்களும் தேர்தல் நெருங்க நெருங்க, திடீர் திடீரென டீக்கடை அரசியலைக் கையில் எடுத்து, லோக்கல் அரசியல் புள்ளிகளோடு தெருத்தெருவாக வலம் வரத்தொடங்கிவிட்டார்கள்.

 

இது குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று அவர்களின் மன நிலையை அறிய முயன்றோம். அப்போது....

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள எம். குன்னத்தூர் டீக்கடை ஒன்றில் நாம் சந்தித்த அஜித்குமார், "வழக்கமா கார் கண்ணாடியை உயர்த்திக்கொண்டு போகிறவர்கள் இப்போது டீ கடைக்கு வந்து உட்காருவது என்பது ஓட்டுக்களைப் பெறுவதற்காகத்தான். தேர்தல் முடிந்த பிறகு இவர்கள் பதவிக்கு வந்து விட்டால் அவர்களை சந்திப்பது மிகவும் கடினம்'' என்கிறார் புன்னகையோடு.

 

இன்னொரு கடையில் நாம் சந்தித்த சங்கரோ, "இந்த தேர்தல் கால மேஜிக்கை எல்லாம் நாங்க வேடிக்கை பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். இதெல்லாம் சும்மா டிராமா'' என்றபடி சிரிக்கிறார்.

 

டீக்கடைக்காரரான முருகன் நம்மிடம், "தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் டீக்கடையை நோக்கி வருவாங்க. நலம் விசாரிப்பாங்க. கை கொடுப்பாங்க. தோளில் கை போடுவாங்க. இதையெல்லாம் பார்க்கும் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்கள், முகம் மலர்ந்து பூரித்துப் போவோம். அந்த மயக்கத்தில் அவர்களுக்கு ஓட்டும் போடுவோம். அவர்கள் பதவிக்கு வந்த பிறகு பொது நலப் பிரச்சனைகளுக்காக தேடிப்போனாக் கூட வீட்டில் இருந்துகொண்டே இல்லைன்னு சொல்லச் சொல்வாங்க. என்ன பண்றது. தெரிஞ்சேதான் ஏமாறுறோம்'' என்கிறார் சிந்தனையோடு.

 

ஓய்வுபெற்ற ஆசிரியர் காசிராஜன் நம்மிடம், "காலங்காலமாக ஓட்டு கேட்டு வரும்போது கும்பிடு போடுவதோடு, மக்கள் காலில் விழுந்தும் அரசியல்வாதிகள் ஓட்டுகேட்கறாங்க. வெற்றி பெற்ற பிறகு, அதே மக்களைக் கேவலமாப் பார்க்கறாங்க. அதே நேரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்களுக்கே ஏகப்பட்ட பணிச்சுமை இருக்கும் போது, அதைவிட எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்குமேன்னு நம்மையே நாம் சமாதானப்படுத்திக்க வேண்டியிருக்கு. ஆனால் இவங்க எல்லாம், மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டால் அதுவே போதும்'' என்கிறார் நிதானமாக.

 

"பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாதாரணமான நாட்களில் டீக்கடை ஃபார்முலாவை செய்து காட்டினால்தான் எங்களைப் போன்ற சாதாரண மக்கள் அவங்களை நம்புவார்கள். வெற்றிபெற்ற பிறகோ அல்லது தோல்வி அடைந்த பிறகோ மக்களைத் தேடி டீ கடைகளுக்கு அடிக்கடி அவங்க வந்தால்... மக்களின் நம்பிக்கையைப் பெறமுடி யும்'' இது சங்கரின் தீர்க்கமான கருத்து.

 

cnc

 

சட்டப் பஞ்சாயத்து இயக்க பிரமுகர் ராமநத்தம் கோவிந்தசாமியையும் நாம் சந்தித்தோம். அவர் நம்மிடம், "காய்கறிகள் மளிகைச் சாமான்கள் எல்லாம் தினசரி விலை ஏறிக்கொண்டே போகுது. அதைக் கட்டுப்படுத்தவோ குறைக்கவோ ஆட்சியாளர்களும் நினைக்கலை. ஆளத் துடிக்கும் அரசியல்வாதிகளும் அதைக் கண்டிக்கத் துடிக்கலை. விவசாயிகளைக் காப்பாற்ற யாரும் முன்வரலை. ஆனால் இப்ப இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோருமே சினிமா நடிகர்களைப் போல் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. தங்களோட கட்சி முன்னோடிகளைக் கூட மேடை ஏத்தறது இல்லை. ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காகக் கோடி கோடியாக பணத்தை வாரி இறைக்குது. கொரோனாவால் வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு சிலரைத் தவிர மத்தவங்களால உதவ முடியலை'' என்றார் காட்டமாகவே.

 

பெயர் சொல்ல விரும்பாத அந்த இளைஞர் "12-ஆம் தேதி ஸ்டாலினின் பிரச்சாரக் கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிராமப்புறங்களில் இருந்து டாட்டா ஏ.சி வாகனங்கள் மூலம் மக்களை கொண்டு வந்து குவிச்சாங்க. அப்படி வாகனங்களில் வந்த பெண்கள் தங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கலைன்னும் வேலையை விட்டுவிட்டு வந்த தங்களுக்கு பணமும் தரலைன்னும் பகிரங்கமாக குற்றம் சாட்டினாங்க. அதெல்லாம் சமூக ஊடகங்கள்ல வீடியோ காட்சிகளா பரவிக்கிட்டு இருக்கு. இந்த நிலவரம் அந்தக் கட்சியின் தலைமையோட கவனத்துக்குப் போனதாகத் தெரியலை'’என்கிறார்.

 

தேர்தல் நேரத்தில் நடிகர்களாக மாறும் அரசியல்வாதிகளை மக்கள் இனம் கண்டு வைத்திருக்கிறார்கள் என்பதைப் பரவலாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

 

 

 

Next Story

கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Sarathkumar merged the party into the BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, பாமக திடீரென பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேநேரம் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

'அன்று அமலாக்கத்துறை; இன்று என்சிபி; பாஜக அரசியல் எடுபடாது'- அமைச்சர் ரகுபதி பேட்டி 

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
'BJP has abandoned the anti-narcotics unit' - Minister Raghupathi interview

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி, ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திரைப்படங்களை எடுப்பதில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை இறக்கி விட்ட பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவி விட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவியேற்றது முதல் தற்பொழுது வரை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடிவடையும் முன்பே டெல்லியில் என்சிபி அதிகாரி ஒருவர் பேட்டியளிக்கிறார்.

என்சிபி அதிகாரியின் பேட்டியை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. ஒன்றிய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் பாஜகவை எப்படியாவது தாங்கி பிடிக்கலாம் என நினைக்கின்றன. ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளியாக பிப்ரவரி 16ஆம் தேதி அறிவித்த என்சிபி, 21ஆம் தேதி திரைப்பட விழாவில் பங்கேற்றபோது கைது செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் திமுகவிற்கு களங்கம் கற்பிக்க முயற்சி நடைபெறுகிறது.

ஜாபர் சாதிக் மீது 2013ஆம் ஆண்டே  அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்பொழுது பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஜாபர் சாதிக்கிற்காக ஆஜராகி உள்ளார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் இடம் டெல்லி தானே தவிர தமிழ்நாடு அல்ல. திமுக அரசுக்கு எதிராக பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்கவே போதைப்பொருள் மாநிலம் போல் சித்தரிக்க பாஜக முயற்சிக்கிறது.

நாட்டிலேயே அதிகமாக போதைப்பொருள் கடத்துவது பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தான். ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதைப்பொருள் தொடர்பாக புகார் எழுந்த உடனேயே ஜாபர் சாதிக்கை உடனடியாக திமுகவிலிருந்து நீக்கி விட்டோம். பாஜக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது''என்றார்.