Skip to main content

அரசியல் சட்டமும் அம்பேத்கரும்!

Published on 14/04/2020 | Edited on 14/04/2020


சுதந்திர இந்தியாவுக்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டியிருந்தது. அம்பேத்கரை இந்தியாவின் சட்ட அமைச்சராக நேரு நியமித்தார். காந்தியும் இதற்கு சம்மதித்தார்.

அம்பேத்கர் இதற்கு ஒப்புதல் அளித்து, பதவி ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. முன்பு அவரை இகழ்ந்தவர்களும் இப்போது புகழ்ந்தார்கள். அமைச்சர் என்ற பொறுப்பு அவரை ஒரே நாளில் உயர்ந்த மனிதராக மாற்றியது.

இரவு பகல் பாராமல் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் வேலையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.

 

Political law and Ambedkar!



தனது பிறப்பு காரணமாக எத்தனையோ இன்னல்களையும் அவமானங்களையும் சந்தித்தவர் அம்பேத்கர். தனது மக்களுக்கு தகுந்த சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் கவனமாக இருந்தார்.

தீண்டாமை ஒழிக்கும் 17 ஆவது பிரிவு,கொத்தடிமையாக நடத்தப்படுவதைத் தடுக்கும் 23 ஆவது பிரிவு, மத்திய அரசு, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளுக்கும் தேர்வு செய்வதில் ஒதுக்கீடு வழங்கும் 235 ஆவது பிரிவு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் சபையில் பிரதிநிதித்துவம் வழங்க இட ஒதுக்கீடு செய்யும் 330 ஆவது பிரிவு, இதேபோல் மாநில சட்டமன்றங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 332 ஆவது பிரிவு. தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும், அவர்களை சமூக அநீதி மற்றும் எல்லா வகையான சுரண்டல்களில் இருந்தும் பாதுகாக்க அறிவுறுத்தும் 46 ஆவது பிரிவு.

இப்படி பல பிரிவுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உத்தரவாதம் ஏற்படுத்தினார் அம்பேத்கர். ஆனாலும் அவர் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதவை...

“உரிமைகள் என்பவை சட்டத்தினால் காப்பாற்றப்படுவதில்லை. சமூகத்தின் சமூக உணர்வு மற்றும் நெறி உணர்வு ஆகியவற்றால்தான் பாதுகாக்கப்படுகின்றன”
 

புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கி அரசியல் நிரணய சபையிடம் ஒப்படைத்தார் அம்பேத்கர்.

 

Political law and Ambedkar!


 

http://onelink.to/nknapp


இந்தப் பணியில் ஒய்வு இல்லாமல் உழைத்ததால் அவர் சுகவீனமடைந்தார். எனவே, சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் பம்பாய் வந்தார் அம்பேத்கர்.

வயதாகிவரும் நிலையில் தன்னைக் கவனித்துக் கொள்ள வாழ்க்கைத் துணை வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார்.

அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மனையில் பணியாற்றிய டாக்டர் சாரதா கபீர் என்பவர் அம்பேத்கரை நன்றாக கவனித்து வந்தார். மிகுந்த பரிவுடன் இருந்தார். அவரையே திருமணம செய்துகொள்ள அம்பேத்கர் முடிவு செய்தார். சாரதாவும் அவரை மணக்க சம்மதித்தார்.

பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த சாரதாவுக்கும் அம்பேத்கருக்கும் டில்லியில் உள்ள அவருடைய வீட்டில் பதிவு திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கு சில நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

ஆறு மாதங்கள் மக்கள் கருத்தறிந்த பிறகு நகல் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.
 

 

Political law and Ambedkar!



315 சரத்துக்களையும், 8 படிமங்களையும் கொண்ட புதிய அரசியல் சட்டத்தை 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்து அம்பேத்கர் பேசினார். இதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அப்போது பலத்த கரவொலி எழுந்தது. அம்பேத்கரை எல்லோரும் பாராட்டினார்கள். அப்போது, இந்த நகலைத் தயாரிக்கும்போது மேலாதிக்க சாதியினரின் தலையீடுகள் அதிகமாக இருந்ததை அவர் வெளிப்படுத்தினார்.

நவம்பர் 26 ஆம் தேதி இந்திய மக்களின் பெயரால் இந்த அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இதையடுத்து இன்னொரு முக்கியமான பிரச்சினையில் அம்பேத்கர் தனது கவனத்தைத் திருப்பினார். அதுதான் இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து உரிமை வழங்க வகை செய்யும் மசோதா.

இது 1941 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, 1946 ஆம் ஆண்டு வாக்கில் தயாரிக்கப்பட்ட மசோதா. ஆனால், அதை நிறைவேற்ற விடாமல் ஆதிக்கச் சக்திகள் தடுத்து நிறுத்தியிருந்தன. அதை அம்பேத்கர் தன் கையில் எடுத்தார். அதற்கு உயிர்கொடுக்க விரும்பினார். ஆனால், அதை முதல் பொதுத் தேர்தல் முடிந்த பிறகுதான் எடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தினார்கள்.

பெண்களுக்கு உரிமைகள் கொடுப்பதை அப்போதும் சரி இப்போதும் சரி ஆதிக்க சக்திகள் கடுமையாக எதிர்த்தே வருகின்றன.
இன்றைய நிலையிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள்  இப்படியென்றால், அன்றைய நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

நேரு ஒப்புதல் அளித்ததால் அந்த மசோதாவை மிகக் கவனமாக சீர்திருத்தினார். ஆனால், அதை அறிமுகப்படுத்துவதற்கு வல்லபாய் படேல் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தால் இந்துச் சமூகம் உடைந்து சிதறி விடும் என்று அவர் கூறினார். இருந்தாலும் 1951 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இந்துச் சட்டம் குறித்த மசோதாவை அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருந்த பெண்கள் இந்தச் சட்டத்தை பாராட்டினார்கள். பெண்களுக்கு பிடித்திருந்தாலே ஆண்களுக்கு பிடிக்காமல் தானே போகும்.

 

Political law and Ambedkar!



கடைசிவரை அந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டனர். அம்பேத்கர் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.

“அழுவாரின்றி அழுங்குரல் ஓசையின்றி கொன்று புதைக்கப்பட்டு விட்டது” என்று கூறினார் அம்பேத்கர்.
 

இந்த ஏமாற்றத்தைத் தொடர்ந்து இனியும் சட்ட அமைச்சராக நீடிப்பது பயனற்றது என்று அம்பேத்கர் நினைத்தார். தனது பதவி விலகல் கடிதத்தை நேருவுக்கு அனுப்பினார்.

அம்பேத்கரின் கடினமான உழைப்பை நேரு பாராட்டினார். ஆனால், அம்பேத்கரின் உழைப்பும் தனது விருப்பமும் நிறைவேறாமல் போனதில் அவருக்கு வருத்தம் இருந்தது.

1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கின. அம்பேத்கரின் அமைப்பு சோஷலிஸ்ட் கட்சியுடன் மட்டும் உடன்பாடு செய்து கொண்டு காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டது.

மத்திய பம்பாய் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அம்பேத்கர் போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளரிடம் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மார்ச் மாதத்தின நடுவில் மாநிலங்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பம்பாய் மாநில சட்டமன்றத்தில் இருந்து 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. இந்தத் தேர்தலில் அம்பேத்கரும் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
 

 

அவருக்கு பலர் கொடுத்த ஆதரவு காரணமாக வெற்றி பெற்று மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

http://onelink.to/nknapp


ஜூன் மாதம் அவருக்கு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அதை நேரில் சென்று பெற்றுக் கொண்டார். மாநிலங்களவையில் நேரு தலைமையிலான அரசாங்கத்தின் பல கொள்கைகளை அம்பேத்கர் கடுமையாக சாடினார்.

மொழிவழி மாநிலங்களை உருவாக்குவதில் நேரு அரசாங்கம் ஊசலாட்ட போக்கை கடைப்பிடித்தது. அதை அம்பேத்கர் வன்மையாக கண்டித்தார். ஆந்திர மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக பொட்டி ஸ்ரீராமுலு உயிர்த்தியாகம் செய்தார். அதன்பிறகு 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் உருவாக்குவதற்காக மசோதா தாக்கலானது. அதன்மீது நடைபெற்ற விவாதத்தில் அம்பேத்கர் பேசினார்...

 

 

Political law and Ambedkar!



“நீங்கள்தானே அரசியல் சட்டத்தை உருவாக்கினீர்கள் என்று எதற்கெடுத்தாலும் என்னை கேட்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் ஒரு சவாரிக் குதிரையாக இருந்தேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டேனோ அதைத்தான் செய்தேன். எனக்கு விருப்பம் இல்லாததையும் நான் செய்ய வேண்டியிருந்தது.”

“உங்களுடைய களங்கங்களுக்கு எல்லாம் என்னை குற்றம் சாட்ட விரும்புகிறீர்கள். நான் அரசியல் சட்டத்தை எழுதியதாக கூறுகிறீர்கள். ஆனால், தவறாக பயன்படுத்தப்பட்டால் அந்த அரசியல் சட்டத்தை எரிக்கும் முதல் நபராக நான்தான் இருப்பேன்”

அம்பேத்கரின் ஆவேசமான உரை அரசியல் சட்டத் தயாரிப்பு தொடர்பான பல ரகசியங்களை வெளிப்படுத்தியது. உண்மையில் அவரை உயர்ஜாதியினர் தங்களுடைய கருவியாகவே பயன்படுத்தி இருந்தார்கள்.


அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவை முதன் முறையாக நேரு அரசாங்கம் பயன்படுத்தியது. அந்த நடவடிக்கையை அம்பேத்கர் கடுமையாக கண்டித்தார்.

அதுபோலவே, சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாத ராஜாஜியை முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்ததை எதிர்த்தார். பம்பாயில் தோல்வியடைந்த மொரார்ஜி தேசாயை முதல்வராக தேர்ந்தெடுத்ததையும் கண்டித்தார். இரண்டு நடவடிக்கைகளும் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.

 

 

 

 

Next Story

சமையலரின் மகளை அழைக்கும் அமெரிக்க பல்கலை. நெகிழ்ந்த தலைமை நீதிபதி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The chef's daughter who won the Chief Justice's praise for studying law abroad

டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனில் சமையல் செய்யும் ஊழியர் அஜய்குமார் சமல். இவரின் மகள் பிரக்யா (25). சட்டப்படிப்பு படித்த பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள இரண்டு முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள பிரபலமான கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்திருக்கிறது. அதனையொட்டி, சட்டமேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரக்யாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திசூட் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் நேரில் வரவழைத்து பாராட்டினர். மேலும், பிரக்யாவுக்கும், அவரது குடும்பத்துக்கும், தலைமை நீதிபதி சந்திரசூட் சால்வை அணிவித்து கவுரவித்தார். 

இதனையடுத்து, அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தகங்களை பிரக்யாவுக்கு வழங்கினார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “பிரக்யா தனது சொந்த உழைப்பால் இதனை சாதித்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும், அவருக்கு தேவைப்படும் அனைத்தையும் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர் படிப்பை முடித்து மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் எதைச் செய்தாலும், சிறந்து விளங்குவார். மேலும், 1.4 பில்லியன் மக்களின் கனவுகளை மிக எளிதாகத் தன் தோளில் சுமந்து செல்வார்” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரக்யா, “எனது தந்தைக்கு  மகளாக இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியம் என்று நினைக்கிறேன். எனது பள்ளி நாட்களில் இருந்தே அவர் எனக்கு உதவியுள்ளார். மேலும் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை அவர் எப்போதும் பெறுவதை உறுதி செய்தார். நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு மூலம், தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுவதை அனைவரும் பார்க்கலாம். அவர் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிப்பார். அவருடைய வார்த்தைகள் விலை மதிப்பற்றவை. அவர் தான் எனக்கு ரோல் மாடல்” என்று தெரிவித்தார். 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள் எப்போது அமல்? - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Notification issued by Central Govt for When will the new criminal laws come into force?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். அதன் பின்னர், அவை நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. 

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில், தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.