Skip to main content

என்கவுண்டர் பின்னணி...மணிகண்டன் குறிவைத்த அந்த வி.ஐ.பி...அதிர்ச்சி தகவல்!

Published on 01/10/2019 | Edited on 03/10/2019

சென்னையில் ஜூன் 15-ந் தேதி ரவுடி வல்லரசுவை என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். அது நடந்து சரியாக 101-வது நாளில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டிருக்கிறது. விழுப்புரத்தில் வீழ்த்த முடியாத தாதாவாக இருந்த மணிகண்டனுக்குதான் தோட்டா மூலம் முடிவுரை எழுதியிருக்கிறார்கள் தனிப்படை போலீசார். 


யார் இந்த ரவுடி? 

விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை, பெண்களை வைத்து பாலியல் தொழில், கூலிக்கு கொலை என சகலத்திலும் கொடிகட்டிப் பறந்தவர். இவருக்கு போட்டியாக பூபாலன் என்பவரும் களத்தில் இறங்க, 2 தரப்பிலும் பல தலைகள் விழுந்தன. விழுப்புரம் எஸ்.பி.யாக இருந்த நல்லசிவம், பெரியய்யா, அமல்ராஜ் ஆகியோர் இருதரப்பையும் எச்சரித்தாலும் சட்டவிரோத செயல்களும் தொடர்ந்தன. இதனால், மணிகண்டன் மீது ஆரோவில், மயிலம், கோட்டக்குப்பம், செஞ்சி, திருவண்ணாமலை என பல்வேறு காவல்நிலையங்களில் 8 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் பதிவாகின.

 

 

incident



2010-ஆம் ஆண்டு மணிகண்டனின் தம்பி ஆறுமுகத்தை பூபாலன் தரப்பு கூலிப்படையை ஏவி கொலைசெய்தது. இதன் பிறகும் மணிகண்டனின் குற்றச் செயல்கள் அதிகரித்தன. இதனால், 'என்கவுன்ட்டர்' லிஸ்ட்டில் அப்போதே மணிகண்டனின் பெயர் சேர்க்கப்பட்டது. உயிருக்குப் பயந்து திருந்தி வாழப்போவதாக 2015-ல் அப்போதைய எஸ்.பி. அமல்ராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார் மணிகண்டன். "நான் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால், என் பெயரைச் சொல்லி சிலர் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். பூபாலன் குரூப் ஆரோவில்லில் பெண்களை வைத்து தொழில் செய்கிறது. அவர்கள் என் பெயரை பயன்படுத்துவதால், போலீஸார் என்மீது வழக்கு போட்டுள்ளனர். ஆகவே எஸ்.பி. ஐயாவை பார்த்து மனம்திருந்தி வாழப்போவதாக மனு கொடுத்துள்ளேன்' என மீடியாக்களிடமும் தெரிவித்தார் மணிகண்டன். 

மீண்டும் சட்டவிரோத செயல்? 

"பாடின வாயும், ஆடின காலும் சும்மா இருக்காது' என்பதைப்போல், கொஞ்சநாள் ஒதுங்கியே இருந்த தாதா மணிகண்டன், மீண்டும் கோதாவில் இறங்கினார். புதுச்சேரியில் கடந்த ஆண்டு 2018-ல் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கொலை, ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் போலீஸார் தேடிவந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்புதான் சென்னை வந்து மணிகண்டன் தனது மனைவி பியூலா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதையறிந்து 24-ந் தேதி விழுப்புரத்தில் இருந்துவந்த தனிப்படை போலீஸார், மணிகண்டன் தங்கியிருந்த நான்கு மாடி குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளனர். கீழ்த்தள வீட்டிலிருந்த மணிகண்டன் போலீசாரைக் கண்டதும், தான் வைத்திருந்த பட்டாக்கத்தியை வீச, அது உதவி ஆய்வாளர் பிரபுவின் தலையில் பாய்ந்திருக்கிறது. தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் பிரகாஷ் மணிகண்டனை நோக்கி தனது கைத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். மூன்றுமுறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டிருக்கிறது. அந்த இடத்திலேயே மணிகண்டனின் உயிர் பிரிந்திருக்கிறது.


இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து உளவுத்துறை தரப்பில் விசாரித்தபோது, “என்கவுன்ட்டர் நடந்தது மாலை 6:15 மணிக்கு. தகவல் 7:00 மணிக்கு மேல்தான் வெளியில் கசிந்தது. விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் சென்னையில் இரவு 10:00 மணிக்குமேல் பேட்டி தருகிறார் என்றால், சம்பவத்திற்கு முன்பே அவர் சென்னையில் இருந்திருக்கவேண்டும். அதே போல், மேற்கு ஜே.சி. விஜயகுமாரி, அம்பத்தூர் டி.சி. ஈஸ் வரன், ஏ.டி.சி. தினகரன், சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த்முரளி என முக்கியமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவரும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த இளம் வி.ஐ.பி. ஒருவரை காவுவாங்க மணிகண்டன் சுற்றி வந்ததை அறிந்துதான், இந்த என்கவுன்ட்டர் திட்டமிட்டு அரங்கேறியிருக்கிறது''’என்று பகீர் கிளப்புகிறார்கள். அடுத்ததாக, தென் மாவட்டத்தில் நிச்சயம் என்கவுன்ட்டர் சத்தம்கேட்கும் என்ற தகவலும் வருகிறது.

 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.