Skip to main content

என்னையும் வழக்குல சேர்த்துட்டாங்களா? வீடியோவில் போலீஸ் அதிகாரி...  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

"ஹலோ நக்கீரனா? பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மறைக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்...' என, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நமது லைனில் வர, அவரைச் சந்தித்தோம்.

"அத்தனையும் உண்மை' என தன் நெஞ்சில் கைவைத்து அந்த அதிகாரி சொன்னாலும் கூட, அவை அப்படியே எழுதிவிட முடியாத ரகத்தைச் சேர்ந்தது. அதே நேரத்தில், தவிர்க்க முடியாதது என்பதால், குறிப்பாகத் தந்திருக்கிறோம்.

 

incident



"பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் செல்போன்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தது உண்மைதான்! அவற்றை ஆராய்ந்த கோவை மாவட்ட அதிகாரிகளான ‘"ராஜன்'’ ஆனவரும், ‘"ராமன்'’ ஆனவரும் ஆனந்தக் கூத்தாடினார்கள். அந்த அளவுக்கு அந்த வீடியோக்களில் மிக முக்கிய அரசியல்வாதிகள், பெரும் செல்வந்தர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலரும் பெண்களுடன் நெருக்கமாக இருந்தது பதிவாகியிருந்தது. குறிப்பாக, "நாதன்'’ஆன அந்த அதிகாரி, பல வீடியோக்களில் காணப்பட்டார்.

சக அதிகாரி என்றாலும், "இந்த வீடியோக்கள் லீக் ஆனால் உனக்கு எதிர்காலம் என்பதே இல்லாமல் போய் விடும்' என மிரட்டப்பட்டார் அந்த அதிகாரி. அதனைத் தொடர்ந்து “இந்த வீடியோக்கள் வெளிவராமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 லட்சம் கொடு.

இல்லையென்றால், பாலியல் வழக்கில் நீயும் கம்பி எண்ண வேண்டியதுதான். இதை நான் சொல்லவில்லை. பெரிய அதிகாரிதான் உன்கிட்ட சொல்லச் சொன்னாரு என்று பேரம் பேச, அடித்துப்பிடித்து அந்தத் தொகையை அவர் ‘ரெடி’ செய்து கொடுக்க, அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

அந்த அதிகாரியிடமிருந்து மட்டுமல்ல, சில அரசியல் பிரமுகர்களிடமும் வீடியோக்களை அழிப்பதற்காகக் கறந்த பணம் ரூ.6 கோடிக்கும் மேலே. அந்தப் பணத்தில்தான், பிளாக் மெயில் அதிகாரிகள் இருவரில் ஒருவர், வடவள்ளி அண்ணா நகர் ஏரியாவில், தன்னுடைய மனைவி பெயரில் ஒண்ணே முக்கால் கோடிக்கு பெரிய பங்களா வாங்கி, பதிவும் செய்திருக்கிறார்.


அவர் இடமாற்றம் செய்யப்பட்டதும், அந்த இடத்துக்கு வந்தார் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அவ்வளவுதான்! வீடியோவில் சிக்கி பணத்தை இழந்த அதிகாரி, அவருக்கு ‘ஆல் இன் ஆல்’ ஆகிவிட்டார். உயரதிகாரிக்குத்தான் நம் மொழி தெரியாதே! விட்ட பணத்தை இத்துறையில் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற வெறியோடு லஞ்சத்தை வாங்கிக் குவிக்கிறார்.

இவருக்காக ‘மனோ’ தைரியமுள்ள அதிகாரியும், "தவ'மான அதிகாரியும் வசூல் வேட்டை நடத்துகின்றனர். ஆக, வீடியோ அதிகாரி உள்ளிட்ட மூவரும், இந்த மாவட்டத்தில் ‘மூவேந்தர்கள்’என்றே அழைக்கப்படுகின்றனர்.

மாதம்தோறும் ரூ.15000 வரை வீதம், இந்த மாவட்டத்திலுள்ள 35 காவல் நிலையங்களில் இருந்தும், இவர்களுக்கு லஞ்சம் போய்ச் சேர்கிறது. ’மூணு நம்பர் லாட்டரி’ நடத்துபவர்கள், கஞ்சா விற்பனையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் என சட்ட விரோத கும்பல் எதையும், பணம் கறக்காமல் இவர்கள் விட்டு வைப்பதில்லை. தற்போது நடந்த காவலர் தேர்விலும்கூட, சிலரிடம் தலைக்கு ரூ. 6 லட்சம் என லஞ்சம் வாங்கினார்கள்.


மூவேந்தரில் ஒருவரான ’மனோ’ தைரியமுள்ளவர், பெரியநாயக்கன்பாளையம் பில்லூர் டேம் வனப்பகுதிக்கு, கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் ஸ்டைலில், அதுபோலவே உள்ள ஜீப்பில் சென்று கள்ளத்துப்பாக்கி மூலம் வேட்டையாடுகிறார். சுட்டுக் கொல்லப்பட்ட விலங்குகள் பில்லூர் கெஸ்ட் ஹவுஸுக்கு கொண்டுபோய் சமைக்கப்படும்.

மற்ற இருவரும் அங்கு சேர்ந்துகொள்ள, மூவேந்தர்களும் ‘அமர்க்களம்’ பண்ணுவார்கள். மதுவும் இறைச்சியும் போதாதென்று, ஒரு பிரிவில் பணிபுரியும் பெண்களை ’கரெக்ட்’ செய்து அங்கே அழைத்துச் சென்று, மூவரும் போடும் ஆட்டம் இருக்கிறதே! ரொம்பவும் கொடுமை சார்'' என்றார் நம்மிடம் அந்த அதிகாரி.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டார் என்பதற்காக ரூ.25 லட்சத்தை அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதல்லவா? அதன் பின்னணியில் இருக்கிறார் வீடியோ அதிகாரி.

எப்படியென்றால், அந்தப் பெண்ணின் பெயரைப் பதிவு செய்துகொடுத்ததே இவர்தான். பண விஷயத்தில் நம்பிக்கையானவர் என்று பெயரெடுத்த தனக்குக் கீழுள்ள அதிகாரி என்பதால், அந்த பத்திரிகை செய்திக் குறிப்பை படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டார். தன்னிடமே பிளாக் மெயில் செய்து பணம் பறித்த மேலதிகாரி என்பதால், அவருக்கு ‘பண தண்டனை’வாங்கிக் கொடுத்து பழி தீர்த்துக் கொண்டார் வீடியோ அதிகாரி'' எனச் சொல்லும் காக்கிகள் வட்டாரம், மேலும் சில விவகாரங்களைக் கசியவிட்டது.

தன்னை அழகாக காட்டிக்கொள்வதில் ஆர்வமுள்ள அந்த ‘வீடியோ அதிகாரி, பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக்! ‘மனோ’ தைரியமுள்ள அதிகாரியும் அப்படித் தான்!

சூலூர் காவல் நிலையத்தில் ‘வீடியோ அதிகாரி’ பணிபுரிந்தபோது, கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவனும் மனைவியும் வந்தார்கள். பெண்ணின் அழகில் கிறங்கிய வீடியோ அதிகாரி, மிரட்டியே அவளுடைய கணவனை காவல் நிலையத்திலிருந்து ஓடச் செய்தார். அந்தப் பெண்ணிடம் "நானும் நீயும் ஒரே சாதி. உனக்கு சகலமுமா இனி நான் இருக்கிறேன்' என்று தன் சாதியை மறைத்துப் பேசி ’திருமணம்’ செய்துகொண்டார்.

சனி, ஞாயிறுகளில், ஆனைமலை எஸ்.ஆர்.ரிசார்ட்ஸ் க்ரீன் ஹோமிலும், பொள்ளாச்சி ஃபார்ம் ஹவுஸிலும் நண்பர்கள் சகிதமாக இளம்பெண்களுடன் அவர் கூத்தடிப்பதெல்லாம் வழக்கமாக நடப்பது தான். அப்படி நடந்த போது தான், திருநாவுக்கரசு கூட்டாளிகளின் வீடியோகேமராவில் இவர் சிக்கினார்.

வீடியோ அதிகாரி இப்படியென்றால், ‘மனோ' தைரியமுள்ள அதிகாரியோ, கஞ்சா, பிராத்தல் புரோக்கர்களை கைவசம் வைத்துக் கொண்டு, அழகு மைனாக்களை அனுபவிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டவர். அப்படித்தான், கஞ்சா விற்பவனின் மனைவிக்கு ‘பிராக்கெட்’ போட்டுவிட்டார். அடுத்து இவர், இயற்கைசார் இடங்களில் இயங்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்குச் செல்லவிருக்கிறார்.

கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் அழகிகளிடம் வசூல் என, அந்த வரும்படி மூலம், இன்னும் சில புல்லட் பைக்குகள், கார்களை வாங்கிக் குவித்துவிடும் திட்டத்தில் இருப்பதாக, அவரே உளறிக்கொண்டிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே விளக்கம் கேட்டோம்.

"நாதன்'’ஆனவர் நம்மி டம், நான் வீடியோக்களில் இருந்தேனா? யாரு இப்படியெல்லாம் சொல்லுறது? கடைசில என்னையும் பொள்ளாச்சி பாலியல் வழக்குல சேர்த்துட்டாங்களா? சொல்லுறது இருக்கட்டும். அதுக்கு ஆதாரம் வேணும்ல.

எனக்கு மேல எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி. அப்புறம் சி.பி.சி.ஐ.டி. மேலதிகாரிகளெல்லாம் இருக்காங்க. சாதாரண இன்ஸ்பெக்டர் போஸ்ட்ல நான் இருக்கேன். என்னை வாட்ச் பண்ணுறதுக்குன்னே ஆளுங்க இருக்கிறப்ப எப்படிங்க நான் தப்பு பண்ணுவேன்?'' என்று விவரமாகப் பேசினார்.

"மனோ'கரமான அதிகாரியைத் தொடர்புகொண்ட போது, "நான் ரொம்ப நேர்மையா இருக்கிறதுனால தான், இங்கே எஸ்.ஐ.யா போட்டிருக்காங்க. பெரியநாயக்கன்பாளையத்துல இருக்கும் போது காட்டுக்கு வேட்டையாடப் போனேனா? இதெல்லாம் எனக்கு வேண்டாதவங்க கிளப்பி விடறது'' என்று ஒரே போடாகப் போட்டார். அதுதான் பணம் வாங்கிக் கொண்டு வீடியோ ஆதாரங்களை அழித்துவிட்டார்களே! உலகமே உற்று நோக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மறைக்கப்பட்ட விவகாரங்கள் இன்னும் இருக்கு...!

 

 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.