Skip to main content

வியர்வை மட்டுமல்ல... ரத்தத்தையும் சிந்தி தான் பா.ம.க.வை வளர்த்தெடுத்திருக்கிறோம்... நம்மை வீழ்த்தும் சதி வெல்லாது! ராமதாஸ் பேச்சு...

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

ramadoss speech

 

நம்மை அழிக்க வேண்டும் என்பதற்காக சண்டாளர்கள், சதிகாரர்கள் ஆரம்பத்திலிருந்தே சதி செய்து வருகின்றனர். ஆனால், அவர்களால் எதுவும் முடியாது. அந்தக் காலத்திலும் நடக்கவில்லை. இப்போதும் முடியாது. பா.ம.க.வின் வளர்ச்சி எளிதாகக் கிடைத்து விடவில்லை. நாம் நமது கட்சியை வியர்வை மட்டுமல்ல... ரத்தத்தையும் சிந்தி தான் வளர்த்தெடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று பா.ம.க. சிறப்புச் செயற்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உரையாற்றினார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழாவையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புச் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இணையவழியில் இன்று காலை நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

செயற்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் ஆற்றிய உரையின் விவரம்:

 

கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 125 நாட்களாக பாட்டாளி சொந்தங்களைச் சந்திக்க முடியவில்லை. அதுதான் எனக்குப் பெரும் குறையாக உள்ளது. வெகுவிரைவில் கரோனா வைரஸ் ஒழியும். அதன்பிறகு உங்களைச் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

 

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 31 ஆண்டுகள் முடிவடைந்து 32 ஆவது ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால், நாம் இன்னும் இலக்கை அடைய முடியவில்லை. அந்த இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் தீவிரமாக பங்காற்றத் தொடங்கும் போது தான் கரோனா வைரஸ் வந்து நமது பணிகளைத் தடுத்துவிட்டது. கரோனா வைரஸ் முடிவடைந்தவுடன், நாம் இதுவரை எவ்வளவு வேகத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோமோ, அதைவிட 10 மடங்கு அதிக வேகத்தில் நீங்கள் பணியாற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

 

நம்மை வீழ்த்தும் சதி வெல்லாது:

 

நம்மை அழிக்க வேண்டும் என்பதற்காக சண்டாளர்கள், சதிகாரர்கள் ஆரம்பத்திலிருந்தே சதி செய்து வருகின்றனர். அந்தக் காலத்திலிருந்தே நான் அத்தகையவர்களைப் பார்த்து வருகிறேன். அந்தச் சண்டாளர்களும், சதிகாரர்களும் வேறு வடிவில் வருகிறார்கள். விஷப்பாம்புகளாக வருகிறார்கள். நம்முடன் பழகி, நமது கொள்கைகளையே பேசி, நம்மையே அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்களால் எதுவும் முடியாது. அந்தக் காலத்திலும் நடக்கவில்லை. இப்போதும் முடியாது.

 

தேசியகவி பாரதியார் அவர்கள் சுதந்திரப் பயிர் என்ற தலைப்பிலான கவிதையில், ‘‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?’’ என்று பாடியிருப்பார். பாரதியார் எப்படிச் சுதந்திரப் பயிரை வளர்த்ததாகக் கூறினாரோ, அதே போல் தான் நாமும் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்திருக்கிறோம்.... வளர்த்தெடுத்திருக்கிறோம். பா.ம.க.வின் வளர்ச்சி எளிதாகக் கிடைத்துவிடவில்லை. நாம் நமது கட்சியை வியர்வை மட்டுமல்ல. ரத்தத்தையும் சிந்தி தான் வளர்த்தெடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

 

சுக்கா... மிளகா.... சமூகநீதி?

 

அதேபோல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘‘சுதந்திரம்’’  என்ற தலைப்பில் சிறிய கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதையில் ஒரு கிளி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும். அதன் சகோதரி சுதந்திரமாகச் சுற்றி இயற்கையின் அழகை ரசிக்கும். ஆனால், கூண்டில் அடைக்கப்பட்டுள்ள கிளி, கூண்டை உடைத்துக் கொண்டு வெளியில் செல்ல முயலாமல், வெளியில் சுற்றும் கிளியைப் பார்த்து, ‘‘அக்கா, அக்கா’’ என்று கத்திக் கொண்டிருக்கும். அந்தக் கிளியைப் பார்த்து, ‘‘ ஏ... கிளியே, அக்கா, அக்கா என்று கத்துகிறாயே, சுக்கு,  மிளகு என்றால் உன் அக்கா எங்கிருந்தாவது கொண்டு வந்து கொடுப்பாள். ஆனால், சுதந்திரத்தை அவ்வாறு தர முடியாது அல்லவா?’’ என்று கேட்டுச் சுதந்திர உணர்வை ஊட்டும் வகையில் அந்தக் கவிதையை அவர் படைத்திருப்பார்.

 

அந்தக் கவிதையில் அவர் குறிப்பிடும்,‘‘அக்கா அக்கா என்று நீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச்  சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?’’ என்ற வரிகளில் இருந்து தான் ஊக்கம் பெற்று , ‘‘சுக்கா... மிளாகா.... சமூக நீதி?’‘ என்ற தலைப்பில் முகநூலில் தொடர் எழுதி வருகிறேன். நேற்று வரை 38 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். சமூகநீதிக்காக பாட்டாளி மக்கள் கட்சி அளவுக்கு பாடுபட்ட கட்சியை தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் பார்க்க முடியாது.

 

சமூகநீதியில் நமக்கு இணையானவர்கள் எவரும் இல்லை என்பதால் தான், இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக இடப்பங்கீடு என்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். இடப்பங்கீடு என்றால் இருக்கும் 100% இடங்களை அனைவரும் பங்கிட்டுக் கொள்வது ஆகும். எங்களுக்கு யாரும் இட ஒதுக்கீட்டு வழங்கத் தேவையில்லை. இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஆட்சியில் இருந்தவர்கள் நடுவில் இருந்த நல்ல துண்டுகளை எடுத்துக் கொண்டு, ஓரத்தில் இருந்ததை மற்றவர்களுக்கு ஒதுக்கி விட்டார்கள். இந்த விஷயத்தில் நமக்குத் தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு வரை பல்வேறு துரோகங்கள் நமக்கு இழைக்கப்பட்டு வருகின்றன.

 

மா சே துங் வெற்றி வரலாறு:

 

உலக அளவில் புரட்சியாளர்கள் பலரின் வரலாறுகளை நீங்கள் படித்திருப்பீர்கள். உலகின் பெரும் புரட்சியாளராகவும், இன்றைய சீனாவை 64 ஆண்டுகளுக்கு (1954) முன் உருவாக்கியவருமான மா சே துங் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். வாழ்க்கையில் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்றவர். 1930 ஆம் ஆண்டில் சீனாவை சியாங் கே சாக் என்பவர் ஆட்சி செய்த போது அவருக்கு எதிராக கம்யூனிசப் படைகளை உருவாக்கினார். ஒரு கட்டத்தில் போரைத் தாக்குபிடிக்க முடியாமல் ஒரு லட்சம் பேர் கொண்ட தமது படையுடன் மா சே துங் பின் வாங்கி ஓடினார்.

 

தமது படைகளைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் மீண்டும் போர்த்தொடுக்கவும் வசதியாக படைகளைப் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும் மாசேதுங் நீண்ட பயணத்தை (Long March) மேற்கொண்டார். அப்போது ஒரு லட்சம் பேரில் 36 ஆயிரம் பேர் தவிர மீதமுள்ளவர்கள் சண்டையிலும், பசி, பட்டினியிலும் சிக்கி இறந்தனர். இறுதியாக மாவோ வசம் 7,000 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களுடன் உள்ளூர் உழவர்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தனது அணிவகுப்பை மாவோ தொடங்கினார். அடுத்த சில மாதங்களில் தாம் இழந்த பகுதிகளை வென்றார். அடுத்த 20 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சிக்கு கீழ் வந்தது.

 

அலெக்சாண்டர் வரலாறு:

 

20 வயதில் மன்னராக பொறுப்பேற்ற மாவீரன் அலெக்சாண்டர் 32 வயதிற்குள், 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக போர் நடத்தி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் வென்றான். ஆனால், பஞ்சாப் மன்னன் போரஸ் என்ற புருஷோத்தமனுடனான போரில் தோற்கும் நிலை வந்த போது, தாம் வென்ற பகுதிகளை புருஷோத்தமனிடம் கொடுத்து விட்டு வேறு நாட்டுக்குச் சென்றான். 32 வயதில் உலகத்தையே அலெக்சாண்டர் வென்றார் என்பது தான் வரலாறு.

 

இதிலிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், முன்னேறு... முன்னேறு... இலக்கை அடை.... இலக்கை அடை என்பது தான். அலெக்சாண்டர் 32 ஆண்டுகளில் உலகை வென்றார். நாம் கட்சி தொடங்கி 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் இலக்கை அடைய இன்னும் வேகமாக உழைக்க வேண்டும்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு இணையாக வேறு எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது. அனைத்து விஷயங்களிலும் அரசுக்கு நாம் ஆலோசனைகளை கூறி வருகிறோம். நமது ஆலோசனைகள் ஏற்கப்படுகின்றன. நான் போராளி என்பது உங்களுக்குத் தெரியும். நாம் போராடி பல உரிமைகளைப் பெற்றுள்ளோம். ஆனால், நாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் போராடிக் கொண்டும், ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் இருப்பது? நாம் மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டாமா? மக்களுக்கு என்னென்ன நன்மை செய்ய வேண்டும், என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அதைச் செய்ய நாம் ஆட்சிக்கு வர வேண்டும்.

 

லீ குவான் யூவை விடச் சிறந்த ஆட்சி:

 

http://onelink.to/nknapp

 

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ தான் குடிசைகளாக இருந்த சிங்கப்பூரை இன்றைய நவீன சிங்கப்பூராக மாற்றினார். தமிழ்நாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் லீ குவான் யூவை விடச் சிறந்த ஆட்சியைத் தருவார். தமிழகத்தில் அவரைவிடச் சிறந்த ஆட்சியை யாராலும் தர முடியாது. தமிழகத்தில் இன்னொரு கட்சித் தலைவர் இருக்கிறார். எப்படியாவது கோட்டைக்குள் ஓடிச் சென்றாவது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்று துடிக்கிறார். எனக்கு என்ன ஆசை என்றால், அவரையும் மருத்துவர் அன்புமணி இராமதாசையும் ஒரே மேடையில் வைத்து ஏதேனும் ஒரு பொருள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். அதற்கு ஊடகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், பலமுறை அழைப்பு விடுத்தும் கூட அந்தத் தலைவர் விவாதத்திற்குத் தயாராக இல்லை.

 

நம்மிடம் இருக்கும் அளவுக்கு தமிழக மக்களுக்கான திட்டங்கள் வேறு கட்சிகளிடம் இல்லை. நமது தொண்டர்கள் அளவுக்கு உழைக்க வேறு எந்த கட்சியிலும் தொண்டர்கள் இல்லை. நாம் இப்போது உழைப்பதைப் போன்று தொடர்ந்து உழைக்க வேண்டும். இலக்கை அடைய இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும்.

 

இவ்வாறு உரையாற்றினார்.

 

 

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சமூகநீதிக்கு என்ன அர்த்தம் என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? - அன்புமணி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Anbumani question Does the India Alliance know what social justice means

சிதம்பரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் இடையில் யார், யாரோ வந்து குழப்புவார்கள். இடையில் அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்பார்கள். ஓரு ஓட்டு கூட அதிமுகவிற்கு செல்லக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், இந்நேரம் அத்தனை இயற்கை வளங்களையும் திமுகவும், அதிமுகவும் நாசப்படுத்தியிருப்பார்கள். காவிரி டெல்டா, வீராணம் ஏரியை நாசப்படுத்தியிருப்பார்கள். 2008-ல் இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தார்கள். சிதம்பரம் தொகுதியில் உள்ள 25 கிராமங்கள் உள்ளிட்ட 45 கிராமங்கள் பாதிக்கும் திட்டத்தை ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். அதன் பிறகு நான் கிராம, கிராமமாக சென்று போராட்டம் செய்தேன். அதன் பிறகுதான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அத்திட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள். பாமக இல்லை எனில் மூன்றாவது சுரங்கம் இப்பகுதியில் வந்திருக்கும்.

இத்தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் இத்தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளாரா? வீராணம் ஏரி 1.50 டிஎம்சி கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரி. அந்த ஏரி இதுவரை தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமல்ல பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் என கொண்டு வந்தார்கள். அப்போது முதன் முதல் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது இந்த அன்புமணி ராமதாஸ்தான். அப்போது திருமாவளவன் வாயை திறக்கவில்லை. திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையிலிருந்து கச்சத்தீவு பிரச்சனை வரை திமுக கூட்டணி துரோகம் செய்துள்ளது. அதற்கு உடந்தையாக திருமாவளவன் உள்ளார். இந்த தேர்தலில் சாதி பிரச்சனை கிடையாது. சமுதாய பிரச்சனை கிடையாது. நம்ம கூட்டணி, அவங்க கூட்டணி வெவ்வேறு. இன்னொரு கூட்டணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி உள்ளது. அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அதுவும் காணாமல் போய்விடும். ஏதோ நம்ம துரோகம் பண்ணிவிட்டோம் என கூறுகின்றனர். யார் துரோகம் செய்தது. நாம் மற்றவர்களை தோலில் சுமந்து மாற்றி, மாற்றி முதல்வராக்கியுள்ளோம். எங்களை துரோகி என சொல்ல உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. மண்ணிற்கும், மக்களுக்கும் உழைக்கும் பாட்டாளி நாங்கள்.

இது இரண்டு சமுதாயத்திற்கான தேர்தல் அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம். 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இருகட்சிகளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். போதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை நானும், ராமதாஸ் அவர்களும் சேர்ந்து எடுத்தோம்.

இருகட்சிகளும் ஆட்சிக்கு வந்த முதலில் உங்கள் தாத்தாவை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். அதன் பிறகு அப்பா, கணவர், மகனை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். தற்போது பேரப்பிள்ளைகளை மதுப்பழக்த்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுவைவிட தற்போது மோசமான பிரச்சனை உள்ளது. அமெரிக்காவில் என்ன, என்ன போதை பொருள்கள் இருக்கோ, அவையல்லாம் மாத்திரை, பவுடர் வழியில் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒரு வருடம் பயன்படுத்தினால், அந்த மாணவரை மீட்டெடுக்க முடியாது. இதைப்பற்றி எந்த கவலையுமில்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கடலூர் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் சாலையோரம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அவர் தங்கர்பச்சானை ஜெயித்து விடுவீர்கள் என கூறியுள்ளார். அடுத்த நாள் கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர்.

அந்தளவுக்கு திமுகவிற்கு சகிப்புத் தன்மை இல்லை. சாராயம் விற்பவன், கள்ளக்கடத்தல் பண்ணுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், போதை பொருள்கள் விற்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். போதை பொருள்கள் விற்பவர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்யாற்றில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுதான் இந்த கொடுங்கோல் ஆட்சி. விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறேன். இது விவசாய பூமி. இந்த புண்ணியபூமியை நாசப்படுத்தும் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் நீர் ஓடுகிறது. எத்தனை முறை 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். காவிரியை காப்போம் நடைபயணமாக வந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் 87 கிலோ மீட்டர் அளவில் 20 மணல் குவாரிகள் அமைத்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். தற்போது நாம் அதனை செய்யாவிடில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.  நிச்சயமாக இந்த தேர்தலில் பானை உடைக்கப்படும். இந்த தேர்தலில் தாமரையும், மாம்பழமும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இனி நீங்கள் கூறும் அத்துமீறு, அடங்கமறு என்பதெல்லாம் எடுபடாது. நான் இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்தும் அரசியல் செய்கிறேன். இளைஞர்கள் அனைவரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.  அதற்காகதான் இடஓதுக்கீடு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?  திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது.

நான் திருமாவளவனை கேட்கிறேன். நீங்கள் இருக்கிற கூட்டணியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா? சமூகநீதி என்றால் என்ன அர்த்தம் என அந்த கூட்டணிக்கு தெரியுமா? ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.. அவரது மகன் விளையாட்டு பிள்ளை, விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். சினிமாவில் நடித்தால், போதுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மரியாதை கொடுக்க தெரியுமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதில் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளார்கள். ஆனால் 3 பட்டியலின  சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் 30வது இடத்தில் சி.வெ.கணேசன், 33வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழி. இதுதான் நீங்கள் சமூகநீதிக்கு கொடுக்கும் மரியாதை.

சமூகநீதிக்கான ஓரே தலைவர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான். வேறு யாருக்கும் தகுதி கிடையாது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் 3 தொகுதிகள் பெண்கள் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகள் , பட்டியலினத்திற்கு வழங்கியுள்ளோம். இதுதான் உண்மையான இடஓதுக்கீடு, உண்மையான சமூகநீதி. பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமிக்கு கொடுத்தோம். இந்தியாவிலேயே ஒரே ஓரு இட ஒதுக்கீடு யாரும் கேட்காமல், போராடாமல் கிடைத்தது எதுவென்றால், நான் மத்திய அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் பட்டியலின சமுதாயத்திற்கு கிடைத்ததுதான். எம்பிபிஎஸ். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த கட்சி பாமகதான்.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டி தீருவோம் என அங்குள்ள முதல்வர் சித்த ராமைய்யா செல்கிறார். ஓரே கூட்டணியில் உள்ள இங்குள்ள ஸ்டாலின், திருமாவளவன் ஏன் வாயை திறந்து கேட்கவில்லை. வாக்கிற்காக வாயை திறக்க மறுக்கிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் எள்ளவும் விட்டு கொடுக்க மாட்டோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தைரியமாக கேட்போம். கச்சத்தீவை காங்கிரஸூம், திமுகவும் தாரை வார்த்த பிறகுதான் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1200 படகுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடலூர் வள்ளலார் பெருவெளி மையத்தை, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கைவைத்துள்ளார்கள். வள்ளலார் வாழ்ந்த அந்த மண்ணை விட்டு விட்டு வெளியில் சென்று மையத்தை கட்டுங்கள்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ் (கடலூர்), ரவி (அரியலூர்), செந்தில்குமார் (பெரம்பலூர்), முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், தேவதாஸ் படையாண்டவர், ஜெய.சஞ்சீவி, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, ஏ.ஜி.சம்பத், சாய்சுரேஷ், பாஜக ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், வே.ராஜரத்தினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி புரட்சிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.