Skip to main content

இவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக!  

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

ஒன்பது மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் இல்லையென்றாலும், ஆளும் கட்சிக்குள் இருக்கும் கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கான சீட்டுகளை "கேட்ச்' பண்ணுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் பா.ம.க. ரொம்பவே தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கூட் டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வும் குறி வைத்துள்ளதால், தேர்தலுக்கு முன்பே இரு கட்சிகளிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

 

pmk



ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் மேயர் இடங்களைக் கேட்டுக் கொடுத்த குடைச்சல் காரணமாக, "மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும்' என்று அவசர சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பா.ஜ.க. ஒருபக்கம் முறுக்கிக்கொண்டு போக... பா.ம.க.வும் ஏகத்துக்கும் அப்செட் ஆனது என்கிறார்கள். ஆனாலும், அ.தி.மு.க. விடம் சேலம், ஆவடி, ஓசூர், சென்னை ஆகிய நான்கு மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை விட்டுக் கொடுக்கும்படி பா.ம.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது. சென்னையைத் தராதபட்சத்தில் வேலூர் மாநகராட்சியை ஒதுக்கவும் கேட்டுள்ளது.

 

pmk



சேலத்தில், பா.ம.க. தரப்பில் அக்கட்சியின் மாநில துணைச்செயலாளர் அருள் கடந்தமுறை நடந்த தேர்தலின்போது மேயர் பதவிக்கு போட்டியிட்டார். "இந்தமுறை மறைமுக தேர்தலாக இருந்தாலும்கூட, அவரை மேயராக அமர வைத்து அழகு பார்த்திட மாம்பழக் கட்சியின் தலைமை பெரிதும் விரும்புகிறது' என்கிறார்கள் அக்கட்சியினர்.

இதுகுறித்து பா.ம.க. மாநில துணைச் செயலாளர் அருளிடம் பேசியபோது, "ஆவடி, வேலூர், சேலம், ஓசூர் ஆகிய நான்கு மாநகராட்சிகளில் ஏதாவது இரண்டு மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கும்படி அ.தி. மு.க.விடம் கேட்டு வருகிறோம். இவற்றில் சேலம் மாநகராட்சியை ரொம்பவே எதிர்பார்க்கிறோம். ஆனால், எந்த இடத்திலும் துணை மேயர் பதவி கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டோம்'' என்கிறார்.

அ.தி.மு.க.வின் ர.ர.க்கள் சிலரிடம் இதுகுறித்து பேசினோம்...

"சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் கவுன்சிலர் சீட் கேட்டு 540 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். மேயர் பதவிக்கு மட்டும் 66 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். பின்னர் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்று அவசர சட்டம் கொண்டுவரப்பட்டதால், மேயர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்த அனைவரும், கவுன்சிலர் சீட் கேட்டு விண்ணப்பம் அளித்தனர். ஆக, ஒவ்வொரு வார்டுக்கும் கவுன்சிலர் சீட்டுக்கு தலா பத்துபேர் வீதம் கிட்டத்தட்ட 600 பேர் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் இருக்கிறார்கள். அதுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. சேலம் என்பது எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலரும் போட்டி போட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சேலம் மாநகராட்சி மேயர் பதவியை பா.ம.க.வுக்கு எப்படி விட்டுத் தரமுடியும்?


இங்குள்ள 60 வார்டுகளில் 50 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடவும், எஞ்சியுள்ள பத்து இடங்களைத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் திட்டமும் இருக்கு. ஒருவேளை, பெருவாரியான இடங்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்றால், கூட்டணிக் கட்சிகளின் தயவின்றியே மேயர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றிவிடும். அநேகமாக பா.ம.க.வுக்கு, வேலூர் அல்லது ஆவடி இவற்றில் ஏதாவது ஒரு மாநகராட்சி மேயர் பதவி மட்டும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்கள் ர.ர.க்கள்.


"பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ரொம்பவே அழுத்தம் கொடுத்தால், "சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' என்று கூறிவிட்டு, உள்ளாட்சியில் தனித்து களமிறங்குவது குறித்தும் கட்சிக்குள் ஒரு பேச்சு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது' என்றும் அ.தி.மு.க. வட்டாரத்தில் கதைக்கின்றனர்.  மாங்கனி மாநகராட்சியை குறிவைத்து காய் நகர்த்திவரும் பா.ம.க.வின் எதிர்பார்ப்பு குறித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, "சார்... இது சி.எம். மாவட்டம். அதனால 100 சதவீதம் அ.தி.மு.க.வுக்குதான் சேலம் மாநகராட்சி மேயர் பதவி'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.