Skip to main content

7 தொகுதியிலும் தோல்வி - நான் எடுத்த சரியான முடிவு...

Published on 25/05/2019 | Edited on 26/05/2019

 

அதிமுக - பாமக கூட்டணி அமைத்தது பிடிக்கவில்லை என கூறி பாமகவில் இருந்து விலகி 'அனைத்து அரசியல் மக்கள் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கினார் ராஜேஸ்வரி ப்ரியா. கட்சி தொடங்கிய வேகத்தோடு தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:-
 

தேர்தல் களத்தில் அனுபவம் எப்படி இருந்தது?
 

21 நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து பழக்கியுள்ளனர் என்பது நன்றாகவே தெரிகிறது. நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்றபோது எங்களிடம் சிலர் பணம் தொடர்பாக பேசினர். அப்படிப்பட்ட அரசியலை நாங்கள் முன்னெடுக்கவில்லை என்று கூறிவிட்டோம். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக என மூன்று கட்சிகளும் பணம் கொடுத்துள்ளது. அதையும் மீறி புதிய கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் வாக்குகளை பெற்றுள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

 

 

புதிய கட்சிகள் வந்தாலும் திமுக, அதிமுக கட்சிகள் அதிக வாக்குகள் பெற்றுள்ளதே?
 

அதிமுக, திமுக அதிக வாக்குகள் வாங்குகிறது என்பது உண்மைதான். அதேநேரத்தில் புதிய கட்சிகளின் வாக்கு சதவீதம் கூடியிருப்பது ஒரு வித்தியாசமான ஒரு அரசியல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மூன்று கட்சிகளும் பணம் கொடுத்துள்ளது. இதில் சில இடங்களில் அமமுகவையும் முந்தி பணம் கொடுக்காத கட்சியும் வந்திருக்கிறது. அப்போது மக்கள் மத்தியில் பரவலாக வேறுவிதமான எண்ண ஓட்டம் வந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அதிமுக இடைத்தேர்தலில் பண விநியோகம் செய்தது. பணத்தை கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் ஓட்டுப்போடும்போது யாருக்கு வேண்டுமானாலும் போடலாம் என்ற மனநிலையில் உள்ளனர்.  
 

பாஜக அகில இந்திய அளவில் 300 தொகுதிகளுக்கு மேல் வந்துள்ளது...
 

தேர்தலில் தேர்தல் பணிகளில் காவல்துறை பணியாற்றியது, அரசு ஊழியர்கள் பணியாற்றினார்கள். ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் பிரதமர் நன்றி சொல்வதில் இருந்தே சந்தேகத்தை எழுப்புகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு அளிப்பது என்பது மிகப்பெரிய மோசடி. அமெரிக்காவில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும்போது இங்கு ஏன் அதனை பின்பற்றவில்லை. தேர்தல் சீர்திருத்தம் வேண்டும். இதனை வலியுறுத்தி இனி வரும் காலங்களில் போராட உள்ளோம். 


 

rajeswaripriya



காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே...
 

சில வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை ஏற்காத மனநிலையில் மக்கள் இருப்பதையும் காண முடிகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்காததுதான் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தோல்வி. இங்கே எப்படி பாஜகவுக்கு எதிரான கருத்துக்கள் அதிகமாக இருக்கிறதோ, அதைப்போல வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களை பாஜகவினர் பெரிய அளவில் பரப்பியுள்ளனர். 
 

அதிமுக - பாமக கூட்டணி அமைந்ததால் பாமகவில் இருந்து விலகினீர்கள். இந்த தேர்தலில் பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளதே...
 

அவர்கள் வைத்த கூட்டணி பிடிக்கவில்லை என்று நான் நேர்மையாக, வெளிப்படையாக சொல்லிவிட்டு அக்கட்சியில் இருந்து வெளியே வந்தேன். மேலும் பொதுவாக இளைஞர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும், ஒரு இடத்தில் வேலையில் இருந்தாலும் தங்களுக்கு பிடிக்காத இடத்தில் இருக்க வேண்டாம் என்று ஒரு அறிவுரையாக சொல்லிவிட்டுத்தான் வந்தேன். கட்சிக்குள் இருந்துக்கொண்டே தலைமை வைத்த கூட்டணியை ஏற்காமல், ஓட்டை மாற்றிப்போட நான் விரும்பவில்லை. அதனால் வெளியேறினேன். 


 

 

அரசியல் பக்குவம் இல்லாமல், அவசரப்பட்டு விலகிவிட்டோமோ. அவர்கள் சரியான முடிவு எடுத்திருக்கிறார்களோ என்று சில நேரங்களில் நினைத்தேன். ஆனால் இந்த சின்ன வயதிலேயே, குறுகிய கால அரசியல் அனுபவத்தில் ஒரு துணிச்சலான முடிவு எடுக்கக்கூடிய அளவுக்கு எனக்கு தலைமை பண்பு இருப்பதை தேர்தல் முடிவு வந்தவுடன் உணர்கிறேன். அதிமுக கூட்டணியில் உள்ள வாக்குகள் மோடி எதிர்ப்பு அலை என்ற பெயரில் திமுகவுக்கு போயுள்ளது. 
 

பாமக தனித்து போட்டியிட்டிருந்தால் தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றிப் பெற்றிருப்பார். அரக்கோணத்தில் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெற்றிருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இனி பாமக தனித்து நின்றாலும் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படுமா என்பது கேள்விகுறியே...


 

Next Story

'60 ஆண்டுகால வெறுப்பு இருக்கிறது' - பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'There is 60 years of hatred' - Pamaka Anbumani Ramadoss interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டின் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்த முடிவுக்குப் பிறகு 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான ஒரு சூழல் இருக்கிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும் கூட்டணி. பிரதமர் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்றார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று சேலத்தில் நடக்க இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் தற்போது கூட்டணியில் இணைந்துள்ள பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

ஆவணத்தில் திடீர் சந்தேகம்; தனி அறைக்கு கூட்டிச்சென்று டவுட் கேட்ட ராமதாஸ்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Sudden doubt in the document; Ramdas went to a private room and asked for a dowt

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில்  நேற்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.

நேற்று வரை அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, எடுத்த இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

பாமக-பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த சில நிமிடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி ஒப்பந்தத்திற்கான ஆவணத்தை படித்துப் பார்க்கையில், அதில் அவருக்கு சில சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து விளக்கம் கேட்க பாஜக தலைவரை தனி அறைக்கு பாமக ராமதாஸ் கூட்டிச் சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் மக்களவை தேர்தலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.