Skip to main content

கூட்டணியில் நீடிக்குமா பா.ம.க? அல்வா தரும் அ.தி.மு.க.! 

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

dddd

 

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் உயர்த்திப் பிடித்ததால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா என்கிற சந்தேகம் வலுத்து வந்த நிலையில், இடஒதுக்கீட்டு கொள்கையின் வடிவத்தை அவர் மாற்றிக்கொண்டதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணியையும் வேலுமணியையும் தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தச் சந்திப்பில், ஒதுக்கீடு பிரச்சனைகளை மட்டுமல்ல கூட்டணி பற்றிதான் அதிகம் விவாதித்திருக்கிறார்கள் அமைச்சர்கள். 

 

சந்திப்பு குறித்து அமைச்சர்களுக்கு நெருக்கமான தொடர்பில் நாம் விசாரித்தபோது, “தன்னை சந்தித்த அமைச்சர்களிடம், ‘தனி இடஒதுக்கீடு (20%) போராட்டத்தைக் கையிலெடுத்துவிட்டேன். ஆனால், அது தற்போது சாத்தியமில்லை என உங்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதை அடுத்து தனி இடஒதுக்கீடு என்பதை உள் இடஒதுக்கீடாக மாற்றிக்கொண்டேன். மிகவும் பிற்படுத்தப்படோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் பெரும்பான்மை சதவீதத்தை வன்னியர் சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும். ஒதுக்கினால் அ.தி.மு.க. கூட்டணியை தொடர்வதில் பா.ம.க.வுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது' என ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

 

dddd

 

அதற்கு அமைச்சர் தங்கமணி, "வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அ.தி.மு.க. அரசுக்கோ எந்த நெருடலும் இல்லை; ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தற்போது தேர்தல் நேரமென்பதால், வன்னியர்களுக்கு மட்டும் பெரும்பான்மை சதவீத இடஒதுக்கீட்டை கொடுத்தால், எம்.பி.சி. பட்டியலிலுள்ள மற்ற சாதியினர் கிளர்ச்சி செய்வார்கள். அது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் மாறும். தேர்தல் நேரமாக இல்லையெனில் நிச்சயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பார் முதல்வர். அதனால், கூட்டணியை உறுதிப்படுத்துங்கள். தேர்தல் முடிந்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், இட ஒதுக்கீடு பிரச்சனை சரி செய்யப்படும்'' என தெளிவுபடுத்தியிருக்கிறார். அப்போது பேசிய ராமதாஸ், "உள் இடஒதுக்கீடு கொடுப்பதால் எந்தப் பிரச்சனையும் வராது'' எனச் சொல்ல, குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் வேலுமணி, "வன்னியர்களின் இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே ஜனார்த்தனன் கமிட்டி சில பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. இந்த நிலையில், உங்கள் கோரிக்கையை ஏத்துக்கிட்டும் மற்ற சமூகத்தைப் பகைத்துக்கொண்டும் உள் இடஒதுக்கீடு வழங்கினால், வன்னியர் சமூகத்தின் மொத்த ஆதரவும் அவர்களின் வாக்குகளும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா? அதற்கான உத்தரவாதத்தை பா.ம.க. தருமா? என்கிற கேள்விகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல, கட்சியின் சீனியர்கள் அனைவரிடமுமே இருக்கிறது. அதனால் தேர்தல் முடியட்டும், நல்லது நடக்கும்'' என அழுத்தமாக சொல்லியிருக்கிறார். வேலுமணியின் இந்தப் பேச்சுக்கு ராமதாசால் பதில் சொல்ல முடியவில்லை.

 

இதனைத் தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் எடுத்துள்ளனர். அப்போது, "வட தமிழகத்திலுள்ள 120 தொகுதிகளில் 80 இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற சக்தி பா.ம.க.வுக்கு மட்டுமே இருக்கிறது. பா.ம.க. இருப்பது கூட்டணிக்கு பலம். அதனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இரண்டாவது இடமும், 32 சீட்டுகளும் வேண்டும்'' எனச் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். இதனை ஏற்காத அமைச்சர்கள், "கூட்டணியில் இரண்டாவது இடத்தை பா.ஜ.க. கேட்பதையும், அதனால் பா.ம.க.வுக்கு அதிகபட்சம் 20 சீட்டுகள் ஒதுக்க முடியும்' என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த டீலுக்கு ராமதாஸ் தயக்கம் காட்ட... "இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் கலந்து பேசிவிட்டுச் சொல்கிறோம்” என கூறிவிட்டு தைலாபுரம் தோட்டத்தை விட்டு தங்கமணியும் வேலுமணியும் கிளம்பியிருக்கிறார்கள்‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள். 

 

மேலும் “இந்தச் சந்திப்பில் தேர்தல் செலவுகள் குறித்து பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு எந்த உத்தரவாதத்தையும் அமைச்சர்கள் தரப்பில் கொடுக்கப்படவில்லை என்கின்றனர் அ.தி.மு.க. சீனியர்கள். டாக்டர் ராமதாசுடனான பேச்சுவார்த்தையில் நடந்ததை எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் இருவரும் விவரித்திருக்கிறார்கள். முழுமையாக அதனைக் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, "எதார்த்த அரசியலை டாக்டர் அய்யா புரிந்துகொள்ள மறுக்கிறார். முந்தைய தேர்தல்களில் பா.ம.க.வால் அ.தி.மு.க.வுக்கு என்ன லாபம்? பா.ம.க.வால் எத்தனை தொகுதி அ.தி.மு.க. ஜெயித்தது? என்றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூட்டணி அமைத்து தி.மு.க. தேர்தலை சந்திப்பதால்தான் நாமும் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லைன்னா, தனித்தே நாம் போட்டியிட முடியும். பா.ஜ.க.வை இறுதி செய்துவிட்டு பா.ம.க.வை கவனிப்போம்” என கமெண்டடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கிறது அ.தி.மு.க. தரப்பு.

 

பா.ம.க.வின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசியபோது, "தேர்தல் முடிந்ததும் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம் என்கிற எடப்பாடி பழனிசாமியின் பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது. பா.ம.க.வுக்கும் வன்னியர்களுக்கும் அவர் அல்வா தருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையேல் கூட்டணியில் அய்யா எதிர்பார்ப்பது நடக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்காது'' என்கிறார்கள் ராமதாசின் உறுதி மீது நம்பிக்கை வைத்தபடி.

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.