மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (07.02.2026) மலேசியா புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் போது மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமைச் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதமர் மோடி மலேசியாவிற்கு மேற்கொள்ளும் 3வது பயணம் இதுவாகும்.

Advertisment

அதன்படி மலேசியத் தலைநகர்  கோலாலம்பூரைச் சென்றடைந்த பிரதமர் மோடியை, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், அந்நாட்டு மனிதவளத் துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் லுகானிஸ்மான் பின் அவாங் சௌனி ஆகியோருடன் இணைந்து அன்புடன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடிக்கு இரு நாடுகளின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து, இந்தியாவில் இருந்து மலேசியாவிற் புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றும் இடத்திற்கு மலேசியப் பிரதமர் அன்வருடன் பிரதமர் மோடி கார் ஒன்றாக காரில் பயணம் மேற்கொண்டார். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா - மலேசியா மக்களிடையேயான தொடர்பைக் கொண்டாடுகிறோம். பிரதமர் அன்வர் இப்ராஹிமும், நானும் கோலாலம்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்கிறோம்” எனக்  குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

modi-malasia-speech-1

இந்நிலையில் புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், “உங்கள் வரவேற்பில் உள்ள நெகிழ்ச்சி, நமது  கலாச்சாரத்தின் அழகான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. முதலாவதாக, இந்த கொண்டாட்டத்தில் என்னுடன் கலந்து கொண்டதற்காக எனது அன்பிற்குரிய நண்பர் அன்வர் இப்ராகிமுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சற்று முன்பு அவர் ஆற்றிய உரையில், இந்தியா-மலேசியா இடையிலான நட்புறவின் அளவு மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகள் குறித்து அவர் குறிப்பிட்டதற்கு நான் நன்றி கூறுகிறேன். அதுமட்டுமின்றி, அவர் என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்ததோடு, தனது காரிலேயே என்னை இங்கு அழைத்து வந்தார். அவரது கார் மட்டுமல்ல, அவரது இருக்கையையும் வழங்கியது, இந்த சிறப்புமிக்க மரியாதையும் அவரது அன்பும், இந்தியாவிற்கும், உங்கள் அனைவருக்கும் அவர் அளிக்கும் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது. 

கடந்த ஆண்டு, ஆசியான் (ASEAN) உச்சிமாநாட்டிற்காக என்னால் மலேசியாவிற்கு வர இயலவில்லை. ஆனால், விரைவில் மலேசியாவிற்கு வருவேன் என்று எனது நண்பருக்கு நான் வாக்குறுதி அளித்திருந்தேன். அவ்வாறு அளித்த வாக்குறுதிப்படி, நான் இங்கு வந்துள்ளேன். 2026ஆம் ஆண்டில் நான் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். நாம் இப்போதுதான் சாதனை படைக்கக்கூடிய ஒரு கலாச்சாரக் கலைநிகழ்ச்சியைக் கண்டோம். 800 நடனக் கலைஞர்கள் மிகச்சிறந்த ஒருங்கிணைப்புடன் ஆடிய இந்த நிகழ்ச்சி வரும் காலங்களில் நமது மக்களால் நீண்ட காலம் நினைவு கூரப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய இந்திய வம்சாவளிச் சமூகத்தை மலேசியா கொண்டுள்ளது. இந்திய மற்றும் மலேசிய இதயங்களை இணைக்கும் விஷயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.

Advertisment

modi-malasia-speech

நம்மை இணைக்கும் ஒரு வாழும் பாலமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் 'ரோட்டி சானாய்'யை 'மலபார் புரோட்டா'வுடன் இணைத்துள்ளீர்கள். தேங்காய், மசாலாப் பொருட்கள், மற்றும் முக்கியமாக 'தே தாரிக்' (Teh tarik). கோலாலம்பூராக இருந்தாலும் சரி அல்லது கொச்சியாக இருந்தாலும் சரி, இவற்றின் சுவைகள் மிகவும் பரிச்சயமானவையாகவே தோன்றுகின்றன. நாம் ஒருவரை ஒருவர் மிக நன்றாகப் புரிந்து கொள்கிறோம். நமது மொழிகளுக்கும் மலாய் மொழிக்கும் இடையே அதிகப்படியான பொதுவான சொற்கள் இருப்பதே இதற்கு காரணமாக இருக்க வேண்டும். இந்திய இசையும் திரைப்படங்களும் மலேசியாவில் மிகவும் பிரபலம் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். 

பிரதமர் அன்வர் இப்ராகிம் மிக நன்றாகப் பாடுவார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியாவில் உள்ள பலருக்கு இது தெரியாது. அவரது கடந்த இந்தியப் பயணத்தின் போது, இது குறித்து அறிந்து அவர்கள் மகிழ்ச்சியுடன் கூடிய ஆச்சரியமடைந்தனர். அவர் இந்தியாவில் பழைய இந்திப் பாடலைப் பாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. மேலும், அவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆரின் (legendary) தமிழ் பாடல்களை விரும்புவது மிகவும் அற்புதமான விஷயமாகும்” எனப் பேசினார்.