Skip to main content

என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? ஊரடங்கு இப்போது வேண்டாமா? முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் மத ரீதியாக அலட்சியம் காட்டுவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும்,ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர்களுடன் விவாதிப்பதற்கு முன் கடந்த 31-ந்தேதி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்.அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உளவுத்துறைகளான ஐ.பி., ரா உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளுடன் ஒரு அவசர ஆலோசனையை நடத்தியிருந்தார் பிரதமர் மோடி.


  bjp



அந்த ஆலோசனையில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அளவிலான சில வைரலாலஜி ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்து கொடுத்துள்ள ரிப்போர்ட்டுகள் அலசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது.ஆனால் அவைகள் குறைத்துக்காட்டப்படுகின்றன.

21 நாள் தேசிய ஊரடங்கு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்தாலும் இந்திய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடவடிக்கைகள் தற்போதுள்ளதைவிட இரு மடங்கு தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஊரடங்கை நீட்டிப்பது அவசியம்.இதில் அலட்சியம் காட்டினால் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை செய்திருக்கிறது.

இந்த எச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதில்,கொரோனாவைக் குறித்த தெளிவு மக்களுக்கே வந்திருப்பதால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதில் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.ஆனால், ஊரடங்கை நீட்டிப்பது வேறு பல சிக்கல்களை உருவாக்கும்.ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இப்போதே பணப்புழக்கம் குறைந்து விட்டதால் ஊரடங்கை உடைத்து வெளியேறலாமா என யோசிக்கிறார்கள்.மளிகைக் கடைகளில் உள்ள பொருட்களும் குறைந்து விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் உணவுதானியத் தட்டுப்பாடு பல மாநிலங்களில் நெருக்கடியை ஏற்படுத்தும்.அதனால், ஊரடங்கை நீட்டிக்காமல் சூழலைக் கையாள்வதுதான் சரியானதாக இருக்கும் என உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.அதிகாரிகளின் யோசனை அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்களையும் ஆமோதிக்க வைத்திருக்கிறது.



 

cm



கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களை கண்காணிப்பதிலும் தொற்று உறுதி சோதனைகளை விரைவு படுத்துவதிலும் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சைத் தருவதிலும் மாநில அரசுகள் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஊரடங்கு முடிவுக்குப் பிறகும் இதே கவனத்தை சுகாதார துறையினர் மேற்கொள்வது அவசியம் என அதிகாரிகள் சொன்ன யோசனைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இதனையடுத்தே, மாநில முதல்வர்களுடன் மீண்டும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

முதல்வர்களுடன் மோடி விவாதித்தபோது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டும்படி இருக்கிறது. இருப்பினும் சமுக தொற்றாக மாறாமல் இருக்க இன்னும் வேகம் வேண்டும். தீவிர கவனம் செலுத்துங்கள். சோதனை மையங்களையும், மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவதிலும் பல மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை. மேலும், கொரோனாவை தடுப்பதற்காக மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒதுக்கிய நிதிகளில் தவறுகள் நடந்து வருகிறது. அதனை சரி செய்யுங்கள். டெல்லியில் நடந்த மத வழிபாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு மாநிலங்களுக்கு திரும்பியவர்களை கண்காணிப்பதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என காட்டமாக பேசிய மோடி, ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து மக்கள் வெளியேறாமல் இருக்க அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அவர்களது வீடு தேடி செல்வதற்குரிய வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தம்மிடமிருந்த புள்ளி விபரங்களை வைத்து கேள்விகளை எழுப்பினார் மோடி.

 

admk



மோடியுடன் பேசிய மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே, டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தியிருக்கிறோம். அவர்களோடு தொடர்புடையவர்களும் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பும் திருப்திகரமாக இருக்கிறது. எந்த ஒரு மதத்தின் கூட்டங்களுக்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை. சோதனைகளின் முடிவுகளை விரைந்து அறிந்துகொள்வதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மூன்றாவது நிலைக்கு போகாமல் இருப்பதற்கான எல்லா மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. முக கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும் மதம் சார்ந்த கூட்டங்களில் பங்கேற்க முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட முயற்சிகளுக்கும் தேசிய அளவில் தடை விதிக்கலாம் என சொல்லியிருக்கிறார்.

இதே ரீதியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ம.பி.முதல்வர் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட பலரும் பேசினர். தமிழக முதல்வர் எடப்பாடி, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இதுவரையில் எடுக்கப்பட்டு வந்துள்ள நடவடிக்கைகளையும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், நோய் தொற்றுள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் விரிவாகப் பேசினார்.

கொரோனா தடுப்பு நடவடிக் கைகளுக்காக 9 ஆயிரம் கோடி நிதி கேட்டு ஏற்கனவே எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியதுடன், பல்வேறு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய மேலும் 3 ஆயிரம் கோடி தேவைப்படுவதால் 12 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார் எடப்பாடி. அப்போது மோடி எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்தார் தலைமைச் செயலாளர் சண்முகம். மோடியுடன் விவாதித்த முதல்வர்கள் அனைவருமே தங்கள் மாநிலத்துக்கு இத்தனை கோடி நிதி வேண்டும் என்பதை வலியுறுத்த தவறவில்லை. ஆனால், யாருக்குமே மோடி உறுதி தரவில்லை.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என மோடி கேள்வி எழுப்பியபோது, வேண்டாம் என்றே பெரும்பாலான முதல்வர்கள் தெரிவிக்க, டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்கள் ஊரடங்கு முடியும்போது அப்போ தைய சூழலில் தீர்மானிக்கலாம் என சொல்லியுள்ளனர். இறுதியாக பேசிய மோடி, ஊரடங்கு முடிந்த பிறகும் இப்போதைய மருத்துவ நடவடிக் கைகளே தொடர வேண்டும்.; அதில் அலட்சியம் இருக்கக்கூடாது. அனைத்து மாநிலங்களும் பின்பற் றும் வகையில் கையாள வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வழங் கும் என்பது உள்ளிட்ட சில அறி வுறுத்தல்களை கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான ஆலோசனையை முடித்ததும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அமைச்சர்கள் மற்றும் அதன் உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி. அதுகுறித்து விசாரித்த போது, ’கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதிலுள்ள சிக்கல்களை களைவதற்காக சில முடிவுகளை எடுத்தனர். குறிப்பாக, இன்வெசிவ் வெண்டிலேட்டர்ஸ், என்-95 ரக மாஸ்க்குகள், மலேரியா நோய் எதிர்ப்பு மருந்துகளான ஹைட்ராசிக் குளோரோகுவினோன், அசித்ரோமைசின், பாதுகாப்பு கவச உடைகள், மல்டி பேராமீட்டர் ஐ.சி.யூ. மானிட்டர்கள் உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக அவைகளை உற்பத்தி செய்யும் தகுதி வாய்ந்த நிறுவனங் களுக்கு மொத்த மூலதனத்தில் 30 சதவீத மானியம் தருவது உள்பட பல சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது‘’ என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இந்த ஆலோசனைகளுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து விசாரித்தார் கவர்னர் பன்வாரிலால். அப்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதியுடன் கவர்னரை சந்தித்த எடப்பாடி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து செல்லவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையையும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும் கவர்னர் விசாரித்த போது அது குறித்து தயாரிக்கப்பட்டிருந்த ஒரு ரிப்போர்ட்டை கவர்னரிடம் கொடுத்துள்ளார் எடப்பாடி. அதனை படித்துப்பார்த்து சில அதிருப்திகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அது குறித்து விளக்கத்தை தலைமைச்செயலாளர் சண்முகம் விவரித்த நிலையில், வைரலாலஜி சோதனை மையங்களுக்கான உபகரணங்களில் நடந்துள்ள ஒரு ஊழல் குறித்து கவர்னர் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடியும் அதிகாரிகளும் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துள்ளனர் என்கிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமான அதிகாரிகள்.

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.