Skip to main content

எனது குடும்பத்தை தவறாக பேசினால் நான் எதிர்த்து கேள்வி கேட்க கூடாதா..? பியூஷ் மனுஷ் ஆவேசம்!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019


சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சில தினங்களுக்கு சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு இருந்தவர்களால் தாக்கப்பட்டார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் நம்முடன் நடந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
 

zf



சேலம் பாஜக அலுவலகத்துக்கு சென்ற நீங்கள் தாக்கப்பட்டீர்கள். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தீர்கள். இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என்னை அங்கு தாக்க முயற்சி பண்ணி செருப்பில் இருந்து கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு என்னை அடிக்க முற்பட்டார்கள். ஆனால் என்னை அவர்கள் நினைத்த அளவிற்கு தாக்க முடியவில்லை. என் மீது அடி விழவில்லை. மருத்துவமனையில் கூட மருத்துவரிடம் கேட்டேன். அவரும் நன்றாக இருப்பதாக கூறினார்.

நீங்கள் தாக்கப்பட்டதற்கு பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசியல்வாதிகள் சிலர் அறிக்கைகளையும் வெளியிட்டார்கள். நீங்கள் எதற்காக அங்கு போக வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள்? அதுவும் அறிவித்து விட்டு சென்றுள்ளீர்கள். இதற்கான காரணம் என்ன?

என் மனைவி குழந்தைகளை பத்தி தப்பா பேசுறாங்க. அதை நான் தானே கேட்க வேண்டும். என் மனைவி என்னை விவகாரத்து செய்துவிட்டாருனு சொல்றாங்க. என் மகளை நான் பலாத்காரம் செய்து விட்டேன்னு சொல்றாங்க. அதை நான் அங்கே போனால் தானே கேட்க முடியும். அதானால்தான் அங்கே சென்றேன்.சேலம் மாவட்ட பாஜக தலைவருக்கு தெரியப்படுத்திவிட்டு சென்றேன். நான் மட்டும்தான் சென்றேன். யாரையும் அழைத்துக்கொண்டு சண்டைக்கு செல்ல வில்லை. நான் எப்போதும் வன்முறையை விரும்புகிறவன் அல்ல. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. சொல்லிவிட்டு சென்ற என் மீது எழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் பலமுறை இதைபோன்று பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளீர்கள், இவ்வாறு செல்வதன் மூலம் என்ன மாற்றம் நடைபெற்றுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

அவர்கள் செய்யும் அராஜகத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவேன். என்னுடைய குடும்பத்தை பற்றி தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்தால் நான் என்ன செய்ய முடியும். அவர்களுடன் விவாதிக்க தயார் என்று சொல்லிவிட்டு சென்ற என்னையே அவர்கள் கம்புகளை வைத்து தாக்க முயற்சி செய்துள்ளார்கள். அவதூறாக இவர்கள் பேசுகிறார்கள் என்று சைபர் கிரைம் போலிசில் பலமுறை புகார் செய்துள்ளேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழு முறைக்கும் மேல் நான் புகார் கொடுத்துள்ளேன். அதில் ஒரு முறை கூட விசாரணை நடைபெறவில்லை.

நீங்க திமுக சார்பாக செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றதே?

10 ஆண்டுகளுக்கு முன்னாலேயே திமுக ஆட்சியில் என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். எனவே யாரையும் ஆதரிக்கிறேன் என்பது எல்லாம் தவறான குற்றச்சாட்டு. அனைத்து கட்சிகளுக்கு எதிராகவும் நான் போராட்டம் நடத்தியுள்ளேன். கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கூட போராட்டம் நடத்தி உள்ளேன்.  ஏன் தற்போதைய அதிமுகவுக்கு எதிராக கூட போராடி உள்ளேன். போராட்டத்திற்காக அவர்கள் எல்லாம் என்மீது வழக்கு போடுவார்கள். ஆனால் யாரும் என் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்யவில்லை. என் குடும்பத்தை பற்றி கேவலமாக விமர்சனம் செய்த நிர்வாகிகளை எந்த பாஜக தலைவராவது இதுவரை கண்டித்துள்ளார்களா? பொன்னார் போன்றவர்கள் நடந்து வந்த என்னை தவழ்ந்து போக வைத்திருப்பேன் என்று சொல்கிறார் என்றால் அவர்கள் எவ்வளவு வன்முறை வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இவர்கள் என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் அஞ்ச மாட்டேன். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டக் களத்தில் இருப்பேன்.

 


 

Next Story

பறந்த முத்தம்; பதறிய பாஜக எம்பிக்கள் - வெளுத்து வாங்கும் பியூஷ்மனுஷ்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Piyush Manush interview

 

சமீபத்திய பாராளுமன்ற நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் அவர்கள்...

 

கொடுக்கப்படாத ஃப்ளையிங் கிஸ் ஸ்மிருதி இரானியால் பாராளுமன்றத்தில் அரசியலாக்கப்பட்டது. மணிப்பூரில் வெளியான வீடியோவிலேயே இவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றால், இன்னும் வெளியாகாத விஷயங்கள் எவ்வளவு இருக்கும்? மணிப்பூர் முதலமைச்சரே சொல்கிறார் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளது என்று. பாஜகவினர் தேசத்துரோகிகள் என ராகுல் காந்தி சரியாகச் சொன்னார். பாஜகவினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் கலவரங்களுக்கு அரசின் ஆதரவு இல்லையென்றால் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?

 

இவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் இதில் அரசியல் இருக்கிறது என்கிறோம். மணிப்பூரில் நடந்தது அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறை. சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் மக்களைத் துன்புறுத்துவது தான் தீவிரவாதம். 24 மணி நேரமும் இவர்களுடைய சிந்தனை மதம் குறித்தே இருக்கிறது. மக்கள் துன்பப்படுவதை மணிப்பூர் முதலமைச்சரால் நிறுத்த முடியவில்லை. ஆனால் அவரை மாற்றுவதற்கு பாஜக தயாராக இல்லை. சொந்த மாநிலத்தில் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

 

கொஞ்சமாவது மனசாட்சி இருந்திருந்தால் மணிப்பூர் முதலமைச்சரை இவர்கள் மாற்றியிருப்பார்கள். மணிப்பூர் மக்கள் யாரும் அவரை விரும்பவில்லை. ராகுல் காந்தி யாருக்கும் ஃப்ளையிங் கிஸ்  கொடுத்தது போல் வீடியோவில் தெரியவில்லை. ஆனால் இவர்கள் பொய்யைப் பரப்புகின்றனர். மணிப்பூரில் அவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தை விட்டுவிட்டு, எந்த விஷயத்துக்காக இவர்கள் சபாநாயகரிடம் புகார் கொடுக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். சொந்த மக்களையே இவர்கள் இன அழிப்பு செய்கிறார்கள். 

 

பிரதமரைப் பேச வைப்பதற்காகத் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர் பேசுவதற்கு தயாராக இல்லை. பஸ்ஸில் 10 கிலோமீட்டர்கள் சென்றுவிட்டு வெறும் 2 கிலோமீட்டர்கள் மட்டும் நடப்பது தான் அண்ணாமலையின் நடைபயணம். இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு என்ன மக்கள் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? சிலிண்டர் விலையை உயர்த்தியது, மக்கள் சொத்துக்களை அதானியிடம் கொடுப்பது தான் சாதனையா? இவர்கள் வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார்கள். இவர்கள் நாட்டை மொத்தமாகக் கொள்ளையடிக்கிறார்கள்.

 

 

 

Next Story

“இளம்பெண்கள் கடத்தல்; மோடி ஊரில் நடக்கும் அவலம்” - பியூஷ் மனுஷ்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Piyush Manush  Interview

 

குஜராத் மாநிலத்தில் பெண்கள் கடத்தப்படும் சம்பவம் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து நம்மோடு சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் பேசியதாவது: “குஜராத் மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெண் சிசுக் கொலை அங்கு அதிகம் நடக்கிறது. பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். ஆனால், வட இந்திய மக்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியாது. அவர்களுக்கு மதம் தான் முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இருந்தன. பாஜக ஆட்சியில் தீமைகள் மட்டும் தான் இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 40000 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் எதன் மீதும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கிகளுக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு மட்டும் தான் அரசியல். ஏழை மக்கள் இருக்கும் பகுதிகளை எப்போதும் தடுப்பு வைத்து மறைக்கவே விரும்புபவர் மோடி. அவருக்கு இதுபற்றியெல்லாம் கவலை இருக்காது. மணிப்பூரில் கலவரத்தால் இவ்வளவு பேர் இறந்த பிறகும் மோடிக்கு கர்நாடக தேர்தலின் மீதுதான் ஆர்வம் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அவருடைய பக்தர்கள் கைதட்டுவார்கள். உக்ரைன்-ரஷ்யா போரைக் கூட அவரால் நிறுத்த முடியும் என்று நம்புவார்கள். 

 

மணிப்பூரில் நடைபெறும் கலவரம் பாஜக உருவாக்கியது தான். கலவரம் குறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்கவே இல்லை. கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரும் பிசியாக இருந்தனர். மோடிக்கு இந்து பெண்கள் பற்றிக் கவலையில்லை. அவர்களின் கல்விக்கு நீட் மூலம் தடை போட்டுள்ளார். பெண்களின் முன்னேற்றத்துக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலைச் சுற்றி மட்டும் தான் அவருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய பிரச்சார அணிவகுப்பில் மக்களையே காண முடியவில்லை. கட்சிக்காரர்களே நின்று பூக்களை அவர் மேல் தூவுகின்றனர். மத ரீதியான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இவர்கள் ப்ரமோட் செய்கின்றனர். 

 

தமிழ்நாடு குறித்து மணிஷ் காஷ்யப் அவதூறு பரப்பி வருவதை முதன்முதலில் நான் தான் வெளிப்படுத்தினேன். அந்த நேரத்தில் அவர்களால் முடிந்த அளவு அவதூறு செய்திகளைப் பரப்பினர். அதன் பிறகு மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டான். அவனுக்கு தண்டனை வாங்கித் தருவது தான் அடுத்து என்னுடைய வேலை. இதுபோன்ற ஆர்எஸ்எஸ் நபர்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்தத் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்.”