Skip to main content

'இன்று காஷ்மீர்... நாளை தமிழ்நாடு' கொதிக்கும் பீட்டர் அல்போன்ஸ்..!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019


காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370 உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை மத்திய அரசு நேற்று நீக்கியது. மேலும், மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை தற்போது ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நம்முடைய பல்வேறு கேள்விகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அதிரடியாக பதிலளித்தார்.
 

peter




காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. மாநிலமாக இருந்த அது தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இதை குறித்து உங்களின் பார்வை என்ன?

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அதிகார விதிமீறல் செய்துள்ளது. ஒரு மாநில அந்தஸ்து பெற்றுள்ள காஷ்மீரை எதற்காக இப்படி துண்டாட வேண்டும். இது இன்று காஷ்மீருக்கு நடக்கிறது. நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கும் இந்த அநீதி நடக்க வாய்ப்பிருக்கிறது. தங்களுக்கு எங்கெல்லாம் தேர்தல் ஆதாயம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகார மீறலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. ஒரு மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர விரும்பினால், அங்குள்ள தலைவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த விதிகளையும் மத்திய அரசு பின்பற்றவில்லை.

காஷ்மீரை பிரிப்பதால் அங்கு தொழில் வளம் மேம்படும் என்றும், காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறதே?

இதை பற்றி நாம் எதுவும் கூற இயலாது. காஷ்மீர் மக்கள்தான் அதை பற்றி தெரிவிக்க வேண்டும். ஆனால், மாநிலங்களின் குரலை ஒடுக்கநினைக்கும் அவர்கள், மக்களுக்கு நல்லது செய்துவிடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாம் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பதும், பாண்டிச்சேரி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பது ஒன்றா? நமக்கு தேவையான நிதியையும், உரிமைகளையும் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எடுத்து வைப்பார்கள். மாநிலங்கள் துண்டாடப்படும் போது அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது. தங்களுக்கான உரிமைகளை அவர்கள் போராடினால் கூட பெறமுடியாத சூழ்நிலை ஏற்படும். மாநில நலன் சார்ந்த திட்டங்களை மாநில தலைவர்களால் உருவாக்க முடியாது. அனைத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்க்கும் நிலை ஏற்படும். மாநிலங்கள் முனிசிபாலிட்டி போன்று குறுக்கப்படுவதால் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக அந்த மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதே உண்மை.

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் நேரு காலத்தில் வழங்கப்பட்டது. அந்த அனுமதி வழங்கப்பட்டு 70 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. கால சூழ்நிலைகள் மாறிவிட்டது. ஒரே நாட்டில் இரண்டு கொடிகள், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் பொருந்தாது என்பது போன்ற பல்வேறு சூழ்நிலைகள் இந்த சட்டத்தின் மூலம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்களே? 

காஷ்மீருக்கு எதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்த போது ஆங்கில அரசு பல்வேறு சிறப்பு உரி்மைகளை கொடுத்தது. நீங்கள் பாகிஸ்தானோடு செல்கிறீர்களா, இந்தியாவோடு இருக்கிறீர்களா அல்லது தனிநாடாக இருக்கிறீர்களா என்று அவர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அளித்தார்கள். ஆனால், அவர்கள் நாங்கள் மதசார்பற்ற இந்தியாவோடு இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதன்படி அவர்கள் இந்தியாவோடு இணைந்தார்கள். அதையும் தாண்டி காஷ்மீர் முஸ்லிம்கள் தனித்துவம் மிக்கவர்கள். அவர்கள் மற்றவர்களோடு தங்களை தனிமைப்படுத்தியே எப்போதும் வைத்திருக்க விரும்புவார்கள். மேலும் இயற்கை வளங்களை அவர்கள் பெரிதும் நேசிப்பார்கள். ஆதலால், அவர்கள் வைத்த கோரிக்கைகளை அடுத்து அவர்களுக்காக அப்போதைய காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லா உடன் பேசி இந்த சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதை தற்போதைய பாஜக அரசு நசுக்க பார்கிறது. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இதை எந்தமாதிரியாக பார்க்க போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

 

 

Next Story

''7 பேர் விடுதலைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை''-பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

'' There is no objection to the release of 7 people '' - Interview with Peter Alphonse!

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்வதில் காங்கிரஸிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் நிர்வாகியும், சிறுபான்மையினர் ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

 

இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''அரசாங்கம் ஒரு முடிவெடுத்து நீதிமன்றம் அதை அங்கீகரித்து சிறையிலேயே நீண்ட நாட்கள் இருக்கின்றவர்களுக்கு ஒரு அளவுகோல் வைத்து 20, 25, 30 வருடம் எனச் சிறையில் இருப்பவர்கள் எல்லாரையும் விடுவதாக முடிவு செய்தால் விட்டு விட்டுப் போகட்டும். அரசாங்கம் ஒரு முடிவெடுத்து இத்தனை வருடங்கள் சிறையில் தண்டனை பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்று முடிவெடுத்து வெளியே விட்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்களுடைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் பேசியிருக்கிறார், அகில இந்தியத் தலைவரும் பேசியிருக்கிறார். நீதிமன்றமோ அரசோ முடிவெடுத்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை'' என்றார்.

 


 

Next Story

சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸைச் சந்தித்த தமிமுன் அன்சாரி! 

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

Tamimun Ansari meets Peter Alphonse

 

சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அளித்தார். அப்போது துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநிலச் செயலாளர் சீனி முகம்மது ஆகியோரும் உடனிருந்தனர்.

 

கல்வி விழிப்புணர்வு, பொருளாதார மேம்பாடு, நல்லிணக்க நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் இதில் விவாதித்தனர். பின்னர் கோவை மாநகர மஜக-வினர் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நல கோரிக்கை மனுக்களும் அவரிடம் அளிக்கப்பட்டது. விரைவில் முதல்வரை சந்திக்கும் போது இவை குறித்து எடுத்துக் கூறுவதாக ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தச் சந்திப்பில் ஐ.கே.பி. மாநிலச் செயலாளர் இஷாக், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எச்.அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் டி.எம்.எஸ்..அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஏ.டி.ஆர்.பதுருதீன், சிங்கை சுலைமான் மற்றும் மனித உரிமை ஆர்வலர் காதர் ஆகியோர்களும் உடனிருந்தனர்.