Skip to main content

அமரைத் தொடர்ந்து அண்ணாமலை? நீதிமன்றம் கொடுத்த அனுமதி!

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Permission given by the court.. Annamalai arrested?

 

சமூக ஆர்வலரான பியூஷ்மனுஷ் கடந்த 2022ம் ஆண்டு அக்.23ம் தேதி சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், “கடந்த தீபாவளி நேரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு யுடியூப் பேசனுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில், ‘தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என கிறிஸ்துவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளன’ எனத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து விசாரித்தபோது, டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் அர்ஜூன் கோபால். 

 

இவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அண்ணாமலை வேண்டுமென்றே இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தவறான தகவலை பரப்பிவிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இதன் காரணமாக பியூஷ் மனுஷ், சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த சேலம் நடுவர் நீதிமன்றம், அண்ணாமலை மீது வழக்கைப் பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதையொட்டி, அண்ணாமலை மீது வழக்கு தொடுக்க, சேலம் ஆட்சியர் அரசிடம் அனுமதி கேட்க, அரசும் தற்போது அதிரடியாக அனுமதி வழங்கி அண்ணாமலை தரப்புக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. 

 

பா.ஜ.க., மாநில நிர்வாகிகளில் ஒருவரான அமர் பிரசாத் ரெட்டி மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்திருக்கும் நிலையில், அவர் மீதான வழக்குகளிலும் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் இருக்கின்றன. இந்த சூழலில், பியூஷின் வழக்கும் அவருக்கு எதிராக, வலுவாக வடிவெடுத்திருக்கிறது. எனவே, அண்ணாமலை விரைவில் கைதாகலாம் என்று அவர் தரப்பைச் சேர்ந்தவர்களே பேசிக் கொள்வதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

 

சார்ந்த செய்திகள்