Skip to main content

அவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி, 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் திகார் ஜெயிலிலிருந்து விடுதலையான ராஜ்யசபா எம்.பி. ப.சிதம்பரம், மறுநாளே பாராளுமன்றம் சென்றார். மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சியை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இருநாட்கள் பாராளுமன்றத்திற்கு விடுமுறை என்பதால், கடந்த சனிக்கிழமையன்று சென்னை வந்த ப.சி. விமான நிலையத்தில் மீடியாக்களிடம் பேசிய போது, மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் விளாசியதோடு, இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உஷார்படுத்தினார்.
 

congress



அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை தனது சொந்த மாவட்டமான சிவகங்கைக்குப் போகும் திட்டத்துடன், ஞாயிறு காலை 10.40க்கு திருச்சி விமானநிலையம் வந்திறங்கினார்கள் ப.சி.யும் அவரது மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும். சரியாக நண்பகல் 12 மணிக்கு திருமயம் வந்திறங்கிய ப.சி.க்கும் கார்த்திக்கிற்கும் மேளதாளம், அதிர்வேட்டு வரவேற்பு என தூள் கிளப்பினார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். ப.சி.யின் வருகை குறித்து ஏற்கனவே காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்லியிருந்ததால், கட்சித் தொண்டர்களும் மக்களும் அதிகளவில் திரண்டிருந்தனர்.

திருமயம் மலைக்கோட்டையில் இருக்கும் கோட்டை பைரவர் கோவிலுக்குச் சென்ற ப.சி.க்கும் அவரது மகனுக்கும் பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர் கோவில் அர்ச்சகர்கள். கண்மூடி மனமுருக பைரவரை வேண்டி நின்ற ப.சி.யிடம் "இந்தாங்கோ விடலைக்(தேங்காய்) காய். அத்தனை பிரச்சனைகளும் தீர இத சுக்குநூறா உடையுங்கோ' என அர்ச்சகர் சொன்னதும், வலது கையை ஆவேசமாக தூக்கி தேங்காயை சுக்கு நூறாக உடைத்தார் ப.சி.

தன்னை வரவேற்க காத்திருந்த அடிமட்டத் தொண்டர்களிடம் நெருங்கிச் சென்று, சிலரது பெயரைச் சொல்லி அன்புடன் பேசிய ப.சி.க்கு கைத்தறித் துண்டுகளும் மாலைகளும் அணி விக்கப்பட்டன. இது குறித்து அங்கிருந்த செந்தில் என்பவரிடம் பேசிய போது, “கைத்தறி நெசவாளர்கள், பூக்கட்டுபவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து எப்போதுமே கைத்தறித்துண்டுகளையும் மலர் மாலைகளையும்தான் வாங்குவார். ஆனால் இப்போது சால்வைகளையும் வாங்கியது எங்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. முன்னெல்லாம் அவரைப் பார்க்கணும்னா பல செக்போஸ்ட்டுகளைத் தாண்டிப் போகணும். ஆனா இனிமே அப்படி இருக்காது'' என்றார் உற்சாகத்துடன்.


திருமயத்தில் திரண்ட மக்களிடமும் தொண்டர்களிடமும் விடை பெற்றுவிட்டு, நேராக காரைக்குடி சென்றார் ப.சி. பழைய பேருந்து நிலையத்தில் பெருந்திரளாக திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், மேளதாளம், ஆடும் குதிரை வரவேற்பு என ஜமாய்த்தனர். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார் ப.சி. அங்கே ஏராளமான மீடியாக்கள் குவிந்திருந்தன. மீடியாக்கள் கேள்விகளை ஆரம்பிக்கும் முன்பே பேச ஆரம்பித்தார்.

"இன்று நடப்பது தர்மயுத்தம். ஏழு மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற மோடி அரசு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இப்போதைய நிலைமையே வேறாக உள்ளது. இந்த அரசு என்ன சொல்கிறதோ அதைத் தான் அனைவரும் செய்ய வேண்டும். அவர்கள் சாப்பிடச் சொல்வதை சாப்பிட வேண்டும், அவர்கள் பேசும் மொழியைப் பேச வேண்டும். இதையெல்லாம் எதிர்த்துக் கேட்டால், சமூக வலைத்தளங்களில் கருத்தைச் சொன்னால் தேசத்துரோகிகள். இப்படிப்பட்ட சர்வாதிகார பாணியில் செல்வதால்தான் நாடு பொருளாதார சீரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.


இதை எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்? மக்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்த்துப் பேசுவேன், போராடுவேன், எழுதுவேன்'' என சரமாரியாக வெடித்தவர், "அதிகாரிகள் வர்க்கம் துணிவோடு தங்களது கருத்தை ஆள்வோருக்குச் சொல்ல வேண்டும். அப்போதுதான் அரசு நெறிப்படும். இப்போது நாடு தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. வெங்காயம் சாப்பிடுபவர்கள் எல்லாம் உயர்ந்த மனிதர்கள் அல்ல. 1 லட்சம்கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தப் போகிறார்கள். இன்னும் பத்து நாட்களில் மக்கள் மீது புது வரி பாயப் போகிறது. அதனால் சொல்கிறேன்.

இளைஞர்கள், படித்தவர்கள் மத்தியில் புரட்சி எண்ணம் வரவேண்டும். அந்த எண்ணம் வந்தாலொழிய இந்த மத்திய அரசு மாறாது'' என கோபாவேசத்துடன் தனது பேட்டியை முடித்தார் ப.சி. பின்னர் மானகிரியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுக்கச் சென்றார் ப.சி. இதற்கிடையே திகார் சிறையில் இருந்த 106 நாட்கள் இதுகுறித்து, "அச்சமில்லை அச்சமில்லை' என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார் ப.சிதம்பரம். அந்த புத்தக வெளியீட்டு விழா, 2020 ஜனவரி 10—ஆம் தேதி சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடக்க உள்ளது.

 

CAB



 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.