Skip to main content

"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரம், பெயில் கேட்டு டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது டெல்லி ஹை கோர்ட்.

 

congress



நீதிமன்றம் வலியுறுத்திய வசதிகளைக் கடந்து சிறப்பு வசதிகள் எதுவும் சிறையில் சிதம்பரத்திற்கு கொடுக்கப்படவில்லை. இரும்புக் கட்டிலில் தான் படுத்துறங்குகிறார். முதல் இரண்டு நாள் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்ட அவருக்கு, தற்போது அது பழகிப்போனது. தினமும் காலை, மாலை இரு வேளைகளில் நடைப்பயிற்சி செய்யும் போது, பொருளாதார குற்றங்களை செய்து சிறையில் இருக்கும் கிரிமினல்கள் பலரும் அவருக்கு வணக்கம் வைத்து சினேகம் வைத்துக்கொள்கிறார்கள். தம்பி (கார்த்தி சிதம்பரம்) இங்கே இருக்கும்போது எங்களுக்கு அவர் நல்ல நண்பராக இருந்தார் என சிதம்பரத்திடம் சிறைவாசிகள் பலரும் சொல்லியுள்ளனர். அவர்களிடம் இயல்பாகப் பேசத்துவங்கியிருக்கும் சிதம்பரம், ஒவ்வொருவரின் கதையையும் கேட்டு தெரிந்து கொண்டதுடன், 'நான் வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்' என நம்பிக்கை கொடுத்திருக்கிறாராம் சிதம்பரம்.

 

congress



இந்த சூழலில், வழக்கறிஞர்களும் சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தியும் தனித்தனியாக சிதம்பரத்தை சந்தித்துள்ளனர். அப்போது, "உடனடியாக பெயில் கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை. இன்னும் சில நாட்கள் இங்கேயே இருக்க வேண்டியது இருக்கும்' என வருத்தத்துடன் சொன்னதாக டெல்லியிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கிடையே, "சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்கிற சூழல் வரும்போதுதான் சிதம்பரத்திற்கு பெயில் கிடைக்க வாய்ப்பு உண்டு' என்கிற சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள், ஒரு வேளை பெயில் கிடைக்கும்பட்சத்தில் உடனடியாக சிதம்பரத்தை கைது செய்ய காத்திருக்கிறது அமலாக்கத்துறை என்கின்றனர்.
 

congress



இந்த நிலையில், சிதம்பரத்தின் சிறை வாழ்க்கையை ஓரிரு மாதங்களுக்கு இழுத்துச் செல்ல துடிக்கும் மத்திய அரசு, சிதம்பரத்தின் மகன் கார்த்திசிதம்பரத்தின் எம்.பி. பதவியை குறி வைத்து காய்களை நகர்த்தி வருவதை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறது சிதம்பரத்தின் குடும்பம். இது குறித்து விசாரித்தபோது, சென்னை முட்டுக்காடு கிராமத்தில் சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு சொந்தமாக 1 ஏக்கர் 16 சென்ட் நிலம் இருந்தது. இதன் பங்குதாரர்களாக கார்த்தியும் அவரது மனைவி ஸ்ரீநிதியும் இருந்தனர். இந்த நிலத்தை கடந்த 2015-16 காலகட்டத்தில் விற்பனை செய்தது சிதம்பரத்தின் குடும்பம்.
 

congress



தமிழக அரசுக்கு பருப்பு, முட்டை சப்ளை செய்த பிரபல கிறிஸ்டி ஃபுட் நிறுவனம்தான் இந்த நிலத்தை வாங்கியது. ஆனால், நேரடியாக அந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்தது போல எந்த ஆவணங்களும் இருக்கக் கூடாது என திட்டமிட்ட கார்த்தி சிதம்பரம், பிரபல தொழிலதிபரான ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷிடம் விற்பனை செய்தார். இதனையடுத்து, அந்த நிலம் கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்திற்கு மடை மாற்றப்பட்டது. நிலத்தை விற்பனை செய்த வகையில் கார்த்தி சிதம்பரத்திற்கு வருமானமாக கிடைத்தது 3 கோடியே 65 லட்ச ரூபாய். இந்த தொகையை செக் மூலம் கொடுத்திருந்ததால் அதனை வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டியிருந்தார் கார்த்தி. அதற்குரிய வரியும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த நில பரிவர்த்தனை விவகாரத்தில் 1 கோடியே 35 லட்ச ரூபாய் பணமாக கைமாறியிருக்கிறது. அதனை கார்த்தி சிதம்பரம் கணக்கு காட்டாததால் வரியும் கட்டவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், கிறிஸ்டி ஃபுட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2017-ல் அந்நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தியது வருமானவரித்துறை. அப்போது கிடைத்த பல ஆவணங்களில் முட்டுக்காடு நிலத்தை வாங்கிய நிலம் தொடர்பான டாகுமெண்ட்டுகளும் அடங்கும். இதனையடுத்து, தொழிலதிபரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கார்த்தி சிதம்பரத்திற்கும் அவரது மனைவி ஸ்ரீநிதிக்கும் சொந்தமான நிலத்தை வாங்கி கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்துக்கு விற்றதாகவும், அப்படி விற்பனை செய்ததில் 3.65 கோடி ரூபாய் வெள்ளையாகவும், 1.35 கோடி ரூபாய் கறுப்பாகவும் கொடுத்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீது வருமானவரித்துறை 2018-ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நிச்சயம் அவர் தப்பிக்க முடியாது'' என்கிறது வருமானவரித்துறை வட்டாரம்.


இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ள அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, வருமான வரித்துறை வழக்கில் சிதம்பரத்தின் குடும்பம் தண்டிக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் மேலும் பல வில்லங்கங்கள் இருப்பதால் இவ்வழக்கை சி.பி.ஐ.யும் எடுத்து விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறையில் புகார் தெரிவித் திருக்கிறேன் என்கிறார்.

இந்த சூழலில், கார்த்தி சிதம்பரம் எம்.பி.யாகிவிட்டதால், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அடங்கிய மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, எழும்பூர் பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்திலிருந்து கார்த்தியின் வழக்கு அண்மையில் மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் கார்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பதிவாளரும் அது குறித்து விரிவான பதிலை தாக்கல் செய்த நிலையில், கடந்த 9-ந்தேதி இவ் வழக்கு விசாரணைக்கு வந்த போது, கிரிமினல் வழக்குகளை எந்த ஒரு கோர்ட்டிலிருந்தும் மற்றொரு கோர்ட்டுக்கு மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறது என சொல்லி கார்த்தியின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் விரைவில் தீர்ப்பளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் நீதிபதி ஆதிகேசவலு.

நீதிபதியின் கருத்துக்கள் சிதம்பரம் குடும்பத்தினரை பலகீனப்படுத்தியிருக்கிறது. இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசியபோது, "வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்ட போது நான் எம்.பி.யாக இல்லை. அதனால் சிறப்பு நீதிமன்றத்துக்கு எனக்கு எதிரான வழக்கை மாற்றியது தவறானது என்கிற கார்த்தியின் கோரிக்கை நிச்சயம் தள்ளுபடியாகும். அதேசமயம், இவ்வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க டெல்லியிலிருந்து அழுத்தம் தரப்பட்டு வருவதால், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வேகம் எடுத்திருக்கிறது. ஆக, வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு 2 வருடங்களுக்கு அதிகமாக தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அவருடைய எம்.பி.பதவி பறி போகும். சி.பி.ஐ. மூலம் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பிய மோடி அரசு, கார்த்தியின் எம்.பி. பதவியை பறிக்கும் திட்டத்துடன் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறது. இதனால் இவ்வழக்கு சிதம்பரம் குடும்பத்தினரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். சிவகங்கை எம்.பி. தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்துவதில் குறியாக இருக்கிறது மோடி-அமித்ஷா கூட்டணி.
 

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.