Skip to main content

அனைத்து தொகுதிகளிலும் வென்றதும் உண்டு தோற்றதும் உண்டு... பாமகவின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரலாறு!

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

pmk


2019 நாடாளுமன்ற தேர்தல், யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு மீதும் மாநில அரசு மீதும் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது என்று சொல்லப்படும் நிலையில் அதிமுக எந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது என்ற கேள்வி இருக்கிறது. 
 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல். இந்தத் தேர்தலில் கண்டிப்பாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்ததற்கு ஏற்ப, பாஜகவின் தமிழக பொறுப்பாளரான பியூஷ் கோயல் கடந்த வாரம் ஒரு நாள் நள்ளிரவில் தமிழகம் வந்து, அதிமுக தொகுதி பங்கீட்டாளர் குழுவை சந்தித்துவிட்டு சென்றார். இன்று காலை பாமகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. திடீரென அடையாரிலுள்ள க்ரௌண் பிளாஸா ஹோட்டலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசி பின்னர் கூட்டணியை உறுதி செய்துள்ளனர். பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வருவதற்கு முன்பு பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். அதை உடைக்கும் வகையில் தற்போது அதிமுகவும் பாமகவும் கூட்டணியில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

பாட்டாளி மக்கள் கட்சி 1989ஆம் ஆண்டு ராமதஸால் உருவாக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல்களில் 1991ஆம் ஆண்டிலிருந்து போட்டியிட்டாலும் 1996ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.  அப்போது மதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமை வகித்த திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாமக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. சுமார் 15 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது, ஆனால் ஒரு தொகுதியில் கூட  வெற்றி பெறவில்லை. 
 

மத்தியில் தேவ கௌடாவின் ஆட்சி கவிழ்ந்தபின் 1998ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுகவுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது பாமக. இந்தத் தேர்தலில் பாமக 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார்.
 

இந்த ஆட்சி 13 மாதங்களிலேயே கவிழ, திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. இதற்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பாமக இந்தத் தேர்தலிலும் அதையே தொடர்ந்தது. இத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணியும் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றார்.
 

2004ஆம் ஆண்டு தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி வைத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஐந்து தொகுதிகளிலுமே வெற்றிபெற்றது. மத்தியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது. மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி ஏற்றார்.
 

2009ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கடைசி கட்டத்தில் கூட்டணி வைத்து பாமக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாமல் போனது. அதிமுக தலைமையில் உருவான இந்த கூட்டணி, தேசிய கட்சிகளுடனான கூட்டணியில் சேராமல், தேர்தலுக்குப் பின்பே பாஜகவுக்கு ஆதரவு அளித்தது.
 

2014ஆம் ஆண்டில் பாமக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் பாஜக-தேமுதிக-மதிமுக-ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தமிழகத்தில் கூட்டணி அமைத்தது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் பாமகவும், மற்றொன்றில் பாஜகவும் வெற்றிபெற்றன. பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார். மத்தியில் பாஜகதான் ஆட்சியும் அமைத்தது, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.
 

இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரலாறு. பாமக, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல முறை இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றும் தனித்தே போட்டியிடுவோம் என்றும் கூறி வந்துள்ளது. அது போல ஓரிரு சட்டமன்ற தேர்தல்களில் செயல்பட்டும் உள்ளது. இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல்களை கூட்டணியுடன்தான் சந்தித்து வருகிறது. பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் மத்திய அமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர். இந்த முறை பாமக எடுத்துள்ள கூட்டணி முடிவு அதற்கு எத்தகைய பலன்களை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.