Skip to main content

கட்சி! சின்னம்! -ரஜினியின் சீக்ரெட் விசிட்!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020
ddd

 

கட்சிப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டவுடன் ரஜினி சென்ற இடம், தனது சூப்பர் ஸ்டார் வாழ்க்கைக்கு முந்தைய இடமான பெங்களூரு. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் ரஜினி குடும்பத்தின் மூத்த உறுப்பினரான அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாடு, பெங்களூரு நகரில் உள்ள மைசூர் சாலையில் பசவன்குடி என்கிற இடத்தில் குடியிருக்கிறார். அவரது மனைவி கடந்த வருடம் இறந்துபோனார். அதற்கு வந்த ரஜினி, மறுபடியும் சத்தியநாராயணாவை ஒரு வருடம் கழித்து இப்பொழுதுதான் பார்க்கச் சென்றிருக்கிறார்.

 

MICO  என்கிற கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற சத்தியநாராயணா, ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என பலரும் சொல்லி வந்த நிலையில் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என உறுதிபட சொல்லி வந்தவர். கர்நாடகாவில் செல்வாக்குப் பெற்ற பாஜக தலைவர்கள் மூலம் மராட்டியதைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தொடர்பு வைத்திருக்கும் சத்தியநாராயணா, ரஜினிக்கு அரசியலில் மட்டுமின்றி, ஆன்மிகத்திலும் வழிகாட்டியாக இருப்பவர்.

 

பெங்களூருவில் வாழும் மராட்டிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சதாசிவ நகரில் ஆன்மீக குருவாக திகழும் அந்த பெரியவர் முக்கியமானவர். ரஜினிக்கும் நெருக்கமானவர். அண்ணனும் தம்பியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். ரகசியமாக நடந்த இந்த ஆன்மீக சந்திப்பு ரஜினியின் சொந்த ஊர் அடங்கியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியிலும் எதிரொலித்தது.

 

கர்நாடகா, ஆந்திரா எல்லையான அந்தத் தொகுதியில் மராட்டியர்களும், கன்னடர்களும் அதிகம் வசிக்கின்றனர். அந்த தொகுதியை மையப்படுத்தி ஏகப்பட்ட கதைகள் ரஜினியின் வருகையையொட்டி கன்னட மீடியாக்களில் எதிரொலித்தது. பெரிய சேனல் முதல் லோக்கல் சேனல்கள் வரை பெங்களூருவிலும் வேப்பனஹள்ளியிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிக் கதையை ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.

 

ரஜினி தனது சொந்த கிராமத்திற்கு ஒரு குடிதண்ணீர் டேங்க் அமைத்துக் கொடுத்துள்ளார். அங்குள்ள அவரது ஆதரவாளர்கள், ரஜினி எங்கள் மண்ணின் மைந்தர். அவர் வேப்பனஹள்ளியில் போட்டியிட்டால் நாங்கள் அவரை வெற்றிபெற செய்வோம் என கன்னடத்திலும், மராட்டிய மொழியிலும், தெலுங்கிலும் தமிழிலும் பேட்டி அளித்துக்கொண்டிருந்தனர்.

 

பெங்களூருவை கலக்கிய ரஜினி விசிட்டின்போதே டெல்லி பரபரப்படைந்தது. டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ரஜினி சார்பாக சென்ற வழக்கறிஞர் ஒருவர் ரஜினியின் கட்சியை சைலண்டாக பதிவு செய்வதாக தகவல் கசிந்தது. பாஜக என்பது மூன்று எழுத்து. அதேபோல ரஜினி தன் கட்சிக்கும் மூன்று எழுத்து அடங்கிய நான்கு பெயர்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். அத்துடன் பாஜகவின் சின்னம் தாமரை, தாமரை போலவே பூ ஒன்றை சின்னமாக கேட்டு தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்திருக்கிறார்.

 

ரஜினி கேட்ட சின்னத்தில் ஒன்று ரோஜா மலர் என டெல்லி தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என தேர்தல் வட்டாரத்தில் கேட்டோம். ரஜினி சார்பில் கொடுத்துள்ள கட்சிப் பெயர்களை நாங்கள் பரிசீலிப்போம். அவர் கொடுத்த பெயரில் வேறு ஏதாவது கட்சிப் பெயர் இருக்கிறதா? அரசியல் கட்சி வேறு ஏதாவது பதிவு செய்யப் பட்டுள்ளதா என ஆராய்வோம். அப்படி ஏதாவது ஒரு கட்சி ரஜினி கொடுத்த பெயரில் பதிவு செய்யப்படாவிட்டால், அந்தப் பெயரிலேயே அவர் கட்சி தொடங்க பதிவு செய்வோம். அதேபோல் ரஜினி கொடுத்த சின்னமான ரோஜா உள்பட மலர்களின் சின்னம் ஏதாவது தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்வோம்.

 

ரஜினி கட்சியை பொறுத்தவரை ஒரு சுயேச்சை கட்சி. எனவே ஒரு குறிப்பிட்ட சின்னத்தை எப்படி வழங்குவது என்பதில் ஏகப்பட்ட நடைமுறைகள் இருக்கிறது. இவை அனைத்தையும் ஆராய்ந்த பிறகு ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் வழங்கப்படும். இதற்கு சராசரியாக 30 நாட்கள் தேர்தல் கமிஷன் அவகாசம் எடுத்துக்கொள்வோம் என்கிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.

 

இதற்கிடையே ரஜினிக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டும். அவர் என்ன பெயரை கேட்கிறாரோ, அந்தப் பெயரை கொடுக்க வேண்டும். என்ன சின்னத்தில் அவர் போட்டியிட விரும்புகிறாரோ அதே சின்னத்தில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என மத்திய பாஜக அரசிடம் இருந்து அழுத்தங்கள் வருவதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள், தெரிவிக்கின்றன. இதற்கிடையே சென்னைக்கு திரும்பிய ரஜினி, மன்றம் சார்பில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகியோர் படம் போட்டு எந்த போஸ்டரும் அடிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

 

ரஜினி தனிப்பட்டமுறையில் பலரை சந்தித்து அரசியல் குறித்து விவாதித்து வருகிறார். ஆடிட்டர் குருமூர்த்தி வழக்கம்போலவே நான் கட்சி கொள்கை, தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசு தொடர்பு ஆகியவற்றை பார்த்துக் கொள்கிறேன் என களம் இறங்கியுள்ளார்.

 

கரோனா காலம் ரஜினி மிகவும் கவனமாக இருந்தார். ஒருமுறை ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்ய போலீஸார் வந்தனர். அவர்களைக்கூட ரஜினியின் குடும்பத்தார் கரோனா பயம் காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ரஜினிக்கு நெருக்கமான நண்பராக இருந்த சினிமா விநியோகஸ்தரான தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தது ரஜினியை பெரிதும் பாதித்திருக்கிறது.

 

பா.ஜ.க தரப்பிலோ, இந்த பயத்தை நீக்கும் வகையில் நிதின் கட்கரி தரப்பிலிருந்து பேசப்பட்டுள்ளதாம். இங்கிலாந்தில் இப்பொழுது நடைமுறையில் கொண்டுவரப்பட்ட கரோனா தடுப்பு ஊசியை நாங்கள் தூதரகம் மூலம் இறக்குமதி செய்து உங்களுக்கு தருகிறோம். அதை போட்டுக்கொண்டால் கரோனா குறித்த அச்சம் தேவையில்லை என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் என்று ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே "அண்ணாத்த' பட வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள ரஜினி ஒரு மாதத்திற்கு பிறகு அரசியலுக்கு வரும்போது அவரை ஸ்டாலின், எடப்பாடி ஆகியோருக்கு போட்டியாக முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பாரா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் காணப்படுகிறது.

 

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை என்றால், அவரது அரசியல் கட்சி மீது ரசிகர்களுக்கே ஈர்ப்பு ஏற்படுமா என்பதும் ஆய்ந்து அலசப்படுகிறது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளில் உள்ள ரஜினி ஆதரவாளர்களான வி.ஐ.பி.க்கள் மதில்மேல் பூனையாக காத்திருக்கிறார்கள்.

 

 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!