Skip to main content

தேர்தலை சந்திக்க திராணியற்றவர்கள்... கட்சியின் மூத்த தலைவரை விளாசிய தமிழக எம்.பி.

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
dddd

 

வெளிப்படையான எதிரியை வெற்றிகொள்ளும் வலிமை இல்லை. உள்ளுக்குள்ளேயே உருவாகும் எதிரிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியவில்லை. இதுதான் காங்கிரசின் அகில இந்திய நிலை. கடும் நெருக்கடியில் இருக்கிறார் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.

 

நேரு குடும்பத்துக்கு வெளியே இருந்து தலைவரை தேர்வு செய்யுங்கள் என்பதை வலியுறுத்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து கடந்த 2019-ல் விலகினார் ராகுல்காந்தி. அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டியும் தலைவராக ராகுல்காந்தியை தேர்ந்தெடுத்த பிறகும் தலைவர் பதவியை அவர் ஏற்கவில்லை. இன்னமும் நிரந்தரத் தலைவரின்றித் தவிக்கிறது காங்கிரஸ்.

 

நிரந்தரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இடைக்காலத் தலைவரான சோனியாவிடம் அளித்தும் அவர் இன்னும் தேர்வு செய்யாததால், தலைமைப் பொறுப்பு குறித்து பலவித கருத்துகளும் சர்ச்சைகளும் வெளிப்படுகின்றன.

 

பீஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த் திருந்தனர். ஆனால், கடுமையான தோல்வியை காங்கிரஸ் சந்திக்க, எதிர்மறை விமர்சனங்களை வைக்கத் துவங்கி யுள்ளனர் கட்சியின் மூத்த தலைவர்கள்.

 

ddd

ராஜ்யசபாவின் காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், ""தேர்தல் காலங்களில் காங்கிரசில் வேட்பாளர் தேர்வின்போது, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது. இதனால் மக்களுக்கும் காங்கிரசுக்குமான தொடர்பு அறுந்து விட்டது. மக்கள் தொடர்பை காங்கிரஸ் நிர்வாகிகள் இழந்து விட்டனர். பாஜகவிலும் இது விதிவிலக்கல்ல. இருப்பினும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூட பாஜக வேரூன்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் அப்படி இயங்கவில்லை'' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 

அதாவது, கட்சியின் மேலிடப் பார்வை யாளர்களாக அந்தந்த மாநிலங்களுக்கு செல்பவர்களை லோக்கல் பிரமுகர்கள் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து, சகல வசதிகளுடன் ஜிவ் ஏற்றி விடுகிறார்கள். அதில் மயங்கியும், லோக்கல் அரசியலில் ஒரு சார்பு நிலை எடுத்தும், மாநிலத்தில் கட்சி வளர்ச்சியைக் கண்டு கொள்ளாமல் விடுவ தால், வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டுவிடு வதால், காங்கிரசுக்கு தொடர்ந்து தோல்வி ஏற்படுகிறது என்பதுதான் குலாம்நபியின் குற்றச்சாட்டு. தமிழக காங்கிரசின் மேலிடப் பிரதிநிதி தொடர்பான இந்த ஃபைவ் ஸ்டார் கலாச்சாரம் பற்றி அண்மையில் ராங்-கால் பகுதியில் பதிவாகியிருந்தது.

 

குலாம் நபி ஆசாத் போன்ற மற்றொரு மூத்த தலைவரான கபில்சிபில், ""18 மாதங்களாக முழு நேரத் தலைவர் இல்லாத கட்சியால் பாஜகவுக்கு எதிராக வலிமையான கட்சியாக நாம் எப்படி இருக்க முடியும்'' எனக் கேள்வி எழுப்பி யிருக்கிறார். இதற்கு வலிமை சேர்ப்பது போல பேசியிருக்கும் ப.சிதம்பரம், ""குஜராத், உத்தரபிரதேசம், ம.பி. உள் ளிட்ட மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு அடிப் படை கட்டமைப்பில் வலிமை இல்லை என்பதையும், கட்சி பலவீனமடைந்து வருவதையும் நமக்கு உணர்த்துகிறது'' என விமர்சித்திருக்கிறார்.

 

பீகாரின் மூத்த தலைவர் தாரிக் அன்வர், ‘""கட்சியின் தோல்விக்கு ஒருவகையில் குலாம்நபி ஆசாத்தும் பொறுப்பேற்க வேண்டும். தோல்விக்கு தலைமை மட்டுமல்ல அனைவருமே காரணம்தான். தலைவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய தோல்வி வந்திருக்காது'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

 

ராகுலின் ஆதரவாளரும் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ""தலைமைக்கு எதிராக விமர்சிப்பவர்கள் தேர்தல் களத்திற்கே வராதவர்கள். இந்த சரிவில் இருந்து காங்கிரஸ் மீண்டும் எழும்'' என்கிறார்.

 

ddd

 

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் எம்.பி. மானிக்கம்தாகூரிடம் நாம் பேசியபோது, ’""குலாம் நபி விமர்சித்திருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல் கலாச்சாரம் அவருக்கு தெரியாததல்ல. தமிழகத் துக்கு வரும் போதெல்லாம் அந்த கலாச்சாரத்தை அனுபவித்தவர்தான். குலாம்நபியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மோடி-அமித்சாவின் அதிகாரத்தை 2024-ல் காங்கிரஸ் துடைத்தெறியும். ராகுலின் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழும். தலைமையை விமர்சிக்கும் குலாம்நபி போன்றவர்கள், கட்சி தேர்தலை சந்திக்க திராணியற்றவர்கள்'' என்கிறார் ஆவேசமாக.

 

குலாம்நபியின் விமர்சனத்திற்கு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என விசாரித்தபோது, ""வருகிற ஜனவரி மாதம் அவரது ராஜ்யசபா பதவி காலம் முடிவடைகிறது. மீண்டும் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக அண்மைக்காலத்தில் சாத்தியமில்லை. 1982-களிலிருந்தே டெல்லியில் அரசின் ஆடம்பர பங்களாவில் இருந்தே பழக்கப்பட்டு விட்டார் ஆசாத். பிப்ரவரிக்கு பிறகு அரசு பங்களாவை காலி செய்வ வேண்டும். கட்சியிலும் இனி பெரிய பிடிப்பு அவருக்கு கிடைக்காது. அதனால் பாஜகவின் விருப்பத்திற்கேற்ப இப்படி விமர்சித்து வருகிறார்'' என்கின்றனர்.

 

இதற்கிடையே, பாஜகவின் வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிக்கும் சோனியா உத்தரவிட்டி ருக்கும் நிலையில், தமிழகத்தில் இதனை வீரியமாக நடத்தி வருகிறார் கே.எஸ்.அழகிரி. பாஜகவின் வேல் யாத்திரைக்குப் போட்டியாக ஏர் கலப்பை பேரணி யை நடத்தி வரும் அழகிரி, வருகிற 28-ந்தேதி 71 தொகுதிகளில் இந்த பேரணியை நடத்த திட்டமிட் டிருக்கிறார். முக்கிய தலைநகரங்களில் இந்த பேரணியை துவக்கி வைக்கிறார்கள் காங்கிரஸ் தலை வர்கள். 234 தொகுதிகளிலும் இத்தகைய பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

 

டெல்லியில் காற்றில் மாசு அதிகரித்திருப்ப தால் கோவா அல்லது சென்னையில் தங்கியிருக்கச் சொல்லி சோனியாவுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார்கள் அவரது குடும்ப மருத்துவர்கள். இதனைத் தொடர்ந்து மகன் ராகுல்காந்தியுடன் கோவாவுக் குப் பயணப்பட்டிருக்கிறார் சோனியா. இரு வாரங்கள் அங்கு தங்கியிருக்கும் சோனியா, கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து ராகுலிடம் விவாதித்து வருகிறார். மூத்த தலைவர்களையும் காங்கிரஸ் நிர்வாகிகளையும் கட்சியின் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து அரசியல் செய்யும் சக்தி ராகுல் காந்தியைத் தவிர வேறு எந்த ஒரு தலைவருக்கும் இல்லை என்பதால் கட்சியின் முழு நேர தலைவராக ராகுலை ஏற்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார் சோனியா காந்தி.

 


 

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.