Skip to main content

மோடியின் வீர வசனத்தில் ஒளிந்திருக்கும் நடுக்கம்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

மோடியும் பாஜகவும் பேசுகிற வீர வசனங்களில், வடிவேலு பேசும் "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்" என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
 

modi

 

மைனாரிட்டி அரசாக பொறுப்பேற்ற நரசிம்மராவ் அரசு பதவிக்காலம் முடியும்போது பெரும்பான்மை பெற்றிருந்தது. ஆனால், நரேந்திரமோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் பொறுப்பேற்று பதவிக்காலம் நிறைவடைய ஒருஆண்டு இருக்கும் நிலையிலேயே பெரும்பான்மை இழந்து நிற்கிறது. இந்திய அரசியலில் இது ஒரு வித்தியாசமான வரலாற்று நிகழ்வு என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இத்தனைக்கும், இந்தியாவின் முதன்மை அமைச்சராக மோடியை முன்னிறுத்துவதற்காக, மூன்று ஆண்டுகள் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து அம்பானியும், அதானியும் கார்பரேட்டுகளுடன் இணைந்து ஒரு பிம்பத்தை கட்டமைத்தார்கள்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பெரியண்ணன் மனப்பான்மையை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்த நேரம். 2ஜி விவகாரம், ஈழப்பிரச்சனை உள்ளிட்டவற்றில் கூட்டணிக் கட்சியான திமுகவை சிக்கலில் சிக்கவைத்து வேடிக்கை பார்த்தது.


 

anna hazare

 

கார்பரேட்டுகளின் உதவியோடு, அன்னா ஹஸாரே போன்ற திடீர் ஊழல் எதிர்ப்பு போராளிகள் லோக்பாலுக்காக போராட்டம் நடத்தினார்கள். அவரோடு, பதஞ்சலி ராம்தேவ், கெஜ்ரிவால், கிரண்பேடி போன்றவர்களும் போராடினார்கள் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

(காங்கிரஸ் கொண்டுவந்த லோக்பால் மசோதாவை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் அதைப்பற்றி அன்னா ஹஸாரேவும் மற்றவர்களும் கண்டுகொள்ளவில்லை என்பதும் வேறுவிஷயம்.)

அப்படிப்பட்ட அரசு எதிர்ப்பு சூழ்நிலையில், முக்கியமான மாநிலக் கட்சிகளின் கூட்டணியோடு போட்டியிட்ட பாஜக எதிர்பாராத விதமாக 282 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. கூட்டணிக் கட்சிகளையும் இணைத்தே அமைச்சரவை பதவியேற்றது.


 

tdp, ysr


இப்போது, மோடியின் தன்னிச்சையான போக்கு, பாஜகவின் பெரியண்ணன் மனப்பான்மை, தென் மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கிற்கு எதிராக தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன.

பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலே இருந்து அந்தக் கட்சி தனது இமேஜை காப்பாற்றுவதற்காக பலவிதமான தந்திரங்களை கையாளுகிறது. குறிப்பாக தனது தோல்விகளை மறைக்க மாநில ஆளுநர்களைப் பயன்படுத்தி, சில மாநில கூட்டணி அரசுகளில் இடம்பெறுவது அதில் ஒன்று.

பாஜக சந்தித்த இடைத்தேர்தல்களின் முடிவுகளையும், மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தக் கட்சி கையாண்ட தந்திரங்களையும் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

மோடி பதவியேற்ற 100 நாட்களிலேயே இடைத்தேர்தல் தோல்விகள் தொடங்கிவிட்டன. அந்தத் தோல்விகளை மூடி மறைக்க காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவதை ஊதித் தப்பிப்பது பாஜக கடைப்பிடிக்கும் இரண்டாவது வழி.


 

modi


இந்தியாவில் பாஜக 21 மாநிலங்களை ஆட்சி செய்வதுபோல பாஜக தலைவர்கள் பெருமை அடிக்கிறார்கள். அது உண்மையா என்றால் இல்லை.

பாஜக தனித்து ஆட்சி செய்வது சில மாநிலங்களில்தான். குஜராத், சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது.

நாகாலாந்து, கோவா, அருணாச்சல பிரதேசம், அசாம், ஹிமாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், மகாராஸ்டிரா, மணிப்பூர், பிகார், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பெரிய கட்சியாகவோ, சிறிய கட்சியாகவோ கூட்டணி ஆட்சியில் பங்கேற்கிறது.

இந்த உண்மையை மறைத்து, ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்த 282 இடங்களில் 9 இடங்களை இடைத்தேர்தலில் இழந்து 273 இடங்களை மட்டுமே வைத்திருக்கும் பரிதாபமான நிலையை மறைத்து பாஜக தலைவர்கள் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், இந்நிலையில்தான், உ.பி., பிகாரில் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இவற்றில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகள் முதல்வர் யோகி, துணை முதல்வர் மவுரியா ஆகியோர் வெற்றிபெற்ற தொகுதிகள் ஆகும். பிகாரில் அராரியா தொகுதியில் லாலுவின் ஆர்.ஜே.டி. வெற்றிபெற்றதன் மூலம் பாஜகவுடன் நிதிஷ்குமார் அமைத்த கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


 

modi

 

2019 தேர்தலில் மீண்டும் மோடிதான் ஜெயிப்பார் என்று பாஜக கூறிவரும் நிலையில், இந்தத் தோல்விகள் அந்தக் கட்சியை இடிபோல தாக்கியிருக்கிறது. அதாவது, தற்போதைய நிலையில் மக்களவையில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடத்தைக் காட்டிலும் ஒரு இடம் குறைவாகவே வைத்திருக்கிறது.

பாஜகவின் இந்த நிலையையும், அந்தக் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையையும் புரிந்துகொண்ட தெலுங்குதேசம், பாஜகவுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் தங்களுக்காக போராடும் நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பவன் கல்யாணை பாஜக கொம்பு சீவியது.

“தமிழ்நாட்டில் அதிமுகவை ஆட்டிப் படைப்பதைப் போல எங்களை ஆட்டிப் படைக்க முடியாது. வரியை வாரிக் கொடுப்பது தென்மாநிலங்கள். ஆனால், வாழ்வது வட மாநிலங்களா?” என்று காட்டமாக கேட்டார் நாயுடு.

அந்தக் கட்சியின் எம்.பி. முரளிமோகன், தெற்கில் உள்ள மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்தால், தென்னிந்தியா தனிநாடாகும் என்று எச்சரித்தார்.


 

chandrababu naidu

 

இத்தகைய பரபரப்பான நிலையில் பாஜக கூட்டணியில் இருந்தே தெலுங்குதேசம் விலகுவதாக நாயுடு அறிவித்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவற்றுடன் இணைந்து மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்குதேசம் முடிவெடுத்துள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறுமா என்பதைத் தாண்டி, இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் கட்சிகளை அறிந்துகொள்ளகூடிய வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கும். மோடி தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசு என்பது வெளிப்படும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

ஆனால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவதை தடுக்கவே பாஜக அதிமுகவின் தயவை நாடியிருக்கும் அவலம் அம்பலமாகி இருக்கிறது.

அதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி அமளியில் ஈடுபடுவதைப்போல அதிமுக நாடகம் நடத்துகிறது. அதையே காரணம் காட்டி அவையை ஒத்திவைத்து பாஜக நாடகம் ஆடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கே அனுமதி மறுக்கிறது

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.