Skip to main content

"நக்கீரனால்தான் நிர்மலாதேவியின் தொடர்புகளை வெளிக்கொண்டுவர முடியும்" – அன்று பெற்றோர் வைத்த நம்பிக்கை! 

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

"நக்கீரன் நிருபரா சார்?" என்று அவர் என்னிடம் முதலில் பேசிய பொழுது அவரது குரலில் கவலையும் பதற்றமும் இருந்தது. கடந்த மார்ச் 27 நக்கீரன் இதழில் 'கோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்' என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கருவறைக்குள் பெண் பக்தர்களுடன் தவறான செயலில் ஈடுபட்டு சிசிடிவியால் மாட்டியும், விவகாரம் மறைக்கப்பட்டதை எழுதியிருந்தோம். அந்த செய்தியைப் பார்த்துதான் தனக்கு நம்பிக்கை வந்ததாகக் கூறினார் தொலைபேசியில் பேசியவர். "என்ன விஷயம் சொல்லுங்கள்" என்று நாம் சொன்னபின் அவர் கூறிய விஷயங்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இன்று தமிழகத்தையே கொதிக்க வைக்கும் அந்த விஷயத்தை முதலில் கேட்டபோது, அப்படி ஒரு ஷாக். கல்வித்துறையில், அதுவும் பெற்றோருக்கு அடுத்த இடத்தில் மாணவர்கள் வைத்திருக்கும் ஒரு பெண் பேராசிரியரே இப்படி ஒரு காரியத்தைச் செய்வாரா என்ற அதிர்ச்சிதான் அது.

 

Nirmala news


நான் அருப்புக்கோட்டை சென்றேன். மாணவி ஒருவரின் தந்தை என்று சொன்ன அவர், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு வரச்சொல்லி, என்னைச் சந்தித்தார். எச்சரிக்கை உணர்வோ என்னவோ, வாட்ஸப்பில் அனுப்பாமல், அந்த 20 நிமிட ஆடியோவை ‘ஷேர்-இட்’ மூலம்    பகிர்ந்துகொண்டார். தனது பெயரோ, புகைப்படமோ வரக்கூடாது என்று நிபந்தனையும் விதித்தார். “என் மன பாரம் நீங்கிவிட்டது; இனி எல்லாவற்றையும் நக்கீரன் பார்த்துக்கொள்ளும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

 

nirmaladevi


அந்த ஆடியோவைக் கேட்டபோது, ஒன்று புரிந்தது. எந்த ஒரு இடத்திலும் தான் பேச வந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒரு வார்த்தை கூட தவறி வெளியிடாமல், அதே நேரம் பேச வந்ததை முழுதாகப் புரிய வைத்த நுட்பமான பேச்சு அது. 'ஆப்பர்ச்யூனிட்டி', 'எல்லா வகையிலும் பேக்போனா இருக்கும்' என்று ஆசை காட்டுவதாகட்டும், 'கவர்னர் லெவல் விவிஐபி', 'வைஸ் சான்ஸ்லர்னாலே பொலிட்டிக்கல் பேக்க்ரௌண்ட் இருக்கும்', 'வெளியில சொன்னா எல்லாத்துக்கும் நெகட்டிவாக ஆய்டும்' என்று மிரட்டுவதாகட்டும் இரண்டிலும் ஒரு சைலன்ட் கில்லராக செயல்பட்டிருந்தார் அவர். "இந்தக் காலத்துல நான் சொல்ற விசயம்லாம் ரொம்ப சாதாரணம்னு உங்களுக்கே தெரியும்" என்று அழகாக ப்ரெயின் வாஷ் செய்ய முயன்றார் அவர். அவ்வளவு நேரம் பொறுமையாகப் பேச முடிகிறது என்றால் இது முதல் முறை என்பதாகத் தோன்றவில்லை எனக்கு. எத்தனை மாணவிகளை இப்படி அணுகியிருப்பாரோ, எத்தனை பேர் வெளியில் சொல்ல பயந்து புழுங்கியிருப்பார்களோ என்று நினைத்து கோபம் வந்தது. வாழ்வில் எப்படியாவது முன்னேறிவிடலாம் என்று எண்ணி ஏழை மாணவிகள் பலர் படிக்கும் ஒரு கலை கல்லூரியில் அந்த ஏழ்மையை வைத்தே தவறான பாதைக்கு அழைக்கும் இந்தக் கேவலம் வெளிப்படுத்தப்பட வேண்டும், நிர்மலாதேவி உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் தோலுரிக்க வேண்டும் என்று தோன்றியது. 

 

vice chancellor



ஏப்ரல் 8 நக்கீரன் இதழில் 'கவர்னர் பெயரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை - ஆடியோ ஆதாரம்' என்ற தலைப்பில், நிர்மலாதேவி விவகாரத்தை  அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டோம். தொடர்ந்து,  "கல்வித்துறை கழுகுகளுக்கு மாணவிகளை இரையாக்கிட துடிக்கும் கல்லூரி பேராசிரியை! -அதிரவைக்கும் ஆடியோ ஆதாரம்!" என்ற பெயரில் நக்கீரன் வலைத்தளத்திலும் சற்று விரிவாக வெளியிட்டோம். மாணவிகளின் நலன் கருதி அவர்களது பெயர், கல்லூரியின் பெயர், ஊர் பெயர் என எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், தவறு செய்த பேராசிரியையை விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம். கல்லூரி செயலாளர், பல்கலைக்கழக பதிவாளர், துணை வேந்தர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு கேள்வியெழுப்பினோம். ஒருவரும் பொறுப்பான பதில் சொல்லாமல் நழுவ அதையும் வெளியிட்டோம். நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறினோம். 

 

registrar


நக்கீரன் வெளியிட்ட செய்தி மெல்லப் பரவியது.  அனைத்து ஊடகங்களும் விவரங்களை நம்மிடமிருந்து பெற்று  விஷயத்தைப் பெரிதாக்கினர் ('ஃபர்ஸ்ட் ஆன்' என்ற பெருமையோடு, இருந்தாலும் நன்றி). தமிழகம் முழுவதும் பேசப்பட்டு, இது குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு, ஆளுநர் இதற்கென அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, அங்கு ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தைத் தட்டி என,  இந்த விஷயம் பெரிதாகி நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன, திருப்திதான். 

 

Hindu screenshot


இன்னும் அந்தத் தந்தையின்  குரல் நினைவில் இருக்கிறது. “அட, தேவ தேவா என்று கடவுளின் மீது பாரத்தைப் போட்டு, சஸ்பெண்ட் செய்துவிட்டால் சரியாகிவிடாது. நிர்மலா தேவியை விடவே கூடாது. பெரிய லெவலில் விசாரணை நடத்தி, எவ்வளவு பெரிய விவிஐபிக்களாக இருந்தாலும் அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்; கூண்டில் ஏற்ற வேண்டும்.” என்று பரிதவித்த குரல். இப்பொழுது  இன்னும் பெரிய கேள்விகள் இருக்கின்றன. 'தேவை என்று சொன்ன அந்த மூன்று முக்கியஸ்தர்கள் யார்? மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், இவர் சுட்டிக்காட்டும் மாணவிகளுக்கு மட்டும் எவ்விதத்தில் முதுகெலும்பாக நடந்துகொள்ளும்? இதற்குப் பின் இருக்கும் பெரும் புள்ளிகளை வெளிக்கொண்டுவந்து உரிய தண்டனை வாங்கித்தர வேண்டுமே? நக்கீரன் களமிறங்கும். அதைச் செய்யும்.   

Next Story

மகள்களை மிரட்டி பாலியல் தொந்தரவு; தந்தையின் கொடூர செயல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

sexual harassment of daughters by Father's in covai

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், தொழிலாளி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிறுமிகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன் தினம் (12-10-23) கோவை மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள், மாணவிகளிடம் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

 

அப்போது, தொழிலாளியின் இரண்டு மகள்களும் அழுதுகொண்டே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயிடம் எடுத்துக் கூறினர். இந்த தகவலை கேட்ட தாயும் அதிர்ச்சியடைந்தார். 

 

இதையடுத்து, சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தனது இரண்டு மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இதனை வெளியே கூறினால் சிறுமிகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததுள்ளார் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

 

Next Story

அமைச்சர் மீது பாலியல் புகார்; பெண் பயிற்சியாளர் இடைநீக்கம்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Sexual complaint against minister Suspension of female coach

 

ஹரியானா முன்னாள் அமைச்சர் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்குக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்த இளநிலை பெண் தடகள பயிற்சியாளரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாக இளநிலை பெண் பயிற்சியாளர் ஒருவர் புகார் செய்தார். அந்த புகாரில், சந்தீப் சிங் தன்னை ஜிம்மில் பார்த்ததாகவும், அதன் பின்னர் தன்னை பின் தொடர்ந்ததாகக் கூறினார். மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை சந்திக்கும்படி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு ஹாக்கி அணியின் முன்னாள் இந்திய கேப்டன் சந்தீப் சிங் மீது சண்டிகர் காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்த சந்தீப், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அதனால், தார்மீக அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்”  எனக் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், சந்தீப் சிங் மீது புகார் கூறிய இளநிலை தடகள பெண் பயிற்சியாளரை பணி இடைநீக்கம் செய்து ஹரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 11 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவில் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான காரணம் கூறப்படவில்லை. அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

 

இது குறித்துப் பேசிய பெண் பயிற்சியாளர், “சில மாதங்களாக அரசின் உயர் அதிகாரிகள் எனக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். எத்தனை இடையூறுகள் வந்தாலும் விளையாட்டுத் துறை அமைச்சர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்துவேன். என்னை பணியில் இருந்து நீக்கினாலும் என்னுடைய உரிமைக்காக போராடுவேன். என் பணி இடைநீக்கம் நடவடிக்கையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் முறையிடுவேன்” என்று கூறினார்.