Skip to main content

காலம் கடந்தும் காமராஜரின் பெயர் சொல்லும் திட்டத்தின் முன்னோடி...  

Published on 09/07/2019 | Edited on 09/07/2020

சென்னையில் வசிக்கும் இன்றைய தலைமுறைக்கு பரிட்சயமானது பனகல் பூங்கா. ஆனால் நம்மில் பலருக்கு அந்த பெயர் எதனால் வந்தது, அங்கு சிலையாக இருக்கும் நபர் யார், அவருக்கு எதற்காக சிலை வைத்துள்ளார்கள் என்றும் தெரியாது. பனகல் மாளிகையும், பனகல் பூங்காவும் பனகல் அரசர் நினைவாக வைக்கப்பட்டது.
 

panagal arasar


திராவிட இயக்கங்களுக்கும், திராவிட கட்சிகளுக்கும் முன்னோடியாக இருந்தது நீதிக்கட்சி. நீதிகட்சி அப்போதைய சென்னை மாகாணத்தை 1920 முதல் 1926 வரை ஆட்சி செய்தது. இதில் 1921ம் ஆண்டு முதல் 1926ம் ஆண்டுவரை பனகல் அரசர் என்று அழைக்கப்படும் பனங்கன்டி ராமராயநிங்கார் ஆட்சிசெய்தார். இவருக்கு முன்பிருந்த சுப்புராயர் உடல்நலக்குறைவால் பதவி விலகியதால், அடுத்ததாக இவர் ஆட்சிக்கு வந்தார். 1923ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த இவர் 1926 வரை ஆட்சிசெய்தார். 



இவரது ஆட்சிக்காலம் சமத்துவத்திற்கான ஆட்சிகாலம், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆட்சிக்காலம் என்றே சொல்லலாம். கல்வியில் இவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. இந்து அறநிலையத்துறை சட்டத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவந்தவர் இவர்தான். இந்த சட்டம் கோவில் நிர்வாகம், அர்ச்சனை உட்பட அனைத்தும் எங்களுக்கு சொந்தம் எனக்கூறிய ஒரு பிரிவினரிடமிருந்து மீட்டு, அனைவரும் வழிபடுவது உட்பட பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தது. அதன்மீட்சிதான் இந்து அறநிலையத்துறையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் வரை அனைத்தும். 

அடுத்து இவர் கொண்டுவந்தது இடஒதுக்கீடு சட்டத்தின் முதல்கட்டமான வகுப்புவாரி உரிமை சட்டம். இதன்மூலம் அரசுப் பணிகளில் அனைத்து சாதியினரும் பங்கேற்க வாய்ப்பு உருவானது. அனைவருக்கும் கல்வி கிடைத்தது. மேலும் அப்போது இருந்த, சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற சட்டத்தை நீக்கினார். காமராஜரை இன்றுவரை நாம் நினைவுகூறுவது அவரின் ஆட்சிகாலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முக்கியமான மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்ததற்காக. மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் கொண்டுவந்தவரும் இவரே. அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக இவரும் உறுதுணையாக இருந்தார். 



தொழிற்சாலை திட்டத்தை கொண்டுவந்து சென்னை மாகாணத்தில் தொழிற்சாலை பெருகவும், அதே நேரத்தில் தொழிலாளர் பாதுகாப்பாய் இருக்கவும் ஆவணம் செய்தார். இதுதவிர மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை ஆதிதிராவிடர் என அழைக்க சட்டம் இயற்றினார். 1921லேயே பெண்களுக்கு வாக்குரிமைக்கு வழிவகை செய்தார். டி. நகர் பகுதிகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கியகாரணமாக இருந்தது ஆகியவை முக்கியமானது. இவைகளனைத்தையும் 1921 முதல் 1926 வரையிலான காலகட்டத்தில் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அவரின் 92வது பிறந்த தினம்...

 

 

Next Story

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
PM Modi remembers former CM of Tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PM Modi remembers former CM of Tn

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.