ஊரடங்கு உத்தரவால் பழனி பஞ்சாமிர்தத்தை ருசிக்க முடியாமல் முருக பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் பழனி முருகன் திருக்கோயில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட முருகன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்படிப் பழனிக்கு வரும் முருக பக்தர்களை நம்பி பழனி திருக்கோவில் தேவஸ்தானம் மற்றும் கிரி வீதி அடிவாரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பஞ்சாமிர்தக் கடைகள் உள்ளன.

Advertisment

palani panchamirtham

குறிப்பாகப் பழனி என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது இங்கு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம். இப்படிப்பட்ட பஞ்சாமிர்தத்தை முருக பக்தர்கள் வாங்கத் தவறுவதில்லை. சுண்டி இழுக்கும் சுவை கொண்ட பஞ்சாமிருதத்தை மலை வாழைப்பழம், பேரிச்சை, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு, தேன் முதலிய மூலப்பொருட்களைக் கொண்டு தானியங்கி இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதைத்தான் முருகன் கோவிலில் பிரசாதமாக முருக பக்தர்களுக்குபஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது.

Advertisment

palani panchamirtham

இதுதவிர கோவில் கடைகள் அடிவாரத்தில் உள்ள கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தினமும் கோடிக் கணக்கான ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பழனி முருகன் கோவிலுக்கு முருகபக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

http://onelink.to/nknapp

மேலும் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அடிவாரம் பகுதியில் உள்ள தேவஸ்தானம் மற்றும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தக் கரோனா வைரஸ் காரணமாகப் பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை நம்பி இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி பஞ்சாமிர்தத்தை ருசிக்க முடியாமல் முருக பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாகப் பழனி கோயில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சாதாரண நாட்களில் 15 டன் என்ற அளவிலும் தைப்பூசம் பங்குனி உத்திர திருவிழா நாட்களில் 50 டன் அளவிலும் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் காரணமாகப் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு முன்னதாகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பங்குனி உத்திரத் திருவிழாவும் நடைபெறவில்லை. இதனால் பஞ்சாமிர்தம் தயாரிப்பு முடங்கியதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

இதுபற்றி கடை வியாபாரிகள் சிலரிடம் கேட்டபோது, தைப்பூசம் பங்குனி உத்திரம் திருவிழா காலங்களில் பஞ்சாமிர்தம் மற்றும் அலங்காரப் பொருட்கள் பொம்மைகள் அதிக அளவில் முருக பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு கரோனா மூலம் ஊரடங்கு போடப்பட்டு உள்ளதால் திருக்கோயில் மூடப்பட்டதின் மூலம் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி இருந்த தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்கள்.