பொதுத்தேர்வுகள் தொடங்கிவிட்டாலே வழக்கம்போல் அச்சமும் குழப்பமும் தொற்றிக்கொள்ளும். ஆனால், தற்போது தொடங்கப்பட்டிருப்பது ‘புது’த்தேர்வு என்பதால் பேரச்சத்துடன் இருக்கிறார்கள் மாணவர்கள்-பெற்றோர்களுடன் ஆசிரியர்களும்கூட!
தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்ற விழிப்புணர்வூட்டிவரும் கல்வியாளரும் தனியார் பள்ளி உதவி தலைமை ஆசிரியருமான ஜானகிராமனிடம் நாம் பேசியபோது, “அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Assessment Marks) என்ற புதிய முறையை பொதுத்தேர்வில் கொண்டுவந்துள்ளது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை. இதைக்கண்டுதான், மாணவர்கள் கொஞ்சம் அச்சத்துடன் இருக்கிறார்கள். அதாவது, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என்பதே தவறானது.
மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டு, மேல்நிலைக்கல்வி இரண்டாம் ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும். இதை மறந்து… தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மேல்நிலைக்கல்வியின் முதலாமாண்டு (+1 வகுப்பு) பாடத்தை நடத்தாமல் மேல்நிலைக் கல்வியின் இரண்டாம் ஆண்டு (+2 வகுப்பு) பொதுத்தேர்வுக்கான மாதிரிவகுப்பாகத்தான் நடத்திவந்தன. அதாவது, +1 கல்வியாண்டில் +2 பாடத்தைச்சொல்லிக்கொடுத்து +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? என்ற பயிற்சிக்களமாக பயன்படுத்தி வந்தார்கள்.
இப்படி, முதலாமாண்டு பாடத்தை நடத்தாமல்; படிக்காமல் போனதால்தான் ஐ.ஐ.டி., நீட் உள்ளிட்ட அகில இந்திய போட்டித்தேர்வுகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண் எடுக்கமுடியவில்லை என்றக் குற்றச்சாட்டு கல்வியாளர்கள் மத்தியில் எதிரொலித்தது. அதனால்தான், முதலாம் ஆண்டுக்கும்(+1 வகுப்புக்கும்) பொதுத்தேர்வை கொண்டுவந்தது தமிழக அரசு. தனி தனியாக 1200 மதிப்பெண்கள் என்றிருந்ததை மேல்நிலைக்கல்வியின் முதலாமாண்டுக்கு 600 மதிப்பெண்கள், இரண்டாமாண்டுக்கு 600 மதிப்பெண்கள் என பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன், அகமதிப்பீடு மதிப்பெண்கள் என்னும் பெயரில் ஒவ்வொரு பாட ஆசிரியர் கையிலும் 10 மதிப்பெண்கள் உள்ளன. ஆனால், வருகைப் பதிவேடு, ஃபீல்டு ட்ரிப் அசைன்மெண்ட் என பல்வேறு காரணங்களை மையப்படுத்தி இந்த மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன. 25 மதிப்பெண்களுக்கு 4 தேர்வுகள் வைக்கப்பட்டு அதில், பெரும் மதிப்பெண்களை 5 மதிப்பெண்ணுக்கு என வகுத்து அதையும் இந்த அகமதிப்பீடு மதிப்பெண்ணில் சேர்ப்பார்கள். இதில், ஒரு பாடத்தில் 1 மதிப்பெண் குறைந்துவிட்டாலும் சென்டம் வாங்கமுடியாது. அதனால், அனைத்துப் பாடங்களிலும் மிக கவனமாக படித்து பொதுத்தேர்வை எழுதினால்தான் சென்டம் வாங்கமுடியும். 85-100 சதவீதம் வருகைப்பதிவேடும் இருந்தால் முழுமையாக கொடுக்கப்படும் 3 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். 80 லிருந்து 85 சதவீதம் வருகைப்பதிவேடு என்றால் மூன்றிலிருந்து 1 மதிப்பெண் குறைந்துவிடும். 75 லிருந்து 80 சதவீத வருகைப்பதிவேடு என்றால் 1 மதிப்பெண்தான் கிடைக்கும். இதனாலும் சென்டம் எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம்”என்கிறார் அவர்.
கல்வித்துறையின் மாற்றம்… மாணவர்களுக்கு முன்னேற்றமாக கருதி தேர்வை எதிர்கொள்வோம்! வெற்றிபெருவோம்!