Skip to main content

பாஜகவை எதிர்ப்பதால் பழிவாங்கும் நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் கைதுக்கு கோபண்ணா கண்டனம்

Published on 28/02/2018 | Edited on 28/02/2018
karthi



மத்தியில் உள்ள பாஜக அரசை எதிர்த்து ப.சிதம்பரம் கடுமையான விமர்சனங்களை வைப்பதால், பழிவாங்கும் நடவடிக்கையாக கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பியதும் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

 

chidambaram


 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா,
 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்து பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும், ஆதாரத்தோடு ஆக்கப்பூர்வமாக ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ப.சிதம்பரத்தின் விமர்சனங்கள் ஊடங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன. 
 

அப்படி வெளியிடப்படுவதற்கு காரணம் என்னவென்று சொன்னால் அந்த கருத்து ஆழமான, தெளிவான வகையிலே அந்த எதிர்ப்பு இருப்பதினால் அதற்கு முக்கியத்துவம் ஊடகங்களில் கிடைக்கிறது. இதனை சகித்துக்கொள்ளாத நரேந்திரமோடி அரசு, எப்படியாவது அவரை பழிவாங்க வேண்டும், அவரை செயல்படவிடாமல் முடக்க வேண்டும், அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கார்த்தி சிதம்பரத்தின் மீது ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

modi

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு சம்மந்தமாகவும் எப்படியாவது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பலமுறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அவரது வீட்டில் சோதனை நடத்தியது. சோதனை நடத்தியப்பிறகு எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் ஒரு அடிப்படையில்லாத, ஆதாரமில்லாத ஒரு வழக்கு புனையப்பட்டு இன்றைக்கு அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பார்க்க கருதவேண்டியிருக்கிறது.

 

Congress spokesman Gopanna

இந்த வழக்கினுடைய தன்மையை பார்க்கிறபோது கைது செய்யப்படுகிற அளவுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இவரை எப்படியாவது கைது செய்து, ப.சிதம்பரத்தை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, அவரை எதிர்க்கிற அந்த முனையை மழுங்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்  பாஜக அரசு இன்று கார்த்தி சிதம்பரத்தை கைது செய்திருக்கிறது. இது ஒரு சர்வாதிகாரமான, ஜனநாயகத்திற்கு விரோதமான, ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மகன் என்கிற காரணத்திற்காக இந்த பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக அரசு செய்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கூறியுள்ளார்.