Skip to main content

இந்தியாவை ஜெர்மனியாக மாற்ற அனுமதிக்க முடியாது - ப.சிதம்பரம் தாக்கு!

Published on 24/12/2019 | Edited on 30/12/2019

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், சென்னையில் இதுதொடர்பாக ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதுதொடர்பாக அவர் பேசும்போது " நேற்று புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் என்ன சொல்லியிருக்கிறார், தேசிய குடிமக்கள் பதிவேட்டை பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அதை பற்றி கூறியிருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தார்கள். அதை யாரும் மறுக்க முடியாது. முதல்கட்டமாக அதை அஸ்ஸாமில் செய்தார்கள். இதற்காக 1600 கோடியை செலவழித்தார்கள். அதற்கென்று தனி அதிகாரியை நியமித்து அவருக்கு எல்லாவிதமான அதிகாரங்களையும் கொடுத்தார்கள். உச்சநீதிமன்றத்தின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது.

fg

 

இப்போது அதனுடைய நிலைமை என்ன. அஸ்ஸாம் மாநில மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அஸ்ஸாம் அரசே அதனை நிராகரித்துள்ளது. இந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறியது நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிவான ஒரு செய்தியை மறுக்கிறார் என்றால் அதைவிட ஒரு வருந்ததக்க செய்தி வேறொன்றும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு பிரதமர் பேசும்போது இந்த குடியுரிமை திருத்த சட்டம் என்று ஆயிரம் மடங்கு சரியானது என்று கூறியுள்ளார். அதே நாளில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேசிய உள்துறை அமைச்சர் வரும் 2024ம் ஆண்டிற்குள் இந்தியாவில் குடியேறிய அந்நிய சக்திகளை அகற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள். இந்த குடியுரிமை சட்ட திருத்தம் என்பது அரசியல் சாசனத்தின் 14வது பிரிவுக்கு நேர் எதிரானது. அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வழக்கின் தீர்ப்பு வரட்டும். குறிப்பிட்ட மூன்று நாடுகளை தேர்வு செய்கிறார்கள். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த மூன்று நாடுகளும் அண்டை நாடுகள்தான். அப்படியென்றால் இலங்கை, மியான்மர் நாடுகள் அண்டை நாடுகள் இல்லையா? 

இந்த நாடுகளை ஏன் இதில் சேர்க்கவில்லை. இதில் அவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் இயல்பாகவே வருகிறது. குறிப்பிட்ட ஆறு மதத்தினரை இதில் சேர்ந்துள்ளார்கள். ஆனால் இஸ்ஸாமியர்களை இதில் ஏன் சேர்த்துக்கொள்ளவில்லை. இந்த நாடுகளில் இருந்து வரும் இந்துக்களுக்கு அனுமதி அளிக்கிறார்கள், ஆனால் இலங்கையில் இருந்து வரும் தமிழ் இந்துக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள்.  கிறிஸ்துவர்களுக்கு அனுமதி உண்டு என்கிறார்கள், பூட்டானில் இருந்து வரும் கிருஸ்துவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். இதில் அவர்கள் அடைய போகும் ஆதாயம் என்ன. இவர்கள் உள் நோக்கத்தோடு செயல்படுவதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இந்துக்களை அனுமதிப்போம், ஆனால் இலங்கை இந்துக்களை அனுமதிக்க மாட்டோம். கிருஸ்துவர்களை அனுமதிப்போம், ஆனால் பூட்டான் கிருஸ்துவர்களை அனுமதிக்க மாட்டோம் என்பது எந்த விதத்தில் சரியானது என்று தெரியவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பலமுறை கேள்வி எழுப்பினேன். ஆனால் உள்துறை அமைச்சர் எந்த கேள்விக்கு சரியான பதிலை அளிக்கவில்லை. அவர் அதை மாற்றுவேன், இதை மாற்றுவேன் என்று தொடர்ந்து கூறுகிறார்கள். இந்தியாவை துண்டாட காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவை ஜெர்மனியாக்க  விட மாட்டோம்" என்றார்.

 

 

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

மக்களவைத் தேர்தல்; பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் சவால்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
P. Chidambaram challenge to BJP on Lok Sabha elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, ப.சிதம்பரம் இன்று (06-04-24) காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒன்றிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மாநில உரிமைகள் குறித்து காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள 12 அம்சங்களில் ஏதாவது ஒன்றை ஏற்க பா.ஜ.க தயாரா?. 

தி.மு.க, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையான ஒன்றுதான். முரண்பட்ட கூட்டணியை காங்கிரஸ், தி.மு.க அமைக்கவில்லை. ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை குறைப்போம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. செஸ் வரி குறைக்கப்படும் போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே குறையும்” என்று கூறினார்.