Skip to main content

“எங்கள அரசு பேருந்து கண்டுக்கிறதே இல்ல..” - கண்ணீர் வடிக்கும் பெண்கள்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

"Our government bus does not see.." -  women!

 

தி..மு.க. அரசு, மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களுக்கான இலவசப் பேருந்துகளை விட்டிருப்பதோடு, தமிழகம் முழுக்க ஓடும் டவுன் பஸ்களிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. இதேபோல் மாணவர்களுக்கும் இலவசமாகப் பயணம் செய்யும் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, இவர்கள் எல்லாம் அரசின் இந்தக் கட்டணமில்லாப் பயணச் சலுகையை முழுமையாக அனுபவிக்கிறார்களா? என்று விசாரித்தால், குமுறல்களே பதிலாக வெடிக்கின்றன. 

 

இதுகுறித்த பல்ஸ்ரேட்டை அறிய, ஒரு பானைச் சோற்றுப் பதமாக, திண்டுக்கல் மாவட்ட நத்தம் தொகுதியில் நாம் களமிறங்கினோம். இந்தத் தொகுதிக்கு உட்பட்ட நொச்சி ஓடைப்பட்டி, ரைஸ்மில், பதனிக்கடை, கூவனூத்து, விராலிப்பட்டி, கொசவபட்டி, சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, மணியகாரன்பட்டி, எல்லைப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கோபால்பட்டி, முலையூர், உலுப்பக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதை அறியமுடிந்தது.

 

"Our government bus does not see.." -  women!

 

தவசிமடையைச் சேர்ந்த கூலி பெண் தொழிலாளர்களான சுசீலா, கவிதா, மல்லிகா, செல்வி, மேரி ஆகியோரிடம் இது குறித்துக் கேட்டபோது.. “கிராமப் பகுதிகளில் தோட்ட வேலைகள் இல்லாததால் எங்க ஊரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தினசரி டவுனுக்கு போய் கட்டிடம் கட்டும் இடங்களில், சித்தாள் வேலை பார்த்து வருகிறோம். எங்க ஊருக்கு காலை 6 மணிக்கு பஸ் வருவதால் அதில் போக முடியவில்லை. அதனால காலை 7 மணிக்கெல்லாம் கிளம்பி 2 கி.மீட்டர் தூரம் நடந்து போய் விராலிப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்குப் போனாலும், நத்தத்தில் இருந்து வரக்கூடிய ஃப்ரீ பஸ்கள் சரி வர நிற்பதில்லை. அப்படி நின்றாலும், நாங்கள் ஏறுவதற்குள்ளேயே பஸ்ஸை எடுத்து விடுகிறார்கள். அதனாலேயே கடந்த வாரம்கூட இரண்டு பெண்கள் கீழே விழுந்து விட்டனர். 

 

அதுலயும் சில நாட்களில் பஸ் ஸ்டாப்பைத் தாண்டி நிறுத்தி, மக்களை இறக்கி விட்டுவிட்டு உடனே எடுத்துட்டு போய்விடுகிறார்கள். சில சமயங்களில் ஆம்பளைகள் நின்னா பஸ் நிக்கிது. பொம்பளைக நின்னா பஸ் நிற்பதில்லை. அதனாலயே பெரும்பாலான நாட்கள் எங்களைப் போன்ற பெண்கள் எல்லாம் தனியார் பஸ்களில் போய் வருகிறார்கள். அதனால ஒரு நாளைக்கு ரூ.50 வரை பஸ்சிற்கு செலவாகிறது. முதல்வர் ஸ்டாலின், எங்களுக்காக இலவச பஸ் வசதி செய்து கொடுத்தும் கூட கண்டக்டர்களும், டிரைவர்களும் அவங்க சொந்த பஸ்சில் நாங்க ஃப்ரீயாக போய் வருவது போல் நினைத்துக் கொண்டு, பஸ்களை நிறுத்தாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது எங்க ஊருக்கு வரும் பஸ்ஸை எட்டு மணிக்கு மாற்றி அமைத்தால், வேலைக்குப் போகும் எங்களைப் போல பல ஏரியா பெண்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் பயனடை வார்கள்” என்றனர் ஆதங்கமாக.

 

"Our government bus does not see.." -  women!

 

இது சம்பந்தமாக கூவனூத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான சுரேஷ், குமார், கண்ணன் ஆகியோரிடம் கேட்டபோது... “பெண்களுக்கும் இலவசமாக டவுன் பஸ்களில் போய் வரலாம்னு சொன்னதில் இருந்தே, எங்களைப் போல் மாணவ, மாணவிகளையும் சரிவர இலவச பஸ்ஸில் ஏற்றுவது இல்லை. எங்க ஊர்க்காரங்க நிறைய பேர் டிரைவர், கண்டக்டர்களாக இருப்பதால் கூட்டமாய் இருந்தால்கூட எங்களை ஏற்றிக்கிட்டு போய்விடுகிறார்கள். அவர்கள் டூட்டிக்கு வரவில்லை என்றால் எங்கள் நிலை மோசமாகிவிடும். நாங்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கும் போக முடியாது” என்றார்கள் வருத்தமாய். 


இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து, அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலப் பொதுமேலாளர் டேனியல் சரவணனிடம் கேட்டபோது.. “நான் பொறுப்புக்கு வந்து இரண்டு மாதம்தான் ஆகுது. இந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியவருது. அதனால உடனடியாக அப்பகுதிகளில் ஆய்வு செய்து, வழக்கம்போல் அனைத்து நிறுத்தங்களிலும் பஸ்களை நிறுத்தச் சொல்வதோடு, பெண்களையும், மாணவ-மாணவிகளையும் கண்டிப்பாக ஏற்றிச் செல்லும் அளவிற்கு நடவடிக்கை எடுப்பேன்” என்றார் உறுதியான குரலில்.


பேருந்து ஓட்டுநர்கள் மற்றும், நடத்துநர்களின் கனிவான கவனத்திற்கு, அரசுத் திட்டங்களுக்கு இனியேனும் பிரேக் பிடிக்காதீர்கள். ஏழை-எளிய மக்களுக்கு எதிரான திசையில் ஸ்டேரிங்கை வளைக்காதீர்கள்.

 

 

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.