Skip to main content

எப்படி வாங்க முடியுமோ அப்படி வாங்கிக்கிறேன்... உச்சகட்ட டென்ஷனில் ஓபிஎஸ்... தடை போட்ட இபிஎஸ்! 

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

மந்திரி பதவி கேட்டு மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற அப்பா ஓ.பி.எஸ். எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். இதனால் ஓ.பி.எஸ்சுக்கும் இ.பி.எஸ்.சுக்குமிடையே பனிப்போர் உச்சத்தில் இருப்பதாக அ.தி.மு.க.வில் தகவல்கள் கசிகின்றன.

 

admk



"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் வென்றது. தனது மகன் ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைக்க பெரும்பாடு பட்டார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அப்போதிலிருந்தே டெல்லியின் குட் புக்கில் ஓ.பி.எஸ்.சுக்கு ஏறுமுகம் தான். இந்த நம்பிக்கையில் தனது மகன் ரவீந்திரநாத்தை மத்திய பா.ஜ.க. அமைச்சரவையில் இணைத்துவிட வேண்டும் என காய்களை நகர்த்தினார் ஓ.பி.எஸ். அப்போது, "அமைச்சரவையில் அ.தி.மு.க.வை இணைத்துக் கொள்கிறேன். ஆனா, ஒருவருக்குத்தான் வாய்ப்பு. அது யாருக்கு என்பதை உங்கள் கட்சியில் பேசி முடிவெடுங்கள்' என தெளிவாக ஓ.பி.எஸ்.சுக்கு தகவலை பாஸ் பண்ணியிருந்தார் பிரதமர் மோடி.
 

admk



மகனுக்கு மந்திரி பதவி கேட்டு ஓ.பி.எஸ். முயற்சிப்பதை எடப்பாடி ரசிக்கவில்லை. அதேசமயம், ஒருவருக்குத்தான் வாய்ப்பு என மோடி சொல்லியிருந்ததை அறிந்து குஷியாகி விட்டார். அப்போது, மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து அ.தி.மு.க. தலைவர்களிடையே கலந்துரையாடல் நடந்தது. ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி கிடைக்கக்கூடாது என திட்டமிட்டு ராஜ்யசபா எம்.பி. வைத்தியலிங்கத்தை கோதாவில் இறக்கினார் எடப்பாடி. அமைச்சர் பதவிக்காக வைத்தியும் கச்சை கட்ட, யாருக்கும் கிடைக்காமல் வாய்ப்பு பறிபோனது. இதனால் எடப்பாடி மீது ஓ.பி.எஸ்.சுக்கு ஏகத்துக்கும் கோபம். இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தை கடந்த 6 மாதமாக தள்ளிவைத்துள்ள பிரதமர் மோடி, தற்போது அது குறித்து ஆலோசித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அமைச்சர் பதவி கேட்டு அப்பா ஓ.பி.எஸ்.சிடம் வலியுறுத்தியுள்ளார் ரவீந்திரநாத். அதனையொட்டி, எடப்பாடியிடம் ஓ.பி.எஸ். விவாதிக்க, மீண்டும் தடைபோடுகிறார் எடப்பாடி'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தினர். 
 

admk



ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான இரு தரப்பு ஆதரவாளர்களிடமும் நாம் விசாரித்தபோது, "அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய டெல்லியில் திட்டமிடப்படுகிறது என்பதை அறிந்த ரவீந்திரநாத், "இந்த முறை நான் ஏமாறத் தயாராக இல்லை. அதனால் கட்சியிலும் டெல்லியிலும் பேசி அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுங்கள். முடியாதுன்னா சொல்லிடுங்க. எப்படி வாங்க முடியுமோ அப்படி வாங்கிக்கிறேன்' என ஓ.பி.எஸ்.சிடம் விவாதம் செய்திருக்கிறார். அப்போது, "அப்படியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் மாதிரியெல்லாம் அரசியல் செய்ய முடியாது. கட்சிக்குன்னு சில வரையறைகள் இருக்கின்றன. உன்னை விட சீனியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும்' என மகனுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் மகனோ அதை ஏற்கவில்லை.

இந்த நிலையில், எடப்பாடியிடம் மத்திய அமைச்சர் பதவி குறித்து மகனுக்காக ஓ.பி.எஸ். விவாதிக்க, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடக்குமான்னு எனக்குத் தெரியலை. அப்படியே நடந்தாலும், சீனியர்களை தவிர்த்து விட்டு உங்க மகனுக்காக நான் எப்படி சிபாரிசு செய்ய முடியும்? அப்பா துணை முதல்வர், மகன் மத்திய அமைச்சர்னா கட்சிக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடிக்கும். வேணும்னா துணை முதல்வர் பதவியிலிருந்து நீங்க விலகிக்கிங்க. அதை காரணம் காட்டி சீனியர்களிடம் பேசலாம். அவர்கள் சம்மதித்தால் எனக்குப் பிரச்சனை இல்லை' என எடப்பாடி சொல்ல, அவருடைய பேச்சு ஓ.பி.எஸ்.சை டென்சன் படுத்தியுள்ளது. கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மேலும் விவாதிப்பதை துண்டித்துக்கொண்டார்.


தனது மகனை ஓ.பி.எஸ். ஜெயிக்க வைத்ததுபோல, சேலம் மாவட்டத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். அவரால் முடியவில்லை. சொந்த மாவட்டத்திலேயே அவரது செல்வாக்கு சரிந்து கிடக்கிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ். மகன் மந்திரியானால் சேலம் உட்பட அனைத்து மாவட்ட அ.தி.மு.க.வினரும் ஓ.பி.எஸ்.சையும் அவரது மகனையும் சந்திக்கத் துவங்கி விடுவார்கள். அதன் மூலம் கட்சியில் ஓ.பி.எஸ்.சின் செல்வாக்கு வலிமையாகி விடும். அப்படி ஒரு சூழல் உருவாவது தனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறார் முதல்வர். அதற்குப் பயந்தே ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி கிடைக்கக்கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. அதிகாரமில்லை என்றாலும் துணை முதல்வர் பதவி ஓ.பி.எஸ்.சுக்கு ஒரு கௌரவத்தை கொடுத்திருப்பதால் அதற்கு செக் வைத்தால்தான் மகனுக்கு மந்திரி பதவி கேட்க மாட்டார் என யோசித்தே கண்டிஷன் போடுகிறார் முதல்வர்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.


"மகனுக்காக வைத்த கோரிக்கையை எடப்பாடி நிராகரித்ததில் ஓ.பி.எஸ். அப்செட்டானாலும் கவலைப்படவில்லை. டெல்லியில் தனக்குள்ள தொடர்புகள் மூலம் முயற்சிகளை அவர் எடுத்து வருவதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. அதேசமயம், மத்திய அமைச்சரவையில் மகனுக்கு வாய்ப்பு பெறுவதில் ஓ.பி. எஸ்.சுக்கும் இ.பி.எஸ்.சுக்கும் பனிப்போர் உச்சத்தில் இருப்பதால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்'' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "நவம்பரில் நடக்கும் குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய நினைக்கிறார் பிரதமர் மோடி. ஆனா. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சில சிபாரிசுகளை செய்கிறது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் விரிவாக்கம் தள்ளிப்போகலாம்'' என்கின்றனர்.

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.