Skip to main content

ஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்!

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

யாரை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ அதே ஆட்களோடு சேர்ந்து எடப்பாடி அரசை கவிழ்க்க ஒபிஎஸ் திட்டமிட்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே, அவருடைய சமாதியின் ஈரம் காய்வதற்கு முன்னரே அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை முன்மொழிந்து சின்னம்மாவாக காலில் விழுந்து அடுத்த ஜெயலலிதாவாக அறிமுகம் செய்தவர் ஒபிஎஸ். முதல்வர் பதவியை சசிகலா பறி்த்ததும், சசிகலா குடும்பத்துக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தர்மயுத்தம் தொடங்கினார்.

 

ops dharmayudham



சசிகலா சிறைக்கு சென்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சென்றார். அதன்பிறகு தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆனார். அதையும் கடுமையாக விமர்சித்தவர் ஒபிஎஸ். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் மத்திய அரசு உதவியோடு தினகரனுக்கு எதிராக பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. தினகரனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போதே, சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. ஒபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் 2017 ஆம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இணைந்தது. அதைத்தொடர்ந்து ஒபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொடுத்து இரட்டை இலைச் சின்னத்தையும் பெற்றார்கள். ஆனால், அதற்கு முன்னதாக இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் சிறைக்கு சென்றார்.

 

sasikala ttv



ஆனால், அந்த இணைப்புக்கு 40 நாட்கள் முன்னரே, எந்தக் குடும்பத்தினரை எதிர்த்து ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினாரோ, அதே தினகரனை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி ஒபிஎஸ்சும் அவருடைய மகனும் சந்தித்து எடப்பாடி அரசை கவிழ்த்துவிட்டு, தன்னை முதல்வராக்கினால் தினகரனுக்கு விசுவாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்தத் தகவலை ஒரு விவாத நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார். அதைத்தொடர்ந்து, இந்த தகவலை மறுக்காத ஒபிஎஸ், அதெல்லாம் பழைய கதை என்று சொல்லியிருக்கிறார். இந்நிலையில் ஒபிஎஸ்சும் அவருடைய மகனும் தன்னை சந்தித்தது உண்மைதான். அதை அவரால் மறுக்க முடியாது. அதில் சில அரசியல் ரகசியம் இருக்கிறது. அதனால்தான் நான் அதை வெளியில் சொல்லவில்லை. தினகரன் முதல்வர் பதவிக்காக அலைகிறார். இப்போதும்கூட ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் ஆளுக்கொரு கத்தியை மறைத்துக்கொண்டே அரசியல் செய்கிறார்கள் என்று தினகரன் பேட்டியளித்தார்.

 

eps and ops



ஒபிஎஸ்சின் தர்மயுத்தம் நாடகம் கடந்த சில மாதங்களாகவே சிரிப்பாய் சிரிக்கிற நிலைக்கு போய்விட்டது. மத்திய அரசில் ஒபிஎஸ்சுக்கு இருந்த மரியாதை சுத்தமாக போய்விட்டது. தொடக்கத்தில் ஒபிஎஸ்சையும், இபிஎஸ்சையும் அடிக்கடி சந்தித்த மோடி, இப்போதெல்லாம் தனது ஏஜெண்டான ஆளுநரைப் பார்த்தால் போதும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் மாநில நிர்வாகத்தை பாஜகவின் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைப்பதாக கூறுகிறார்கள். இந்நிலையில்தான், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒபிஎஸ்சின் தர்மயுத்தம் நாடகத்தின் மர்ம காட்சி அம்பலம் ஆகியிருக்கிறது.  

 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.