Skip to main content

“இபிஎஸ் இன்னிக்கு ஜெயிக்கலாம்... ஆனா டெல்லி கணக்கு வேற” - ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் நம்பிக்கை

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

OPS discussion aboout SC's verdict with his supporters

 

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பைத் தந்துள்ளது உச்சநீதிமன்றம். இதனால் ஒட்டுமொத்த ஓ.பி.எஸ். முகாமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

 

கடந்த 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., கட்சியின் சீனியர்களிடம் தனிப்பட்ட முறையில் விவாதித்தபோது... பா.ஜ.க. மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். அதுகுறித்து நம்மிடம் மனம் திறந்த ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவு மா.செ.க்கள்...

 

"கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு சீனியர்களுடன் தனியாக விவாதித்த ஓ.பி.எஸ்., பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார். கட்சியின் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்துவிட்டால் ஏக மகிழ்ச்சியில் முப்பெரும் விழாவை நடத்தலாம். அந்த விழா, கட்சியின் தொண்டர்கள் நம்மிடம்தான் இருக்கிறார்கள் என்ற இமேஜை துரோகிகளுக்கு ஏற்படுத்தும். அதனால், ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் பேசுகிறபோது மோடி, அண்ணாமலை, பா.ஜ.க., தி.மு.க. பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார் ஓ.பி.எஸ்.


தி.மு.க., பா.ஜ.க.வைப் பற்றி நாம் ஏன் விமர்சிக்கக் கூடாது? என்கிற கேள்வி சீனியர்களிடம் இருந்தது. அதனால், "எடப்பாடியும் அண்ணாமலையும் சேர்ந்து கொண்டுதான் உங்களுக்கு எதிரான அரசியலை பா.ஜ.க.விடம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கூட்டுச் சதியை நம் நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டால்தானே நமக்கான அரசியலை முன்னெடுக்க முடியும்? பா.ஜ.க.வுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்?” என்றெல்லாம் ஓ.பி.எஸ்.ஸிடம் சீனியர்கள் கேட்டிருக்கிறார்கள்.

 

OPS discussion aboout SC's verdict with his supporters

 

அதற்கு, "கட்சியின் பொதுக்குழு வழக்கு குறித்து டெல்லியில் பேசிக் கொண்டிருக்கேன். வழக்கின் தீர்ப்பு வரட்டும். பிறகு முடிவு செய்யலாம்” என்று சொல்லி அவர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓ.பி.எஸ். ஆனாலும், எடப்பாடியின் மகுடிக்கு கட்டுப்பட்டு ஆடும் பாம்பாகத்தானே பா.ஜ.க. இருக்கிறது? இல்லைன்னா… இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்திருக்குமா? நம்மளை நம்ப வைத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றெல்லாம் பல விசயங்களை சீனியர்கள் சொல்ல, "அப்படியெல்லாம் யோசிக்காதீர்கள். இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் ஜெயிக்கும். சின்னம் கிடைத்தும் எடப்பாடி தோற்றுப் போனார் என்கிற சூழல்தான் வரும். இதைத்தான் டெல்லியும் எதிர்பார்க்கிறது. அப்படி ஏற்படும் தோல்வியை வைத்தே அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் தங்களின் திட்டத்திற்கு எடப்பாடியை சம்மதிக்க வைக்க முடியும் என பா.ஜ.க. நினைக்கிறது. அதற்காகத்தான் எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது போல டெல்லி பார்த்துக்கொண்டது. மேலும், ‘நீண்ட காலம் காத்திருந்துவிட்டீர்கள்; இன்னும் கொஞ்சநாள் காத்திருங்கள். எல்லாம் சரியாகும்’ என எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள் பா.ஜ.க.., அதனால் பொறுமையை நாம் இழந்துவிட வேண்டாம்.


பொதுக்குழு வழக்கில் நமக்கு சாதகமான தீர்ப்பு வருகிறதா? என பார்ப்போம். டெல்லியிலிருந்து எனக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கையின் உண்மையை அந்த தீர்ப்பை வைத்து முடிவு செய்யலாம்” என விளக்கமளித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதற்கேற்ப, ஆலோசனை கூட்டத்தில் பேசிய சீனியர்களும் பா.ஜ.க.வை பற்றியோ, அண்ணாமலை பற்றியோ விமர்சிக்கவில்லை என்றனர் மா.செ.க்கள்.


எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் பா.ஜ.க.வை ஓ.பி.எஸ்.ஸும் மாநில நிர்வாகிகளும் கடுமையாக விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்த்த கட்சி நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எடப்பாடியின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சிக்கக் கூட ஓ.பி.எஸ். தயாராக இல்லை எனும்போது யாருக்காக இவர்கள் பயப்படுகிறார்கள்? என்கிற முணுமுணுப்புகள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடம் எதிரொலிக்கவே செய்தன.


ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டவர்களை மா.செ.க்களும் மாவட்ட நிர்வாகிகளும் சந்தித்து, தங்கள் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்கள். அப்போது, "எந்த ஒரு விசயத்திலும் நமக்கு சாதகமான சூழல்கள் இல்லாதபோது எந்த நம்பிக்கையில் நாங்கள் அரசியல் செய்வது? மாவட்டத்திலுள்ள எடப்பாடியின் எம்.எல்.ஏ.க்களும் ஆதரவாளர்களும் எங்களிடம் வந்து, ‘ஓ.பி.எஸ்.ஸை நம்பி அரசியல் எதிர்காலத்தை இழக்காதீர்கள்; தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் எடப்பாடி விரும்புகிறார். கட்சி தலைமையும் எடப்பாடிக்கு சாதகமாகும். அதனால் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள்' என அழைக்கிறார்கள். நாங்களோ அதற்கு மயங்கிவிடாமல், எடப்பாடிக்கு எதிரான அரசியலை வேகமாக முன்னெடுக்க விரும்பினால்... நீங்கள் என்னவோ கூட்டத்தை உப்பு சப்பில்லாமல் முடித்திருக்கிறீர்கள். இப்படியே போனால் தொண்டர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது'' என்று தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

இந்தநிலையில்தான் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஓ.பி.எஸ். தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், ‘ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவின் முடிவுகள் செல்லும். அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ்.ஸை நீக்கியது செல்லும். சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு நடந்துள்ளதால், அதன்மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை’ என்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. ஒற்றைத் தலைமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதும் ஓ.பி.எஸ்.ஸை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என்பதும் ஓ.பி.எஸ். தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளார் ஓ.பி.எஸ். "பா.ஜ.க.வை நம்பி மோசம் போன ஓ.பி.எஸ்., தனிக்கட்சி ஆரம்பிப்பது தவிர வேறு வழியில்லை” என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.