Skip to main content

"ஓபிஎஸ் அவர்களே..! நீங்களும் எங்களை பிச்சைக்காரர்களாக நினைக்கலாமா? திருநங்கை கேள்வி.!"

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

தமிழகத்தில் திருநங்கைகள் கேட்டரிங், பியூட்டியூசியன், சேல்ஸ் கேர்ள் என  தங்களுக்கு தெரிந்த தொழில் செய்து வருகின்றனர். இந்தியாவுக்கே முன்னுதாரணமாக பிரித்திகா யாசினி என்ற திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பிறகு திருநங்கைகள் பலர்  காவலர் தேர்வு எழுதினர். அதில் சிலர் பணியில் சேர்ந்தாலும், போதிய கட்-ஆஃப் மதிப்பெண் எடுக்காததால் பலரால் வேலைக்கு சேரமுடியவில்லை.

 

tamilnadu

 

 

இதனிடையே, கடந்த ஆண்டு இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு எழுதிய தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆராதனா என்ற திருநங்கை, எழுத்து தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால் உடல் திறன் தேர்வுக்கு அவர் அழைக்கப்படவில்லை. இதனிடையே, திருநங்கைகளுக்கும் காவலர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஆராதனா. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ஒரு இடத்தை ரிசர்வ் செய்து வைக்குமாறு  சீருடை பணியாளர் தேர்வு குழுமத்திற்கு உத்தரவிட்டார்.

"அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், தனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தனக்கு உதவ வேண்டும்" என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று (20-08-2019) நேரில் சந்தித்து மனு கொடுத்தார் ஆராதனா. அப்போது பரிசீலனை செய்வதாக உத்திரவாதம் அளித்துள்ளார் ஓபிஎஸ். பின்பு சிறிதுநேரத்தில் ஓ.பி.எஸ்.ஸின் உதவியாளர் ஆராதனா கையில் ரூ.2 ஆயிரத்தை திணித்துவிட்டு சென்றிருக்கிறார்.

 

tamilnadu


இதனால், மனம் வெதும்பிய ஆராதனா, இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரும் திருநங்கையுமான கிரேஸ்பானுவிடம் தெரிவித்துள்ளார். கிரேஸ்பானுவோ, தனது டுவிட்டர், முகநூல் பக்கத்தில், "துணை முதல்வரே நீங்கள் செய்வது நியாயம் தானா? என கேள்வி எழுப்பி உள்ளார். வாழ்வாதரத்திற்கு வழி காட்டுங்கள் என்று வந்தால், நீங்களும் எங்களை பிச்சைக்காரர்களாக நினைக்கலாமா?" என்றும் வினவியுள்ள அவர்,

"ஆராதனா பெற்றோரால் கைவிடப்பட்டவர். 9-ஆம் வகுப்பு வரை ஆணாக இருந்தவர். அதன்பிறகு பள்ளியை விட்டு வெளியேறி திருநங்கைக்கான அறுவை சிகிச்சை செய்தார். பின்னர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முயற்சித்தபோது, மீண்டும் பையனாக வந்தால் தான் டி.சி தருவேன் என்று பள்ளி தலைமை ஆசிரியர் அடம்பிடித்தார். பின்னர் ஒரு வழியாக டி.சி வாங்கி 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால், மார்க் சீட் வரவில்லை. பின்னர் அலைந்து திரிந்து அதையும் வாங்கி போலீஸ் தேர்வு எழுதினார். அதில் பாஸாகியும் உடல் திறன் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. இப்படி ஒவ்வொரு முறையும் போராடி முன்னேற துடிக்கும் திருநங்கையை துணை முதல்வராக இருப்பவர் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து பிச்சைக்காரர் போல நினைப்பது நியாமா?" என்கிறார்.

 கேள்வி நியாயம் தானே..?

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.