Skip to main content

ஓபிஎஸ் தம்பியின் பதவி பறிப்பு...அமைச்சர்களின் சதி வேலை...கடுப்பில் ஓபிஎஸ்!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது மதுரை ஐகோர்ட். ஓ.ராஜாவின் இந்த பதவிப் பறிப்புக்குப் பின்னால் அமைச்சர்களின் சதி இருப்பது அம்பலமாகியுள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் அரசியலில் குதித்த ஓ.ராஜா, அத்தேர்தலில் வெற்றி பெற்று பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் ஆனார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த ரோசி நகர் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மதுரை ஆவின் தலைவர் ஆனார்.

 

admk



இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி  110 விதிமுறையின்படி தேனி, தர்மபுரி, கரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 6 பால் உற்பத்தி சங்கங்களை பிரித்து தனி யூனியனாக செயல்படும்' என முதல்வர் அரசு ஆணை வெளியிட்டார். அதனால், மதுரை ஆவினிலிருந்து தேனி மாவட்டம் ஆவின் தனியாக பிரிக்கப்பட்டது. தேனி ஆவின் தலைவராக ராஜாவும், துணைத் தலைவராக செல்லமுத்து உட்பட 17 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். இந்த இடைக்கால குழு தேர்வு செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. சங்கத்துக்கு தேர்தல் நடத்தி, வெளிப்படையாக உறுப்பினர்கள், தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால குழு செயல்பட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தலைவர் அமாவாசை தொடர்ந்த வழக்கில், ஓ.ராஜா உள்பட 17 பேர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள் சிவஞானம், தாரணி.

 

admk



இது குறித்து அமாவாசை,  போலியான ரிக்கார்டுகளை தயார் செய்துதான் ரோசி நகர் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராஜா. அதை ரத்துசெய்ய வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அது நிலுவையில் இருக்கும்போதே, அண்ணன் ஓ.பி.எஸ். துணைமுதல்வராக இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, தேனி ஆவின் தலைவராகிவிட்டார். ஆதாரங்களுடன் கோர்ட்டில் சமர்ப்பித்ததால்தான் ராஜா தலைவராக செயல்பட தடை விதித்திருக்கிறது' என்று ராஜா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். 


ராஜா விவகாரம் குறித்து மாவட்ட பொறுப்பில் உள்ள சில ர.ர.க்களிடம் பேசியபோது, ‘மதுரையில் ஓ.ராஜா கால் வைக்கக்கூடாது என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மூவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மதுரை ஆவின் தலைவர் ஆனதோடு அல்லாமல் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே மதுரை ஆவினில் உள்ள 60-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கணிசமான தொகையைப் பார்த்து வசூல்ராஜா ஆனதால் மூன்று அமைச்சர்களும் டென்ஷனின் உச்சத்திற்கே போனார்கள். அவர்கள் மூவரும் எடப்பாடியிடம் பொங்கியதால்தான், மதுரையில் இருந்து தேனி பிரிக்கப்பட்டு அதற்கு தலைவர் ஆக்கப்பட்டார் ராஜா.

மதுரை பதவியை பறித்த அமைச்சர்களுக்கு எதிராக, மாநில அளவில் பதவியை பிடித்து காட்டுகிறேன் என்று மார்தட்டியுள்ளார் ராஜா. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலம் இம்மாதம் இறுதிக்குள் 23 யூனியனில் இருந்து மாநில தலைவர் பதவியை நியமிக்க இருக்கிறார்கள். இதில் தலைவராகிவிட்டால் சைரன் வண்டியில் பவனி வரலாம் என்று முட்டிமோதிக்கொண்டிருக்கிறார் ராஜா. இந்த விசயம் தெரிந்ததும், ஆவின் மாநிலத் தலைவர் பதவிக்கு வரக்கூடாது என்று சைலன்டாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள் மூவரும் என்கிறார்கள்.

அமாவாசை சொல்லும் குற்றச்சாட்டுகள் குறித்தும், அமைச்சர்களின் சதி குறித்தும் கேட்க ஓ.ராஜாவை தொடர்புகொண்டபோது, "கோர்ட் தடை விதித்ததை பற்றி கோர்ட்டில் தான் கேட்க வேண்டும். என்கிட்ட எதுக்கு கேக்குறீங்க?''’என்று கேட்டவாறு அதற்குமேல் பேச விரும்பாமல் லைனை துண்டித்துவிட்டார்.
 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.