Skip to main content

எடப்பாடியும்,பன்னீர்செல்வமும் தோல்வி பற்றி யோசிக்கிறது கூட இல்ல!கடுப்பில் அதிமுகவினர்! 

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததும், சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததும் கட்சியின் எதிர்காலம் குறித்து எங்களை மிகவும் கவலைகொள்ள வைத்திருக்கிறது' என்று அ.தி.மு.க. நிர்வாகிகளே கூறிவரும் நிலையில், அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலையை அறிந்திட களமிறங்கினோம். இரட்டை இலையைத் தவிர வேறு சின்னத்துக்கு இதுவரை நான் ஓட்டு போட்டதில்லை... இனிமேல் என்னாகுமோ?''’என்று சிந்தனை வயப்பட்டார் செல்லம்மாள்.

 

admk



கைலிக்கு மேல் பெல்ட்டும் கற்றையாய் மீசையும் வைத்திருந்த ராஜகணபதி, எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு ஆபத்பாந்தவனாக வந்து நின்னாங்க ஜெயலலிதா. இயக்கம் பிளவுபட்டது. ஆனாலும், பின்னாளில் இணைந்தது. அப்போது ஆனந்தக்கூத்தாடிய தொண்டர் களில் நானும் ஒருவன். ஜெயலலிதாவுக்குப் பிறகு, இந்த இயக்கம் சுயநலக் கும்பலின் கரங்களுக்குச் சென்றது, பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் முதலில் அடிபணிஞ் சாங்க. அப்புறம், "அடிமைப் பெண்' எம்.ஜி.ஆரைப் போல நிமிர்ந்து நின்று, சசிகலா கும்பலிடம் இருந்து இந்த இயக்கத்தை மீட்டாங்க. ஆனா... அ.தி.மு.க.வை வீழ்த்தணும்கிற ஒரே நோக்கத்தோடு, சசிகலா ஆதரவு நிலை எடுத்தவர்கள், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில், ஜெயலலிதாவின் படத்தையும், பெயரையும் பயன்படுத்தி குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதரவோடு இந்த தேர்தலைச் சந்திச்சாங்க.

 

admk



ஆனா... களத்தில் இரட்டை இலையை வீழ்த்தி அவர்களால் வெற்றி பெற முடியல. இதற்குக் காரணம், என்னைப் போன்ற அடிமட்டத் தொண்டர்கள் அ.தி.மு.க.வை காப்பாத்தணும்னு வெறித்தனமா ஓட்டு போட்டதுதான். ஆனாலும், இரட்டை இலையின் வெற்றி சொல்லிக்கிற மாதிரியில்ல. பூலாவரி சுகுமாரன், வத்தலக்குண்டு ஆறுமுகம், அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் போன்றோரின் குருதியில் பூத்த மலர்தான் அ.தி.மு.க.'' என்று மீசையை முறுக்கினார்.


  admk



அ.தி.மு.க. கடந்துவந்த பாதையை நன்கறிந்த சந்திரன், ""இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, முழுமையான சுயபரி சோதனை மேற்கொள்ள கட்சி தயாராகி இருக்கவேண்டும். கடந்த காலங்களில் இது நடந் துள்ளது. 1996-ல், மோசமான தோல்விதான். அப்போது, கட்சியின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியையும் சென்னைக்கு வரச்சொல்லி, தனித்தனியாகக் கேட்டறிந்தார் ஜெயலலிதா. சென்னை -வடபழனி விஜய சேஷ மகாலில்தான், இந்த ஆய்வுக் கூட்டம் நடந்துச்சு. அதோடு அவர் நிறுத்தல. கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.கிருஷ்ணசாமியை, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொண்டர்களைச் சந்தித் துப் பேசச் சொன்னார். தொண்டர்களின் உணர்வுகளை அறிந்து வந்து, வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சசிகலா கும்பல் நடத்திய ஆடம்பர திருமணமும், அவர்கள் தமிழகம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு போட்ட ஆட்டமும்தான் தோல்விக்கான காரணம் என்று ஜெயலலிதா விடம் எடுத்துச் சொன்னார். தொண்டர்களின் உணர்வு களை ஜெயலலிதாவும் அறிந்தார். பிறகு, 1999 லோக்சபா தேர்தலிலும் கட்சிக்குப் பெரும் பின் னடைவு. சென்னை, கிண்டி, டான்சி வளாகத் தில் வைத்து கட்சிக்காரர் களைச் சந்தித்தார். தொகுதி வாரியாக தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்டன.

2004 லோக் சபா தேர்தலில், நாற்பதுக்கு நாற்பதும் தோல்வி. கழகத்தை மீட்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறைந்த வாக்குகள் வித்தியாசத் தில் தோல்வியடைந்த கோபிச்செட்டிபாளையம் என்.ஆர்.கோவிந்தராஜன், நாமக்கல் அன்பழகன், பெரியகுளம் தினகரன் போன்றவர்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பொறுப்புகளை வழங்கினார்.அமைச்சர்களிடம் குவிந்து கிடந்த அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன. நாற்பதுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. இதனால், புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, கட்சி மீண்டும் வலிமையையும், பொலிவையும் பெற்றது. இதனால்தான், 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அமைத்த மெகா கூட்டணியையும் மீறி, அ.தி.மு.க.வால் 68 இடங்களை வெல்ல முடிந்தது. ஜெ. கடைசிவரை ஆளுமையோடு இருந்தார்'' என்று விரிவாகப் பேசினார்.


எம்.ஜி.ஆர். ரசிகரான முதியவர் நேசமணி, ""மோசமான தோல்விக்கு என்ன காரணம்? இதை அறிந்து சரிபண்ண வேண்டாமா? பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இது குறித்து சிந்திக்கக்கூட நேரமில்லாம சுத்திக்கிட்டிருக்காங்க. இது நியா யமா? ஜெயலலிதாவைவிட கூடுதல் ஆளுமைன்னு அவங்களுக்கு நினைப்புபோல. இந்த ஆட்சிமேல, மக்களுக்கு எந்தவிதத்திலும் நல்ல அபிப்ராயம் இல்ல. இந்தக் கோபம்தான் இரட்டை இலை இருந்தும், அ.தி.மு.க.ங்கிற ஆலமரம் சாய்ஞ் சிருச்சு. எல்லா துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுது. முதல்வர், துணை முதல்வர்ங்கிற பெரிய அந்தஸ்தில் இருக் கிறவங்களகூட சந்திச்சிடலாம். ஆனா.. அமைச்சர்களா இருக்கிறவங்கள, என்னை மாதிரி சாதாரண தொண்டனால சந்திக்க முடியாது'' என்றார் வேதனையுடன்.


அம்மாவுடைய கால் தூசிக்கு...?''’என்று சினந்த சவுந்தரராஜன், ""பதவிங்கிறது வரும்; போகும். ஆனா.. கட்சி இருந்தால்தான், எதுவுமே நடக்கும். அம்மாவைத்தான் காப்பாற்ற முடியல. கட்சியையாவது? இப்ப முதல்வர், துணை முதல்வரா இருக்கிறவங்க நல்லவங்களா? கெட்டிக்காரங்களா''ன்னு கட்சிக்காரர்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா.. வேறு வழியில்ல. இவங்க ரெண்டு பேரும்தான் சூழ்நிலையைப் புரிஞ்சிக்கிட்டு, கட்சியைத் தூக்கி நிறுத்துற காரியங்களில் இறங்க வேண்டும். கமல், சீமான், ரஜினின்னு மக்களை ஈர்க்கிறவங்க வந்துகிட்டே இருக்காங்க. அரசியலில் அடுத்து என்ன சுனாமி வரப்போகுதோ? அப்படி வந்துட்டா, அ.தி.மு.க.ங்கிற ஓட்டைப் படகு மூழ்கடிக்கப்பட்டு, இருந்த சுவடே தெரியாம போயிரும்'' என்று அழுத்தமாகச் சொன்னார். அ.தி.மு.க. காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறை அக்கட்சியில் தொண்டர்களிடம் மட்டுமே வெளிப்படுகிறது.

படங்கள்: ராம்குமார்
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விளவங்கோடு இடைத்தேர்தல்; காங்கிரஸ் வகுத்த வியூகம் - எதற்காக களமிறக்கப்பட்டார் தாரகை?

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections

தமிழகத்தில் நாடாளுமன்ற முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முன்னதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சார கூட்டத்தில் பேச இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால், முதல்வர் வருகைக்குள் காங்கிரஸ் நெல்லை வேட்பாளர்களை இறுதி செய்யும் என தகவல் வெளியாகி இருந்தது.   இதையடுத்து, நெல்லை தொகுதி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் 'ராபர்ட் ப்ரூஸ்' போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. ராபர்ட் ப்ரூஸ் தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections
விஜயதரணி

இதனிடையே, விளவங்கோடு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்து விட்டதால், அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை திமுக கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டள்ளது. விளவங்கோடு தொகுதி சட்டபேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக இந்த முறை தான் இடைத்தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக விஜயதரணி இருந்ததால், இந்த தொகுதியில் பெண் வேட்பாளரையை அனைத்து கட்சிகளும் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதலில் அதிமுக சார்பில் சமூக சேவகி ராணி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் தொடங்கி விட்டார். இதையடுத்த, பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்தமுறை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட ஜெயசீலனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அதிமுக பெண் வேட்பாளரை நிறுத்தியாதல் பாஜகவும் போட்டிக்கு நந்தினியை நிறுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த நிலையில், நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுடன் சேர்த்து விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த முறையும் பெண் வேட்பாளராக 'தாரகை கத்பர்ட்' என்பவரை டெல்லி காங்கிரஸ் தலைமை  நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் 'தாரகை கத்பர்ட்' முதல் முறையாக  இடைத்தேர்தலில் களம் காண்கிறார். இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். 

மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் தான். விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஜி.ரமேஷ் குமார், தாரகை கத்பர்ட் ஆகிய நான்கு பேரும் இறுதிப்பட்டியலில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections
தாரகை

தாரகை கத்பர்ட் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. முதல் காரணம் நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடப்பதால் மீனவர்கள் வாக்குகளை கவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மீனவர் அமைப்புகள் எல்லாம் இணைந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீனவர் வேட்பாளரை அறிவித்தால் ஆதரவு தருகிறோம் என வெளிப்படையாக சொல்லியுள்ளனர். இதுவும், மீனவரான தாரகை கத்பர்ட்டை வேட்பாளராக தேர்வு செய்ய ஒரு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தாரகை கத்பர்ட் தேர்வு செய்யப்பட முக்கியமான காரணம் மற்றொன்று உள்ளது. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடியில் நடந்த மகிளா காங்கிரஸ் அகில இந்திய மாநாட்டில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "விளவங்கோடு தொகுதியில் நீங்கள் நினைப்பது நடக்கும்.." என சூசகமாக கூறியிருந்தார். மற்ற கட்சிகளின் சார்பாக பெண் வேட்பாளர்களே களமிறக்கப்பட்டதால், காங்கிரஸ் சார்பிலும் பெண் வேட்பாளராக தாரகை கத்பர்ட் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections

இதனிடையே, திடீரென காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி பாஜகவில் இணைந்ததை கடுமையாக 'தாரகை கத்பர்ட்' விமர்சனம் செய்து வந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு செயல்பட்டு வந்த தாரகை கத்பர்டிற்கு இந்த முறை டெல்லி காங்கிரஸ் தலைமை அங்கீகரித்து வாய்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து தாரகை கத்பர்ட்டின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் நாங்குநேரி பிரச்சார கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களையும், விளவங்கோடு இடத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரையும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

இன்னும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயதரணி எம்எல்ஏ-வாக இருந்த விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் என பிரதான நான்கு கட்சிகளும் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.