Skip to main content

அ.தி.மு.க.வில் ஊராட்சி செயலாளர்கள் பதவி பறிப்பு... பின்னணியில் சசிகலா... இ.பி.எஸ்.ஸிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

admk


எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வில் ஒரு கிளைக் கழகத்தில் ஒரு அவைத்தலைவர் ஒரு கிளைச்செயலாளர் ஒரு பொருளாளர் ஒரு துணைச்செயலாளர் இரண்டு மேலவை பிரதிநிதிகள். இந்த ஆறுபேர் கொண்ட பிரதிநிதிகளுக்கு கீழ் கட்சியின் அங்கத்தினர்கள் செயல்பட்டு வந்தனர். இதே நடைமுறையில்தான் ஜெயலலிதாவும் கட்சி நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெ., சசி இருவரும் ஆலோசனை செய்து கிராம ஊராட்சிகளில் உள்ள கிளைச் செயலாளர்கள் அதன் துணைப் பொறுப்பாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி செயலாளர் என்ற பதவி உருவாக்கினர். அ.தி.மு.க.வினருக்கு புதிய கட்சிப்பதவியாக அது அமைந்தது. அந்த ஊராட்சி செயலாளர் பதவிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க.
 


ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் புதிதாக ஏன் உருவாக்கப்பட்டன. இப்போது அந்தப் பதவிகள் ஏன் காலிசெய்யப்பட்டன இதுகுறித்து அ.தி.மு.க. ஒ.செ.க்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் நாம் விசாரித்தோம். பொதுவாக ஒரு வருவாய் கிராமம் ஒரு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டு மூன்று உட்பிரிவு கிராமங்கள் தமிழகம் எங்கும் உள்ளன. இதே போன்று மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளில் பல கிளைக் கழகங்கள் உள்ளன. இதுபோன்ற கிளைக் கழகங்களில் உள்ள பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து கட்சிப் பணிகளைச் செயல்படுத்தவும் கட்சி மேலிட உத்தரவுகளை கிளை பொறுப்பாளர்களிடம் கொண்டு சென்று செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஊராட்சிசெயலாளர் பதவி.

இதன்படி ஒரு ஊராட்சிக்கு மட்டும் செயலாளர், இவருக்கு கீழ் துணைகிராம கிளை பொறுப்பாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்... ஜெ. இருந்தவரை மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை எல்லோரும் அடங்கி ஒடுங்கி கட்சிப்பணி செய்துவந்தனர். ஜெ மறைவுக்குப் பிறகு ஊராட்சி செயலாளர்களுக்கும் கிளை செயலாளர் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் இடையே முட்டல்கள் மோதல்கள், உள்குத்துகள், மந்திரிகள்- மா.செ.க்களிடம் செல்வாக்கு பெறுவதில் ஈகோ, காரியம் சாதிப்பதில் போட்டிகள் அதிகரித்தன. கட்சி நிகழ்ச்சிகள், தேர்தல் வேலைகள் எல்லாமும் பாதித்தன.
 

 


கட்சிகூட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு மக்களைக் கூட்டிவரும் பணிகளில் கிளைச் செயலாளர்களுக்கும் ஊராட்சி செயலாளர்க்கும் இடையே போட்டியின் காரணமாக சொதப்பியது. இதன் காரணமாக கடந்த எம்.பி. தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் கட்சி தோல்வியடைய இவர்களின் உள்குத்து மோதல்களும் காரணம். மேலும், வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக கொடுத்த பணத்தைப் பலர் பதுக்கிக்கொண்டனர் என்ற குற்றசாட்டும் கட்சித் தலைமைக்குச் சென்றது மேலும் இந்த ஊராட்சி செயலாளர் பதவிகளில் உள்ளவர்களில் அதிகளவில் சசி ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இப்போதைய கட்சியின் தலைமைக்கு எதிராக உள்குத்து வேலை செய்துவந்ததாகவும் சமீபத்திய கரோனா நிவாரணம் வழங்கியதில் முதலமைச்சர் தொகுதியான எடப்பாடியில் பல்வேறு விரும்ப தகாத செயல்களில் ஊராட்சி செயலாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் ஈடுபட்டதாகவும் ரிப்போர்ட் போயிருக்கிறது.

அதுமட்டுமல்ல, அரசு கான்ட்ராக்ட்டுகளில் கமிஷனில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கிளைச் செயலாளர்களைத் தனியாகவும், ஊராட்சி செயலாளர்களைத் தனியாகவும் கவனிக்க வேண்டும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான், இந்த இடைச்செருகல் பதவியால், தேவையற்ற மோதல்களும், ஒரு தரப்பினரின் வருவாய்ப் பெருக்கமும் கட்சியைப் பலவீனப்படுத்துகிறது என்ற அடிப்படையில் ஊராட்சி செயலாளர் பதவிகளைக் காலி செய்துள்ளது அ.தி.மு.க. தலைமை.
 

http://onelink.to/nknapp


இதுநாள் வரை ஊராட்சி செயலாளர்களாக இருந்தவர்களுக்கு கவுரவமான மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என்று ஆறுதல் வார்த்தையும் கூறப்பட்டுள்ளது.


 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.