Skip to main content

தேர்தல் முறையை மாற்றினால் செலவைக் குறைக்க முடியுமா?

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

உலகிலேயே உடைகளுக்காக அதிக செலவு செய்கிற பிரதமர் இந்தியாவின் மோடியாகத்தான் இருக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 3 விதமான உடைகளை அவர் அணிகிறார். ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அவர் அணிவதில்லை என்ற பெருமை வேறு பேசிக்கொள்கிறார்கள்.
 

one nation one election


இந்தியா போன்ற ஏழை தேசத்தின் அரசு செய்யும் வீண் செலவு மிகமிக அதிகம். கல்விக்காக செய்யும் செலவைவிட வீண் செலவுகள் அதிகம் என்கிறார்கள். இந்திய குடியரசுத் தலைவருக்கும் அவருடைய மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகளும் மலைப்பை ஏற்படுத்துகிறது.

இதேபோலத்தான் ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநர் மற்றும் அவர் தங்கியிருக்கும் மாளிகை ஊழியர்களுக்கான செலவும் எந்த பயனும் இல்லாதது என்ற கருத்து நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.

ஆனாலும், இந்தியாவின் தேர்தல் செலவுதான் இன்றைய மோடி தலைமையிலான பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது. சரி, புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின்கீழ் 1952 ஆம் ஆண்டு முதன்முதல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்த்துதானே தேர்தல் நடைபெற்றது.

பிறகு எப்படி இப்போது மட்டும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சில மாநிலங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. வெவ்வேறு கால இடைவெளியில் பல மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றன?

மத்திய அரசு தனது சுயநலத்துக்காக செய்யும் ஆட்சிக் கலைப்புகளுக்கு ஆளான மாநிலங்களுக்கும், பெரும்பான்மை இழந்ததால் கவிழ்ந்த மாநிலங்களுக்கும் மட்டுமே இப்போது வெவ்வேறு ஆண்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது. மத்திய அரசுகளே முழு பதவிக் காலம் நிறைவதற்குள் கவிழ்ந்திருக்கின்றன. அதன் காரணமாகவும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்கள் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.
 

 

one nation one election


உண்மை நிலைமை இப்படி இருக்க, இப்போது ஒரே தேசம், ஒரே தேர்தல் என்று மோடி ஒரு மாய்மால வித்தையை அரங்கேற்ற முயற்சிக்கிறார். இதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு பிடிவாதமாக இருந்தால் பல மாநிலங்களில் இப்போதிருக்கிற அரசுகளை பதவிக்காலம் முடிவதற்குள் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

சரி, ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு பெரும்பான்மை பலம் இழந்தால் அது கவிழாதா? அந்த அரசு கவிழ்ந்து தேர்தல் நடத்த நேர்ந்தால், மாநில அரசுகளையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தப்படுமா? அல்லது, மத்தியிலும் மாநிலத்திலும் பொறுப்பேற்கிற அரசுகள் பெரும்பான்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க வகை செய்யப்படுமா? அது எப்படி?

இதுதொடர்பாக மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல், தெலுங்குதேசம் உள்ளிட்ட 11 கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், பெரும்பாலான கட்சிகள் மோடியின் திட்டத்தை ஆதரித்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்ததாக அவர் பேட்டியில் சொல்கிறார். ஆனால், அதற்கு மாறாக சீதாராம் யெச்சூரி பேட்டி கொடுக்கிறார்.

செலவுகளைக் குறைப்பதுதான் அரசின் நோக்கமென்றால் அரசாங்கத்தின் வீண் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்தாலே போதும். அதைவிடுத்து ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைக்கும் வகையில் தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவரத் துடிப்பது சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது. தேர்தல் முறையை மாற்றுவதற்கு முன், தேர்தல் நியாயமாகத்தான் நடக்கிறது என்பதையும், வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய கட்சிக்குத்தான் வாக்களித்தார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியதுதான் முக்கியம். செலவைக் குறைக்க வேண்டும் என்று மோடி நினைத்தால், ஸ்வீடன் நாட்டு அரசாங்கத்தை மாதிரியாக கொண்டு நிர்வாகத்தை மாற்றி அமைக்கலாம்.

ஆம், அந்த நாட்டு அரசு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்களுக்கு சிறப்பு உரிமைகளை கொடுப்பதில்லை. அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசுக் கார்களோ, அவற்றுக்கு டிரைவர்களோ கொடுப்பதில்லை. அவர்கள் பொதுமக்களைப் போல பஸ்களிலும் ரயில்களிலும் கூட்டத்தோடு கூட்டமாகவே பயணிக்க வேண்டும்.

அமைச்சர்களாக இருந்தாலும் நீதிமன்ற விசாரணையில்கூட விலக்கு பெறமுடியாது. அமைச்சர்களுக்கு மிகச்சிறிய அலுவலக அறை மட்டுமே கொடுக்கப்படும். அவர்களுக்கு தனிச்செயலாளர் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள்.
 

 

one nation one election


“நாங்கள்தான் அமைச்சர்களின் செலவுக்கு பணம் கொடுக்கிறோம். அவர்கள் எங்களைப்போலத்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு எதற்காக ஆடம்பர வாழ்க்கை?” என்று ஸ்வீடன் குடிமகன் ஒருவர் சொல்லும் நிலைதான் அங்கிருக்கிறது. இத்தனைக்கும் பாதுகாப்பு இல்லாததால் ஸ்வீடன் பிரதமர் ஒருவர் நடந்து செல்லும்போது கொல்லப்பட்டார். அப்படியும் கூட பிரதமர் மட்டுமே பாதுகாப்பு படையினரின் ஒரு காரை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது. சில மாதங்கள்வரை வாடகைக் கார்களை பயன்படுத்த அனுமதி இருந்தது. ஆனால், இப்போது அதுவும் பறிக்கப்பட்டு, பஸ்கள், ட்ரெயின்களில் இலவசமாக பயணம் செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகரும் விதிவிலக்கில்லை.

ஸ்வீடனில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைப் போல இருமடங்கு மட்டுமே அமைச்சர்களும் எம்.பி.க்களும் சம்பளம் வாங்குகிறார்கள்.

இதுபோன்ற நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டால், இந்தியாவை நிஜமாகவே வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். அம்பானியும் அதானியும் வளர உதவும் மோடி போன்ற ஆட்கள் பிரதமராக இருக்கும்வரை இந்தியாவில் கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வளரமுடியும்.
 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.