Skip to main content

அன்பில்தானே ஜீவன் இருக்கு; ஆச்சரியப்படுத்தும் முதியவர்! 

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

old man who funding to schools and government

 

யாசகம் பெற்று அதன்மூலம் சேமிக்கும் பணத்தில் அரசுக்கும், பள்ளிகளுக்கும் தொடர்ந்து உதவி செய்து வரும் முதியவர், உதவி செய்வதற்கு பணம் இரண்டாம் பட்சம்தான், மனம்தான் முதல் தேவை என்பதை நிரூபித்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் தாலுகா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 73 வயது முதியவர் பூல்பாண்டியன். சென்ற 17-ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு இவர் வந்திருந்தார். அப்போது அவரது கையில் ரூபாய் பத்தாயிரம் கொண்டு வந்திருந்தார். “எதற்கு பணம் கொண்டு வந்திருக்கிறீர்கள்” என அங்கிருந்த ஊழியர்கள் கேட்க, “இந்த பணத்தை நான் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்” என கூறினார். பிறகு அவரைப் பற்றி விசாரித்தவர்கள், அதை கருவூலத்தில் செலுத்தி ரசீது வாங்கிவருமாறு கூறினார்கள். அதன்படியே கருவூலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த பணத்தை செலுத்தி ரசீது வாங்கிக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர் பூல்பாண்டியன், அங்கு மனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி சந்திராவிடம் பத்தாயிரம் ரூபாய்க்கான ரசீதைக் கொடுத்தார்.

 

தோற்றத்தைப் பார்த்தால் ஒரு சாமியாரைப்போல் இருந்த அவரிடம், “நீங்க யார்? எதற்காக இந்த பணத்தை இப்போது முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்துகிறீர்கள்?” என விவரம் கேட்டோம்.

 

old man who funding to schools and government

 

“எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் தாலுகா ஆலங்கிணறு. 1980-ஆம் ஆண்டு பிழைப்பு தேடி பம்பாய் (மும்பை) சென்றேன். அங்கு ஒரு அயன் கடையில் வேலை பார்த்தேன். பின்னர் அந்த வேலை ஒத்துவராததால் வேலையை விட்டுவிட்டேன். சாப்பிட பணம் இல்லை. ஒருகட்டத்தில் வேறு வழியேயின்றி கோவில்கள், முக்கிய திருவிழாக்களில் மக்கள் கூடும் இடங்களில் சென்று பிச்சை எடுக்கத் தொடங்கினேன். மும்பை பகுதியிலேயே பல வருடங்கள் பிச்சை எடுத்தேன். எனது தேவை போக ஏராளமான பணம் சேமிக்க முடிந்தது. அப்போதுதான் இந்த பணத்தை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தலாம் என முடிவு செய்தேன். சில வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தேன்.

 

2010-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்தேன். அதில் சேர்ந்த பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்ய முடிவுசெய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவினேன். இதேபோல் கொரோனா காலகட்டத்தில் மதுரையில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன். இதுவரை பிச்சை எடுத்ததின் மூலம் சேர்ந்த பணத்தில் லட்சக்கணக்கில் நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசுப் பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்துகொடுத்துள்ளேன். நான் யாரிடமும் வற்புறுத்தி கேட்கமாட்டேன். செல்வந்தர்கள், பக்தர்கள் எனக்குக் கொடுக்கும் பணத்தை அப்படியே சேமித்து வைத்து அதை நான் இப்படி பயன்படுத்தி வருகிறேன்.

 

ஈரோடு மாவட்டத்திற்கு முதன்முதலாக வந்துள்ளேன். தற்போது என்னிடமிருக்கும் ரூபாய் 10 ஆயிரத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். என் உயிர் உள்ளவரை என்னால் முடிந்த உதவியை செய்வேன்” என்றார்.

 

“பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பாண்டியன். இவரோ, பிச்சையெடுத்த காசில் கல்விக்கூடங்களுக்கு உதவிசெய்து வருகிறார். வாழ்க்கைதான் மனிதர்களை எத்தனை எத்தனை விதங்களில் படைத்து ஆச்சரியப்படுத்துகிறது.

 

 

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.