Skip to main content

ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்கிவிடக் கூடாது! -விருதுநகரில் வெடித்த தென்மாவட்ட அரசியல்!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

“நல்ல காரியம்கூட அரசியல் கண்ணோட்டத்தில் கெட்டதாகவே பார்க்கப்படுகிறது. விருதுநகரிலுள்ள ஆளும்கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளே, இதற்கு உதாரணம்.” என்று விருதுநகரில் அதிமுக சீனியர் ஒருவர் நம்மிடம் புலம்பிய நேரத்தில், கணேஷ் கண்ணன் என்பவர் “நல்லவர்களுக்கு இதுதான் கதியா?” என்றும், “கட்சிக்குள் இவ்வளவு கடும் கோபம் எதற்கு? கட்சியை வளர்ப்பதற்கா? கட்சியை அழிப்பதற்கா? நமது கட்சியில் அரசியலை வைத்து சம்பாதித்தவர்களெல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். இவரோ, வியாபாரத்தில்  சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்காக செலவழிக்கிறார்.” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 


 

Thangaraj with OPS



யார் அந்த நல்லவர்? என்ன நல்ல காரியம் செய்தார்?
 

விருதுநகரில் பிறந்து கோவையில் தொழில் செய்துவரும் கோகுலம் தங்கராஜ் என்பவர், 2018-ல் விருதுநகரிலுள்ள நிறைவாழ்வு நகர் என்ற இடத்தில், தன் சொந்த செலவில்  ரூ.50 லட்சம் மதிப்பீட்டில்,  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாலம் கட்டிக் கொடுத்தார். அப்போது, 'கட்சி சார்பற்ற இளைய தலைமுறை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 
 

தற்போது, ‘விருதுநகர் முனிசிபாலிடி சேர்மன் சீட் உங்கள் மனைவி மாலா தங்கராஜுக்குத்தான்..’ என்று அதிமுக தரப்பில் உத்தரவாதம் அளித்திருக்கும் நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தில், விருதுநகரின் அத்தனை வார்டுகள் மீதும் கரிசனம் கொண்டு,   நிவாரண உதவிகளை நேரடியாக வழங்க ஆரம்பித்தார் தங்கராஜ்.  இது,   ‘அமைதிப்படை அமாவாசை’ ரேஞ்சுக்கு பேசப்படும் உள்ளூர் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு பிடிக்கவில்லை.  ‘அடுத்த சேர்மன் தனது கைக்குள் அடங்கியவராக இருக்கவேண்டும்’ என்று ஒருவரது மனைவியை மனதுக்குள் தேர்வு செய்துவிட்டு, தங்கராஜுக்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். 

 

Nakkheeran app


 

‘அமாவாசை’ தரப்பினர் தூண்டுதலின் பேரில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம், கோகுலம் தங்கராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. ‘ஊரடங்கு விதிகளை மீறி விடுதி ஒன்றில் தங்கியபடி, அதிமுகவினரை வைத்து தங்கராஜ் கூட்டம் நடத்துகிறார். ஊருக்குள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். திருப்பூருக்கும், விருதுநகருக்கும் அடிக்கடி தங்கராஜ் வந்து செல்வது எப்படி?’ என்று புகாரில் கேள்வி எழுப்ப, “சரி.. நீங்க கிளம்புங்க..” என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தங்கராஜுவை அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறது.   
 

நாம் கோகுலம் தங்கராஜுவை தொடர்புகொண்டோம். “எதிர்கட்சியினர் என்றால் மோதிப்பார்க்கலாம். ஏழைகளுக்கு நல்லது செய்வதை சொந்த கட்சியிலேயே எதிர்க்கிறார்கள். என்ன செய்வது? அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. 2017-ல் இருந்தே, இங்கே விருதுநகரில் ஆர்.ஆர்.நகர், கல்போது, கன்னிசேரி புதூர் போன்ற பகுதிகளில், மக்கள் நலத்திட்டங்களை என்னால் முடிந்த அளவுக்கு செய்து வருகிறேன். என்னை வெளியூர்க்காரன் என்று யாரும் சொல்ல முடியாது. இங்குதான் பிறந்து வளர்ந்தேன்.  என்னை கட்சிக்கு கொண்டுவந்தது பிடிக்கவில்லை என்றால் அமைச்சரிடமே நேரடியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே? மக்களுக்கு கொடுப்பதை தடுக்கும் அரசியலை ஏன் பண்ண வேண்டும்?” என்று வருத்தப்பட்டார். 
 

“துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவர் தங்கராஜ். பந்தா பேர்வழி போல தெரிவார்.    விருதுநகர் நகராட்சிக்கான தேர்தலில், தன் சொந்தப்பணத்தை வாக்காளர்களுக்கு வாரியிறைத்து வெற்றி பெறக்கூடியவர் என்ற அடிப்படையில்தான், அவரது மனைவிக்கு சேர்மன் சீட் என்று சொல்லி களத்தில் இறக்கிவிட்டனர்.  தங்கராஜுவுக்கு எதிராக சிலர் கிளம்பியிருப்பதை, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அரசியலாகவே பார்க்க வேண்டியதிருக்கிறது. தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். கை ஓங்கிவிடக்கூடாது என்று முளையிலேயே கிள்ளி எறியப் பார்க்கின்றனர்.” என்றார் அந்த சீனியர்.  
 

அரசியலில் எல்லாமே ஒரு கணக்கோடுதான் நடக்கிறது!
 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.