Skip to main content

மாற்றத்தைத் தடுக்கும் பலம்! காத்திருக்கத் தேவையில்லை..! கமலின் புதுக்கூட்டணி..!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

kamal haasan

 

பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலையொட்டிய அரசியல் வியூகங்களிலும் கவனமாகவே இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற 3% வாக்குகள், சட்டமன்றத் தேர்தல் களத்தில் துருப்புச் சீட்டாக இருக்கும் என நம்புகிறார். அதனால், கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழுவினை கடந்த 16-ந்தேதி சென்னையில் கூட்டி, உற்சாக வரவேற்புடன் கலந்துகொண்டார் கமல்ஹாசன்.

 

கரோனா நெருக்கடி என்பதால், கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொருளாளர் சந்திரசேகர், பாண்டிச்சேரி மாநில துணை தலைவர் தங்கவேலு மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர்கள் அருணாசலம், முருகானந்தம், குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 30 பேர் மட்டுமே சமூக இடைவெளியுடன் பங்கேற்ற கூட்டத்தில், 65 வயதைக் கடந்தவரான கமலுக்கு அருகே யாரையும் உட்கார அனுமதிக்கப்பட வில்லை. செல்ஃபோன்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்தது செயற்குழு. இதனை கூட்டத்தின் முடிவில் தெரிவித்த கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், "தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்கிற முடிவெடுக்கும் முழு அதிகாரமும் கமல்ஹாசனுக்கு வழங்கப் பட்டுள்ளது'' என்கிறார்.

 

கூட்டம் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசிய போது, "தி.மு.க-அ.தி.மு.க இரு கட்சிகளுக்கும் மாற்றாக புதியவர்கள் தமிழகத்தின் ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என இளைஞர்களும் நடுநிலையாளர்களும் விரும்புகின்றனர். ஆனால், அந்த இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் உறுப்பினர்கள் பலம் மாற்றத்தை தடுக்கின்றன. ஆனாலும், கூட்டணிக்குள் சிக்கக்கூடாது. தனித்துப் போட்டியிடவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

 

அதேசமயம், திமுக-அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு மாற்றாக, ஒத்த சிந்தனையுள்ளவர்களை அரவணைத்து மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணி உருவானால் திமுக-அதிமுகவுக்கான எதிர்ப்பு வாக்குகளையும் நடுநிலையாளர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களின் ஆதரவையும் நாம் பெற முடியும். தலைவர் (கமல்) நினைக்கிற மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என சிலர் வலியுறுத்தினர். இத்தகைய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டதால் தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தை கமலுக்கு கொடுக்கப்பட்டது.

 

கூட்டத்தில் கமல் மட்டுமே சுமார் ஒன்னரை மணி நேரம் பேசினார். அவர் தனது பேச்சில், ரஜினியின் அரசியலை மறைமுகமாக தாக்கினார். அதாவது, "அவர் வருகிறார்; வர மாட்டார் என்கிற விவாதம் நடக்கிறது. அவருடன் நாம் கூட்டணி வைப்போம் என்றெல்லாம் செய்தியைப் பரப்புகிறார்கள். அவருக்காக மட்டுமல்ல யாருக்காகவும் நாம் காத்திருக்கவில்லை. காத்திருக்கவும் மாட்டோம். காத்திருக்கவும் தேவையில்லை. நம் பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும்'' என ரஜினியைப் பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார் கமல்.

 

மேலும், "இந்த தேர்தலில் யாரும் அவ்வளவு எளிதாக ஜெயித்துவிட முடியாது. முன்பை விட இப்போது மக்களுக்கு அரசியல் புரிகிறது. நமக்கு திமுகவுடனும் அதிமுகவுடனும் நேரடி போட்டி கிடையாது. ஊழலுக்கும் நமக்கும் தான் நேரடி போட்டி. அதிமுக-திமுக இரண்டு கட்சிகளிடமிருந்து விடுதலையாக வேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள். அதனை மனதில் நிறுத்தி மக்களுக்கு நேர்மையான அரசியலைத் தருவதற்கு நாம் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என கமல் பகிர்ந்துகொண்டார்'' என்கிறார்கள் நம்மிடம் பேசிய ம.நீ.ம.நிர்வாகிகள்.

 

மக்கள் நீதி மய்யத்தின் உள்கட்டமைப்பு வலிமையாக இருப்பதையும், இளைஞர்களும் மாணவர்களும் நம் கட்சியில் ஆர்வமாக இணைந்து வருவதையும், அதனைப் பயன்படுத்தி, இந்த தேர்தலில் பிரதான கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் நீதி மய்யமாக இருக்க வேண்டும் எனவும் தனக்கே உரிய பாணியில் சுட்டிக்காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

 

cnc

 

ரஜினியுடன் கூட்டணி வைப்பார் அல்லது திமுகவுடன் கூட்டணி வைப்பார் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக கமல் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால் கூட்டணியில் சேரப் போவதில்லை என்பதை மக்கள் நீதி மய்யம் வெளிப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.

 

இதற்கிடையே, ரஜினிக்காக காத்திருக்கத் தேவையில்லை என கமலின் பேச்சின் பின்னணி குறித்து, ரஜினி மற்றும் கமலுக்கு நெருக்கமான தரப்பில் விசாரித்த போது, "ரஜினியுடன் கூட்டணி அமைக்க தயார் என சொன்னவர் கமல்ஹாசன். அப்படி சொல்லப்பட்ட காலத்தில் ரஜினியை சந்தித்து இதுகுறித்து கமல் விவாதிக்கவும் செய்தார். ஆனால், இது குறித்து ரஜினி எந்த நம்பிக்கையான வார்த்தையையும் கமலுக்குத் தரவில்லை. அதனால் தேர்தல் காலங்களில் மீண்டும் பேசலாம் என அமைதியாகிவிட்டார் கமல். அதேபோல, தேர்தல் அரசியலில் ரஜினி ஈடுபட்டால் கமலுடன் இணைந்து தேர்தலை சந்திக்க ரஜினி விரும்பவில்லை. இதெல்லாம் தெரிந்ததால்தான், காத்திருக்கத் தேவையில்லை என கமல் சொல்லியுள்ளார்'' என்கிறார்கள் இரு தரப்புக்கும் நெருக்கமானவர்கள்.

 

 

 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.