Skip to main content

அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ பயமில்லை... ஊழல் புகார்களை மறைக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

ddd

 

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் இருக்கின்றன. ஆனால், அந்த ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர எந்த முனைப்பையும் காட்டுவதில்லை எடப்பாடி அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை. இதனால்தான் அந்த வழக்குகள்மீது ஆதிக்கம் செலுத்த மத்திய பாஜக அரசு தன் வசமுள்ள சி.பி.ஐ மூலம் முயற்சிக்கிறது என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.


ஊழல்களுக்கு எதிராகப் போராடி வரும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான எம்.எல். ரவி கூறுகையில், "அமைச்சர்கள், அதிகாரிகள், பிரபலங்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில், சம்மந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் சி.பி.ஐ அதிகாரிகள் சறுக்கினாலும், தங்களிடம் வரும் ஊழல் புகார்களை பதிவு செய்து, விசாரணை நடத்தி, கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்கிறார்கள். சில வழக்குகளில் தண்டனையும் கிடைக்கிறது. ஆனால், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை குறைந்தபட்சம் புகாரை பதிவுசெய்யக்கூட முயற்சிப்பதில்லை. பல புகார்கள் முடங்கி விடுகின்றன. முதல்வர் எடப்பாடி வசமிருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் கோட்டக் கணக்கர் பதவிக்கான தேர்வினை மாநில ஏ.ஜி அலுவலகம் நடத்தியது. இதில் லஞ்சம் கொடுத்து பலர் தேர்ச்சி பெற்றனர். அந்த ஊழலில் சம்மந்தப்பட்ட மாநில கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ கைது செய்ததுடன், லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்ற நெடுஞ்சாலை துறை கோட்ட கணக்கர்களின் விடைத் தாள்களை கைப்பற்றி ஹைதராபாத் புலனாய்வு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தது.

 

ஆய்வுகளில் ஊழல் உறுதியானதால், அதனை முதல்வர் எடப்பாடிக்கும், துறையின் செயலாளருக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ வலியுறுத்தியது. ஆனால், குற்றவாளிகளான கோட்ட கணக்கர்கள் தண்டிக்கப்படவில்லை. மேலிடத்தின் ஆசியோடு இப்போதும் பணியில் நீடிக்கிறார்கள். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நான் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

அதேபோல தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையால் கட்டப் பட்ட பாலங்களில் பல ஆயிரம் கோடி ஊழல்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக, தஞ்சையில் கட்டிமுடிக்கப்பட்ட ஒரு பாலம் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது. புதுக்கோட்டையில் கட்டப்பட்ட ஒரு பாலத்தில் போடப்பட்ட சாலையில் வெடிப்புகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு அருகதையற்றுப் போனது. காஞ்சிபுரம், பொன்னேரி பகுதிகளிலும் பாலங்கள் முறையாகக் கட்டப்படாமல் காண்ட்ராக்டருக்கு பில் பாஸான உடனேயே பழுதடைந்தன. இவைகள் குறித்த புகார்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.


கடந்த 2017-ல் தார் கொள்முதல் செய்ததில் சுமார் 1,000 கோடி ரூபாயை சுருட்டியது நெடுஞ்சாலைத்துறை. இதற்கான ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கோர்ட்டுக்கு போனது அந்த ஊழல் விவகாரம். நீதிமன்றத்தின் எச்சரிக்கையால் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழலில் சிக்கியுள்ள அதிகாரிகளைக் கைது செய்யவோ, அவர்களைக் குற்றவாளிகளாக நிரூபிக்கவோ எந்த ஒரு சின்ன விசாரணை முனைப்பையும் கடந்த 3 வருடமாகக் காட்டவில்லை. இதனால் ஊழல் குற்றவாளிகள் பதவி உயர்வு பெறுவதும், அனைத்து ஓய்வுகால பலன்களுடன் பணிஓய்வு பெறுவதும் நிறைய நடந்துள்ளன. அதனை வேடிக்கை பார்த்தபடியே திருப்தியடைகிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

 

தேசிய நெடுஞ்சாலை பணிகளில் நடந்த முறை கேடுகள் மீதான புகாரில் சிக்கிய தேசிய நெடுஞ்சாலை திண்டுக்கல் கோட்டப் பொறியாளர் முருகபூபதியை, கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்து, நடத் திய விசாரணையில், இந்த ஊழல்களுக்குப் பின்னணியில் துறையின் உயரதிகாரிகள், தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், அரசியல்வாதிகள், மத்திய அரசு பொறியாளர்கள் என பலரும் இருப்பதை முருகபூபதி வெளிப்படுத்தியதாக தகவல். இதனையறிந்த தேசிய நெடுஞ்சாலை வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஒருவர், தன்னை சி.பி.ஐ கைது செய்துவிடுமோ என்கிற அச்சத்தில் விருப்ப ஓய்வில் சென்று விட்டார். தற்போது இந்த ஊழல் புகாரை வெவ்வேறு கோணங்களில் சி.பி.ஐ எடுத்துச் செல்வதாக தெரிகிறது.

 

அதேபோல, சென்னை தேசிய நெடுஞ்சாலை வட்டத்தில் நடக்கும் பணிகளில் அரசின் மேலிடத்துக்கும் பொறியாளர் ஒருவருக்கும் நடந்துள்ள ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் ஆடியோ பதிவுகள் சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில், சி.பி.ஐ.யால் தனக்குப் பிரச்சனை வந்து விடுமோ என பயந்து அந்த பொறியாளர் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். அதேசமயம், அந்த பொறியாளர் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என அவருக்கு அரசு மேலிடம் அழுத்தமும் கொடுத்துள்ளது. இதனால் விருப்ப ஓய்வில் செல்ல அவரும் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதற்கிடையே, சம்மந்தப்பட்ட பொறியாளரின் கீழ் பணிபுரிந்த கோட்டப் பொறியாளர் ஒருவரையும் வேறு பிரிவுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்துவிட்டது நெடுஞ்சாலைத்துறை.

 

சி.பி.ஐ.யிடம் செல்லும் எடப்பாடி அரசின் ஊழல் புகார்களால் அரசு மேலிடமும் அதிகாரிகளும் பயந்து போகிறார்கள். அதுவே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் செல்லும் புகார்கள் மீது அவர்களுக்குப் பயம் வருவதில்லை. ஆட்சியாளர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சலாம் போடுகிறது. இத்துறைக்கு அனுப்பப்படும் புகார்கள் முன்பெல்லாம் அவர்களது குப்பைக் கூடையில் போட்டுவிடுவார்கள். இப்போதெல்லாம் அந்தப் புகார்கள் சம்மந்தப்பட்ட துறைக்கே அனுப்பப்படுவதால் துறையிலுள்ள குப்பைகளில் சேர்ந்து விடுகிறது.

 

இதனால், லஞ்ச ஒழிப்புத் துறையிலுள்ள ஊழல் புகார்களை கண்காணிக்கவும், ஆட்சியாளர்களுக்கு எதிராகவுள்ள ஊழல்களை மூடி மறைக்க நடக்கும் ஊழல்களைக் கண்டறியவும் ஒரு விசாரணை கமிசனை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்குப் புகார் அனுப்பவிருக்கிறேன்'' என்கிறார் ஆவேசமாக.

 

மேலும் நாம் விசாரித்தபோது, ‘’தேசிய நெடுஞ்சாலை பிரிவில் மத்திய அரசின் நிதியை எடப்பாடி அரசின் நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகளும் பொறியாளர்களும் வாரிச் சுருட்டுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, தேவையற்ற சாலைகளைக் காரணமேயின்றி மேம்படுத்தத் திட்டமிடுவது, அதற்காக பல கோடி ரூபாய்களில் கூடுதல் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுவது, அதிகமாக கமிஷன் தரும் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்குவது ஆகிய ஊழல்கள் வேகமெடுத்துள்ளன. இதனைக் கண்டறிந்த மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை தற்போது நிறுத்திவிட்டது.

 

dddd

 

தேசிய நெடுஞ்சாலை பணிகளில் பின்பற்றப்பட்டு வரும் ஈ.பி.சி ஒப்பந்த முறைகளுக்குத் தனியார் கண்சல்டண்ட்கள் மூலம் துறையின் அதிகாரிகள், காண்ட்ராக்டர்களின் விருப்பத்திற்கேற்ப மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன. இப்படி மதிப்பீடுகளை தயாரிப்பதற்காகவே ஓவுரெட்டி என்பவரை ஆலோசகராக வைத்துள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நெடுஞ்சாலைத் துறையால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் பொறியாளரான இவரை ஊழல் புகாரில் ஏற்கனவே சி.பி.ஐ கைது செய்துள்ளது. அண்மையில் வேறொரு ஊழல் புகாரில் இரண்டாவது எஃப்.ஐ.ஆரும் ஓவுரெட்டி மீது சி.பி.ஐ பதிவு செய்திருக்கிறது.

 

cnc

 

அப்படிப்பட்ட நபரின் மூலம்தான் இந்த வருடம் மட்டும் 12,000 கோடிகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு காண்ட்ராக்ட்டுகள் தரப்பட்டுள்ளன. இவைகளையெல்லாம் சி.பி.ஐ கண்காணித்தபடிதான் இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிரான, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட ஊழல் புகார்கள் குறித்து எந்த விபரங்களை சி.பி.ஐ கேட்டாலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஒத்துழைப்பதில்லை. இதனால் சமீபத்தில் பிரதமர் அலுவலகம் நடத்திய ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையிடமுள்ள ஊழல் புகார்களின் நிலை குறித்த தகவல்களை சேகரிப்பது பற்றிய விவாதம் எழுந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து ஆளும் கட்சியினர் தப்பித்து வருவதாகவும், அத்துறையின் மீது அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ பயமில்லை என்றும் அதிகாரிகள் விவரித்துள்ளனர்‘’ என்கின்றன டெல்லி சோர்ஸ்கள்.

 

இதுகுறித்து, லஞ்சஒழிப்புத் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "இந்தத் துறை தன்னாட்சிப் பெற்றதாக இருந்தாலும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீதுள்ள புகார்களை விசாரிக்க வேண்டுமானால் விஜிலென்ஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும். இப்போது விஜிலென்ஸ் கமிஷனர் பொறுப்பை கூடுதலாகக் கவனிக்கிறார் தலைமைச் செயலாளர் சண்முகம். அதனால் அரசின் அனுமதியில்லாமல் ஊழல் புகார்கள்மீது இத்துறையின் அதிகாரிகள் சுதந்திரமாக ஆக்சனில் இறங்கிவிட முடியாது. அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்கிற சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முயற்சிக்கட்டும். சட்டப்பிரிவின் மூலம் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு, ஆக்ஷன் எடுக்கப்படவில்லையே எனக் குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை'' என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; இறால் பண்ணையை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி இருக்கின்றனர். இது போல உப்பளம் நடத்த அனுமதி பெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புதன் கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

இந்த நிலையில் வியாழக்கிழமை(14.3.2024) ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லின் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

அப்பகுதி பொது மக்கள் கூறும் போது.. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணைக்குட்டை பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இப்போது அந்தக் கொட்டகை அடையாளமாக இருக்கக்கூடாது என்பதற்காக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். இது போன்ற இடங்களுக்கு ஆலங்குடியில் இருந்து ஒரு பெண் காவல் அதிகாரி அடிக்கடி வந்து செல்வார். அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த சில மாதம் முன்பு கோட்டைப்பட்டினம் அருகே ஒரு பேக்கரி உணவு தயாரிப்பு கூடத்தில் கஞ்சா கைப்பற்றினார்கள் அந்த கூடத்தை உடைத்தார்களா என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் தற்போது கஞ்சா கைப்பற்றிய இறால் பண்ணை குட்டையில் வேறு எங்கும் போதைப் பொருள் புதைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தான் உடைத்து தரைமட்டமாக்கி பார்த்திருக்கிறார்கள் என்கின்றனர்.

போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்ட விரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரை மட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.