நித்தி விவகாரம் பற்றி பேசும் மத்திய அரசு அதிகாரிகள், "அந்த சாமியார் தவறுக்கு மேல் தவறு செய்கிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதைப் போல அவர் பேசி வருகிறார். அதன் விளைவு மிக பயங்கரமானதாக இருக்கும்'' என்கிறார்கள் கோபத்துடன். "நான் ஒரு பரதேசி. பொறம்போக்கு. சாமியார்னா மான அவமானம் பார்க்கக்கூடாது. இல்லன்னா மூடிட்டுப் போ'' என சமூக வலைத்தளங்களில் வசனம் பேசி வருகிறார் நித்தி.

nithy

அத்துடன் இந்தியாவில் இயங்கி வரும் தனது ஆசிரமங்களுக்கு புதிய நிர்வாகிகளாக வழக்குகளில் தொடர்புடையவர்களை நியமித்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் வணிகத்தில் விலைக்கு வந்த ட்ரினிடாட், டுபாகோ ஆகிய தீவுகளுக்கு இடைப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவை லட்சக்கணக்கான அமெரிக்க டாலரை கொடுத்து வாங்கியிருக்கிறார். "கைலாசா' என அதற்கு ஒரு பெயரை தானே சூட்டிக் கொண்டு அந்த தீவுக்கு வர தனி பாஸ்போர்ட், அதற்கு ஒரு தனி பிரதமர் என தன்னுடன் பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒருவரை நியமித்திருக்கிறார்.

"இந்த நாடு உலகின் ஒரே இந்து நாடு என்றும் அரசியல் சார்பற்ற நாடு எனவும் உலகத்திலேயே அரசியல் கலக்காத ஒரு நாடு' என நித்தி சொல்வதெல்லாம் மிகச் சரியா என மத்திய அரசு அதிகாரிகளை கேட்டோம்.

nithy

Advertisment

"நித்திக்கு அரசியல் தெரியாது. அவர் தன்னை ஞானி என்கிறார். அவர் ஒரு ஞான சூனியம் என்பதை அவரது செயல்கள் காட்டுகின்றன. சர்வதேச அளவில் ஒரு தீவை பணம் கொடுத்து வாங்குவதெல்லாம் ஒரு வீடு வாங்குவது போலதான். அந்தத் தீவிற்கு பெயர் வைப்பதெல்லாம் வீட்டுக்கு பெயர் வைப்பது போலதான். அந்த வீட்டில் குடியிருப்பவர் வாக்காளர் அடையாள அட்டை பெறும் போது தான் அரசியல் ஆரம்பமாகிறது. கடல் சூழ்ந்த ஒரு தீவிற்கு மின்சாரத்தைக் கூட நீங்களே உற்பத்தி செய்யலாம். ஆனால் அது தனிநாடு என்பதற்கான அங்கீகாரத்தை ஐ.நா. சபை தான் தரமுடியும். இந்தியாவின் அந்தமான் கடல் பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. அதில் ஒன்றை வாங்கிவிட்டு, "என்னுடைய தீவு ஒரு தனி தேசம்; இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்னை கட்டுப்படுத்தாது' என சொல்ல முடியுமா? அதை இந்தியா அனுமதிக்குமா? இப்போது நித்தி வாங்கியிருக்கும் தீவு ஈக்வடார் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் தீவு, அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்திற்குட்பட்டது. அப்படிப்பட்ட ஒரு தீவை ஒரு போதைக் கடத்தல் கும்பல் காசு கொடுத்து விலைக்கு வாங்கி சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்த முடியுமா? அதை அமெரிக்கா அனுமதிக்குமா? அதுபோன்ற வேலையைத்தான் நித்தி செய்துவருகிறார். நித்தி மீது பாலியல் வழக்கு இந்தியாவில் இருக்கின்றது.

Advertisment

அத்துடன் குழந்தைகளை கொடுமை செய்தார் என போஸ்கோ சட்ட வழக்கு இருக்கிறது. இதுதவிர கொலை வழக்கு, அன்னியச் செலாவணி விதிமீறல் போன்றவை புகார்களாகவும் வழக்குகளாகவும் இருக்கின்றன.

அவரிடம் உள்ள இரண்டு சீடர்களை கொண்டு வர சர்வதேச போலீஸ் உதவியை நாட குஜராத் போலீஸ் உத்தரவிட்டுள்ளது. அடுத்தகட்டம், அவர் தேடப்படும் குற்றவாளி என இந்தியா அறிவிக்கும். அவர் தனிநாடு, கொடி என உளறுவது அவரை தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வைத்துவிடும்'' என்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர்.

பா.ஜ.க. ஆதரவு தேசிய ஊடகங்களே நித்திக்கு எதிராக 24 மணி நேரம் முழங்குவதை பார்த்தால் அமெரிக்காவிடம் பேசி, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஏராளமான வழக்குகளை சந்திக்கும் நித்தியை குண்டுக்கட்டாக சங்கராச்சாரியை ஜெ. கைது செய்தது போல மோடி தூக்கிவிடுவார் ' என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.