Skip to main content

உங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோபம்: மனஉளைச்சலோடு திரும்பிய ஓ.பி.எஸ்.

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
o panneerselvam - nirmala sitharaman


நிறைய கனவுகளுடன் டெல்லி பறந்த ஓ.பி.எஸ்., மிகுந்த மனஉளைச்சலுடன் சென்னை திரும்பியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகிய இருவரிடமும் மிகுந்த இடைவெளியை அண்மைக் காலமாக மேற்கொண்டுள்ளது பாஜக தலைமை. குறிப்பாக பிரதமர் மோடி. பிரதமரை சந்திக்க இருவரும் எடுத்து வந்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில், அண்மையில் சென்னை வந்திருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தனது மகன் ரவீந்திரநாத்தை அனுப்பி சந்திக்க வைத்தார் ஓ.பி.எஸ். அந்த சந்திப்பில்,  எடப்பாடிக்கு எதிராக பல விவகாரங்கள் பேசப்பப்பட்டதாக அதிமுக தரப்பில் செய்திகள் கசிந்தன.

மேலும், பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை மகன் மூலம் ஓ.பி.எஸ். தெரிவித்திருந்தார்.

வெங்கையாநாயுடுவும் பிரதமருக்கு நெருக்கமான சில அமைச்சர்களின் பெயர்களை சொல்லி அவர்களை சந்திக்குமாறு சொல்லியிருந்தார். வெங்கய்யாநாயுடு சொல்லியிருந்த அமைச்சர்களில் முக்கியமானவர் நிர்மலா சீதாராமன்.
 

 

 

தனது ஆதரவாளரான மைத்ரேயன் மூலம் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் முயற்சிகளை எடுத்தார் ஓ.பி.எஸ்.  மைத்ரேயனும் சந்திப்புக்கான நேரத்தை உறுதி செய்து ஓ.பி.எஸ்க்கு தெரிவித்திருந்தார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களான கே.முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் நேற்று டெல்லி சென்றார்.

டெல்லி சென்ற ஓ.பி.எஸ்.சையும் மற்ற தலைவர்களையும்  மைத்ரேயன் இரவு உணவுக்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அப்போது மோடிக்கு நெருக்கமான ராஜ்ய சபா எம்பி ஒருவர் , அங்கு வந்து ஓபிஎஸ்சை சந்தித்து சென்றதாக தகவல். பின்னர், மைத்ரேயன்  இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஓ.பி.எஸ். டீம் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியது.

நிர்மலா சீதாராமனை சந்திக்கும்போது, தமிழக அதிமுக தொடர்பான பல்வேறு விவகாரங்களையும், எடப்பாடிக்கு எதிரான விசயங்களையும் விவாதிக்க திட்டமிட்டிருந்தனர். இதனிடையே, டெல்லி சென்ற ஓ.பி.எஸ். தொடர்பாக, அதிமுக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்தன. 

எடப்பாடி தரப்பு ஓ.பி.எஸ். சின் டெல்லி பயணத்தின் நோக்கம் குறித்து அறிய ஆர்வமாக இருந்தது. அதே சமயம், ஓ.பி.எஸ்.ஸை தொடர்புகொண்டு எடப்பாடி பேசும்போது, "உடல்நிலை சரியில்லாத தன்னுடைய சகோதரருக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக இருந்தது. அதற்காக ராணுவ ஹெலிகாப்டரை கொண்டுவர முயற்சி செய்தபோது, அது கிடைக்கவில்லை. அப்போது ராணுவ ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து உதவி புரிந்தவர் நிர்மலா சீதாராமன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே டெல்லி வந்துள்ளேன்" என ஓ.பி.எஸ். தெளிவுப்படுத்தியிருந்தார்.

திட்டமிட்டப்படி நிர்மலா சீதாராமனை சந்திக்க தமிழ்நாடு இல்லத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு புறப்பட்டது ஓ.பி.எஸ். டீம். அந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் ஓ.பி.எஸ்.ஸை சூழ்ந்தனர். பத்திரிகையாளர்களை சந்திக்க அவர் விரும்பவில்லை என்றாலும், டெல்லி வந்ததன் நோக்கம் குறித்து அவரிடம்  பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபடியே இருந்தததால், உணர்ச்சிவசப்பட்ட ஓபிஎஸ்,  தனது சகோதரருக்காக ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவிய விவகாரத்தை வெளிப்படுத்தியதுடன், நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தாகவும் கூறினார்.

ஓ.பி.எஸ்.ஸின் இந்த பேட்டி மீடியாக்களில் பரவியது. இந்த விஷயம் டெல்லியில் பரபரப்பாக எதிரொலிக்க, பாஜக தலைவர் அமித்ஷாவின் கவனத்திற்கும் சென்றது. உடனே அவர், நிர்மலா சீதாராமனை தொடர்புகொண்டு, "ஏற்கனவே ரபேல் விவகாரத்தில் உங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஒரு தனிநபருக்காக ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவியிருக்கிறீர்கள். இது சட்ட மீறலாக போகும். உடனடியாக இந்த சந்திப்பை ரத்து செய்யுங்கள் " என்று கோபமாக பேசியிருக்கிறார்.

ஏற்கனவே, ஓபிஎஸ்சின் பேட்டியை அறிந்து டென்சனாக இருந்த நிர்மலா சீத்தாரமன், அமித்ஷாவின் கண்டிப்பும் அவரை மேலும் பதட்டமடைய வைத்தது. இந்த நிலையில்,  ஓ.பி.எஸ். டீம் சென்ற கார்கள் பாதுகாப்பு அமைச்சகம் உள்ள தெற்கு பிளாக்கின் உள்ளே நுழைகிறது. ஏற்கனவே சந்திப்புக்கு அனுமதி தரப்பட்டதால்தான் இவர்களின் கார்கள் அந்த வளாகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டன.

நிர்மலா சீதாராமனுக்கு இவர்கள் வந்திருப்பதை செக்யூரிட்டி அலுவலர்கள் தெரியப்படுத்தியிருக்கின்றனர். அமித்ஷா பேசியதில் இருந்து டென்ஷனாயிருந்த நிர்மலா சீதாராமன், மைத்ரேயனை மட்டும் வரசொல்லுங்கள். மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கடும் கோபத்தை காட்டியிருக்கிறார். மைத்ரேயன் மட்டும் அனுமதிக்கப்பட்டு, தங்களுக்கு அழைப்பு இல்லை என்றதும் ஓ.பி.எஸ்., முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

 

தன்னை சந்தித்த மைத்ரேயனிடம், "" ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவியதை ஓப்பன் பிரஸ் மீட்டில் பன்னீர் செல்வம் சொல்வது சரியா? ஏற்கனவே பிரதமர் மோடி சொல்லித்தான் அதிமுகவில் இணைந்தேன் என்று அவர் உளறியிருக்கிறார். மீண்டும் ஏன் இப்படி பேசுகிறார்?  இது எவ்வளவு பெரிய பிரச்சனையில் கொண்டு போய்விடும் என்பது தெரியுமா? " என மிகவும் கடிந்து கொண்ட நிர்மலா சீதாராமன், ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்துவிட்டார்.


ஓபிஎஸ்சின் உணர்ச்சிவயப்பட்டு பேசியதற்கு  மன்னிப்பு கேட்ட மைத்ரேயன், ஓபிஎஸ்சை சந்திக்குமாறு கேட்டிருக்கிருக்கிறார். ஆனால், அதற்கு நிர்மலா சீத்தாராமன் சம்மதிக்கவில்லை. இதனால் அப் செட் மூடிலேயே திரும்பிய மைத்ரேயன், நடந்ததை ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களும் அப்-செட்டானார்கள்.


நிறைய எதிர்பார்ப்புகளுடன் டெல்லி வந்ததன் நோக்கம் நிறைவேறவில்லையே என்கிற மனஉளைச்சலுடன் சென்னை திரும்பியது ஓபிஎஸ் டீம் ! சென்னை ஏர்போர்ட்டில், " எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என விரக்தியுடன் சொல்லிவிட்டு தனது இல்லம் சென்றடைந்தார் ஓபிஎஸ்! இதற்கிடையே, எடப்பாடியின் தளகர்த்தர்களான அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் டெல்லி செல்வது அடுத்தக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.