Skip to main content

“அரசியல் சதியால் உள்நோக்கத்தோடு வழக்கு!” -வழக்கறிஞர் அருகில் மவுன சாட்சியாக நின்ற நிர்மலாதேவி!   

Published on 20/03/2019 | Edited on 28/03/2019

கடந்த 12-ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஜாமின் எடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலால் மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலாதேவி வெளிவராத நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று (20-3-2019) அவர் ஆஜராக வேண்டியிருந்தது.
 

nirmala devi



நேற்றே, ஜாமின்தாரர்கள் அளித்த பிணைய சொத்துப் பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், சிறையிலிருந்து நிர்மலாதேவியை விடுவிப்பதற்கான காரியங்கள் விறுவிறுவென்று நடந்தன. அதனால், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியம் எழவில்லை.  அதேநேரத்தில்,  அவரால் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலும் ஆஜராக முடியவில்லை.

 
நிர்மலாதேவிக்காக,  செக்ஷன் 317-ன் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத தவறு  வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல. எனவே, நேரில் ஆஜராகாத தவறை மன்னித்து, வேறு ஒரு தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று நிர்மலாதேவி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அம்மனுவை ஏற்றுக்கொண்டு, வழக்கை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
 

ஏற்கனவே ஜாமினில் வெளிவந்திருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனும், ஆய்வு மாணவர் கருப்பசாமியும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மொத்த குடும்பத்தினரையும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருந்தார், முருகன். ஏதோ, பிக்னிக் ஸ்பாட்டுக்கு வந்ததுபோல், முருகனின் குடும்பத்தினர் கோர்ட் வளாகத்தில் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். கோர்ட் படியில் அமர்ந்து குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.  வழக்கை 27-ஆம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டதும், நடை சாத்துவதற்குள் சென்றுவிட வேண்டும் என்று முருகனின் குடும்பம் அவசர, அவசரமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குக் கிளம்பியது. கருப்பசாமி ‘தனி ஒருவன்’ ஆக வந்திருந்தார். அவர் முருகன் குடும்பத்தினர் இருந்த பக்கம் தலைகாட்டவே இல்லை. 
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நிர்மலாதேவியின் காவலை நீடிக்க ஆரம்பித்ததுமே, செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வருவதை நிறுத்திவிட்டனர். இன்றும், அதே நிலைதான். அதனால், முருகனும் கருப்பசாமியும் “என்ன சார் நக்கீரன் மட்டும்தான் வந்திருக்கீங்க?” என்று கேட்டனர். 

 

nirmala devi


இதே நேரத்தில், நிர்மலாதேவியை மதுரை மத்திய சிறையிலிருந்து விடுவித்தனர். அவரை அருகில் வைத்துக்கொண்டு, பேட்டி அளித்தார் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன். “கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி அரசியல் பின்னணி காரணமாக கைது செய்யப்பட்டு, இன்று சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க மாட்டார். அவருடைய வழக்கறிஞர் என்ற முறையில் நான் பேசுகிறேன். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டவுடன் 24 மணி நேரத்தில் கவர்னர் பேட்டி கொடுத்தார். சந்தானம் கமிட்டியையும் உடனே அமைத்தார். இன்றைக்கு உலகையே உலுக்கும் அளவுக்கு பொள்ளாச்சியில் கொடூர சம்பவங்கள் நடந்திருக்கின்றன.


தமிழகத்தில் கவர்னர் இருக்கிறாரா? இல்லையா என்றே தெரியவில்லை. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். நிர்மலாதேவி வழக்கில் உள்நோக்கம் இருக்கிறது. அரசியல் சதி இருக்கிறது. சிறையிலிருந்து வெளியில் வந்துவிடக்கூடாது என்று அரசியல் தலையீடு இருந்தது. ஜாமின் கிடைத்தபிறகும், நிர்மலாதேவி வெளியில் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையூறுகள் செய்தனர். இது பொய் வழக்கென்று நீதிமன்றத்தில் நிரூபிப்போம். நிச்சயம் அவர் விடுதலை ஆவார்.” என்று கூற, மவுன சாட்சியாக நின்றுகொண்டிருந்த நிர்மலாதேவி,  கிளம்பும்போது    செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பக்கம் திரும்பி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.  


ஜாமினில் விடுதலையானாலும், தான் இனி சந்திக்கப்போகும் வெளிஉலகம் குறித்த கவலை நிர்மலாதேவியின் முகத்தில் அப்பியிருந்தது. 

 

 

 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.