Skip to main content

ஜெர்மனியிலிருந்து இயங்க திட்டமா? - என்.ஐ.ஏ. விசாரணை!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
 N.I.A. Investigation!

கடந்த வெள்ளிக் கிழமையன்று அதிகாலை முதலே சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா? வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா? என்ற சந்தேகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியானது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் திருச்சி சண்முகா நகரிலுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீடு, சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரதாப் வீடு, கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகன் வீடு, ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் வீடு ஆகியனவற்றில் தொடர்ந்து 3 மணி நேரமாகச் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., கட்சி அலுவலகத்திலிருக்கும் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்  7 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியது. சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், புத்தகங்கள், செல்போன்கள், லேப்டாப், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியானது.

க்யூ பிரிவு அதிகாரி ஒருவரோ, "இன்றைய சோதனைக்கான தொடக்கம் 2022, மே 20 சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதிலிருந்து கைத்துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்கும் உதிரி பாகங்கள், கத்தி, முகமூடி உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றன. ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீஸார், அவற்றைக் கொண்டு வந்த பொறியியல் பட்டதாரி சஞ்சய் பிரகாஷையும், எம்.சி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவர்த்தியையும் கைது செய்தனர். இதே வேளையில் இவர்களுக்கு உதவியதாக சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலர் என்ற நபரையும் கைது செய்தனர். இவர்கள் செட்டிசாவடியில் வாடகைக்கு அறையெடுத்து யூடியூப் வீடியோ பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவர, இவர்களுக்கு தேச விரோதக் கும்பலுடன் தொடர்புள்ளதா? என்பது குறித்து அன்று விசாரணை நடத்தினோம். பின்னாளில் இது தேசிய விவகாரமென்பதால் என்.ஐ.ஏ. இந்த வழக்கை கையிலெடுத்தது'' என்றார்.

இதேவேளையில், "ஆலாந்துறை பழைய தபால் நிலைய வீதியில் வசிக்கும் மோகனின் மகன் ரஞ்சித்குமார். தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி, அதன்மூலமாக பலரிடம் பணம் பெற்றதும் தெரியவந்தது. நாம் தமிழர் கட்சியில் 2020-2021 ஆம் ஆண்டில் கட்சியின் ஐ.டி. விங் உறுப்பினராக இருந்தவர். அதேபோல காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். திருச்சியைச் சேர்ந்த இவர் கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக வசித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் குருதிப் பாசறை உறுப்பினராக இருந்தவர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இரண்டு நபர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்'' என நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்டப் பொறுப்பாளர் வஹாப் அவசர அவசரமாக அறிவித்தது சலசலப்பை உருவாக்கியது.

"சிறியவர்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்திப் பார்த்துள்ளனர். எனவே, நானே விசாரணைக்கு செல்ல இருக்கிறேன். என்.ஐ.ஏ. சோதனை அவசியமற்றது. சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், நடவடிக்கை எடுக்கட்டும். சி.ஏ.ஏ. குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது, இது இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது என்று அவர் பேசிய காணொளி இருக்கிறது. எனவே, அவர்கள் இப்படி ஒவ்வொருவராக சோதனை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் என்னை வந்து தூக்குவார்கள். அவர்களது நகர்வுக்கு எவ்வளவு தூரம் தடையாக இருப்பேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், என்னைத் தூக்குவார்கள்'' என சீமான் கூறிய நிலையில், "சட்டத்துக்கு உட்பட்டுதான் நடவடிக்கை எடுப்போம்'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன்பு உறுதியளித்தது என்.ஐ.ஏ.

விசாரணையின்போது, "ஜெர்மனியிலிருக்கும் சீலனைத் தெரியுமா..? அவரை யார் அறிமுகம் செய்தது.? தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை அவர் தலைமையில் மீண்டும் கட்டமைக்க இளைஞர்களை ஒன்று திரட்டி வருகிறீர்களா..? யூடியூப் வீடியோ பார்த்து, துப்பாக்கி தயாரித்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தியை அறிமுகப்படுத்தியது யார்..?'' என பொதுவான கேள்விகளையே தொடுத்தனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். ஆனால் அவர்களுக்குக் கிடைத்த ஆவணங்கள் அதிகம். சீமானுக்கே தெரியாமல் கட்சியில் இருந்துகொண்டே தனி டிராக் எடுத்து சில சட்டவிரோத வேலைகளைச் செய்து வருகின்றனர் சிலர் என்பதைத்தான் கூறுகிறது என்.ஐ.ஏ.வின் சோதனை. சீமான் அவர்களை நம்புகிறார். ஆனால் இது சீமானுக்கே கேடாய் முடியும்'' என்கின்றனர் விசாரணையின் போது உடனிருந்த தமிழ்நாடு காவல்துறையினர்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.