Skip to main content

நிதித்துறைக்கு புதிய அமைச்சர்? மோடி ஆலோசனை... பின்னணி விவரம்...

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவர். இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் ஆற்றல் அவருக்கு இருப்பதாக கருதியே நிதி அமைச்சக பொறுப்பில் நிர்மலாவை அமர வைத்தார் பிரதமர் மோடி. ஆனால், நடப்பாண்டின் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பல்வேறு நிலைகளில் இந்தியா எதிர்கொள்ளும் பொருளாதார சரிவில் அதிர்ச்சியடைந்துள்ளனர் இந்திய தொழிலதிபர்களும் பொருளாதார வல்லுநர்களும்! 
 

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நடப்பாண்டு பட்ஜெட்டின் மூலம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என எதிர்ப்பார்த்தார் மோடி. அதற்கேற்ப பட்ஜெட்டுக்கு பிறகான நாட்களில் மோடியிடம் ஆரோக்கியமான விவாதத்தையும் முன் வைத்திருக்கிறார் நிர்மலா. ஆனால், அது சாத்தியப்படவில்லை. 

 

nirmala - modi



முந்தைய ஆட்சி காலங்களில் 8 சதவீத அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருந்துள்ளது. ஆனால் தற்போது அந்த் வளர்ச்சி  5.8. சதவீதமாக குறைந்திருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் ‘ வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் ‘ என்கிற தகுதியை இழந்துள்ளது மோடி அரசு. 
 

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நிதி ஆயோக் அமைப்பின் அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளோடு கலந்தாலோசித்தார் நிர்மலா சீதாராமன். அதில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டவர், பட்ஜெட்டில் அதற்கான தீர்வை முன்வைக்கவில்லை என்கிற ஆதங்கம் நிதி ஆயோக் அதிகாரிகளிடம் இருந்துள்ளது. இதனை பிரதமர் மோடியிடம் ஏற்கனவே விவரித்திருக்கிறார்கள். 


 

அதற்கேற்ப, வெளிநாடுகளின் முதலீடுகள் இந்தியாவுக்குள் வருவதில் தற்போது தேக்கம் அடைந்திருக்கிறது. அந்நிய செலவாணி இருப்பும் குறைந்திருப்பதுடன், பங்கு சந்தைகளும் வேகமான சரிவை சந்தித்து வருகின்றன. (இதனால் தங்கத்தில் முதலீடும், தங்கத்தின் விலை உயர்வும் அதிகரித்து வருகிறது)  இந்த சூழலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பும் (ஜி.டி.பி.) முந்தைய நிதி ஆண்டை ஒப்பிடும்போது குறைந்து வருகிறது, தொழில்துறை, விவசாயத்துறை, உள்கட்டமைப்பு துறைகளில் கடந்த இரு மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி இல்லை என பல குற்றச்சாட்டுகளை நிதி ஆலோசகர்களும் அதிகாரிகளும் மோடியிடம் முன்வைத்திருக்கிறார்களாம். அதனால் நிர்மலா சீராதாமனிடம் இருக்கும் நிதித்துறையை பியூஸ் கோயலிடம் ஒப்படைக்க மோடி ஆலோசிப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அதனால் மத்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தின் போது இலாகா மாற்றமும் பெரிதளவில் நடக்கும் என்கிறார்கள்.   
 

இந்த நிலையில், சுதந்திரதினத்தை முடித்துவிட்டு நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது நிதியமைச்சக உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் பிரதமர் மோடி. அந்த ஆலோசனையில் நாட்டின் பொருளாதார சூழல் குறித்து விரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார் மோடி. குறிப்பாக, வேலைவாய்ப்பு அதிகரிக்காத நிலை, இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் குறைந்து வருவது, பொருளாதாரத்தில் நிலவும் தேக்கம், இதனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படப் போகும் தாக்குதல் குறித்து பிரதமர் விரிவாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அப்போது அதிகாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட பதில்களில் பிரதமருக்கு திருப்தி இல்லை என்கிறது டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். 


 

சர்வதேச கரன்சி மற்றும் அந்நிய முதலீடு சரிவு உள்ளிட்ட வர்த்தக யுத்தத்தால் இந்திய பொருளாதார பிரச்சனையில் சிக்கலை அதிகரித்திருப்பதுடன் நுகர்வோர்களும் நம்பிக்கையை இழந்து வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.