Skip to main content

காங்கிரஸின் புதிய தலைவர் பிரியங்கா? சோனியாவிடம் வலியுறுத்தும் மன்மோகன்சிங்!

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

 

நாடாளுமன்றத்  தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல்காந்தி. இதற்கான ராஜினாமா கடிதத்தையும் ராகுல்காந்தி கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸின் உயரிய அமைப்பான காரிய கமிட்டி அதனை தற்போது வரை ஏற்காமல் இருக்கிறது.  ராஜினாமாவை திரும்பப் பெறுங்கள் என மூத்த தலைவர்கள் வலியுறுத்திய நிலையிலும், ’ ராஜினாமாவை திரும்ப பெறப்போவதில்லை; எனது பதவி விலகலை ஏற்றுக்கொண்டு  எங்கள் குடும்பத்திற்கு வெளியிலிருந்து புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள்’ என தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் ராகுல்காந்தி அதில் உறுதியாகவும் இருக்கிறார். ராகுலின் இந்த முடிவுக்கு சோனியாவின் ஆதரவும் இருப்பதால் மூத்த தலைவர்கள் திகைத்து நின்றார்கள்.

 

AICC


 

இந்த நிலையில், சோனியாவை சந்தித்து, ’கட்சி தலைவர் பதவியை மீண்டும் நீங்கள் ஏற்க வேண்டும்’ என மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆஷாத், மல்லிகார்ஜுனே கார்கே, சுஷில்குமார் சிண்டே உள்ளிட்ட பலரும் வலியுறுத்திய போதும் அதனை ஏற்காமல் சோனியாவும் நிராகரித்ததால் கடந்த இரண்டரை மாதங்களாக காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். 


 

இதனால், தேசிய அளவில் காங்கிரஸின் செல்வாக்கு கேள்விக்குறியாகும் நெருக்கடியான சூழலில், தலைமை பதவியை ஏற்க சீனியர்கள் யாரும் முன்வரவில்லை.  அதேசமயம், சீனியர்கள் சிலர் முன்வந்தால் அவர்களை இளம் தலைவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இளைஞர் ஒருவரை தலைவராக நியமிக்கலாம் எனில், ’’ பாஜகவை எதிர்க்கும் வல்லமை அவர்களுக்கு இருக்காது ; அனுபவமும் போதாது ‘’ என இளைஞர்களை சீனியர்கள் எதிர்க்கின்றனர். இப்படிப்பட்ட சூழல் டெல்லியில் மையம் கொண்டிருப்பதால் புதிய ததலைரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தபடியே இருக்கிறது. 
 

இந்த நிலையில்தான் கடந்த வாரம், மன்மோகன்சிங்கும் அகமதுபடேலும் சோனியாவை சந்தித்து விவாதித்துள்ளனர். அதில், ‘’ நேரு குடும்பத்தை தவிர்த்து வேறு ஒருவரை தலைமை பதவியில்  நியமிக்க முடியாதளவுக்கு சிக்கல் இருக்கிறது. ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அதனால், ராஜினாமாவை திரும்ப பெற ராகுலுக்கு அறிவுறுத்துங்கள். இல்லையெனில், பிரியங்காவை தலைமைப் பொறுப்பை ஏற்க வையுங்கள். நேரு குடும்பத்தைத் தவிர்த்து யார் வந்தாலும் கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது.  காங்கிரசை பலகீனப்படுத்தும் பாஜகவின் முயற்சிகளுக்கு காங்கிரஸார் துணைபோவதும் கூட, தலைவர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும் சிக்கல்களும் ஒரு காரணமாக இருக்கின்றன ‘’  என விரிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்.  


 

இதனையடுத்து, கட்சியின் காரிய கமிட்டியை கூட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார் சோனியாகாந்தி.  நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் காங்கிரசின் காரிய கமிட்டி டெல்லியில் கூடுகிறது. அதில் ’கட்சியின் தலைவர் பதவிக்கு ஒரு முடிவு தெரியும்’ என்கிறார்கள் கதர்சட்டையினர்.
 

அதாவது,  ராஜினாமாவை ராகுல் வாபஸ் பெறுவாரா? அல்லது பிரியங்கா தலைவராவாரா? அல்லது புதிய தலைவர் யார் என்பதை சோனியாவே அடையாளப்படுத்துவாரா? என்கிற கேள்விகளுக்கு விடை தெரிய வரும் என்கிறார்கள்.  இதற்கிடையே, மன்மோகனும் அகமதுபடேலும் தன்னை சந்தித்து விவாதித்துவிட்டுச் சென்றதையடுத்து, ராகுல்காந்தியையும் பிரியங்காவையும் அழைத்து பேசியுள்ளார் சோனியாகாந்தி. 
 

அப்போது, ’’தலைவர் பதவிக்கு என்னை பரிந்துரைக்கும் எண்ணத்தை மூத்த தலைவர்கள் கைவிட வேண்டும். அதனை நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். தலைவர் பதவியேற்கும் அனுபவமும் தகுதியும் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை‘’ என கறாராகப் பேசியிருக்கிறார் பிரியங்காகாந்தி. 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.