Skip to main content

கொள்கைகளை ஒருபோதும் கொல்ல முடியாது!

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
கொள்கைகளை ஒருபோதும் கொல்ல முடியாது!

‘எதற்காக சவத்தைப் போல் இருக்க வேண்டும்? உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதும், எதிர்வினையாற்றுவதும் தான் மனித இயல்பு. நம் நேர்மையான பதில்களின் மூலமாக சமூகத்தின் மனக்கிளர்ச்சியை தூண்டி விடவேண்டும்’- சமூக வலைதளங்களில் தனது செயல்பாடுகள் குறித்த எச்சரிக்கைக்கு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் வீரியமிக்க பதில் இது. தொடர்ந்து இந்த சமூகத்தில் கட்டவிழ்க்கப்படும் எந்தவொரு விரோதப்போக்கான செய்கைகளையும், எதிர்த்து குரலெலுப்பும் இதுமாதிரியான சமூக செயற்பாட்டாளர்கள் மீண்டும் மீண்டும் படுகொலைக்கு ஆளாகின்றனர். ஆம், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கௌரி லங்கேஷ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நெற்றி, கழுத்து, மார்பு என மூன்று இடங்களில் பாய்ந்த குண்டுகளால் அவர் உயிர் நிகழ்விடத்திலேயே பிரிந்தது.



பிரபல பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகளான கௌரி லங்கேஷ் இடதுசாரி கொள்கையுடையவர். அவரது தந்தையின் மரணத்திற்குப் பின் ‘கௌரி லங்கேஷ் பத்திரிகையை’ நடத்தி வந்தவர். எப்போதும் இனவாதத்திற்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் தனது எழுத்துக்களில் பிரதிபலித்தவர். இந்துத்துவ வலதுசாரி கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த கௌரி, சங் பரிவாரங்களின் இனவாத செயல்பாடுகளை நேரடியாக எதிர்த்து வந்தவர். கடந்த 2012ஆம் ஆண்டு மங்களூருவில் நடைபெற்ற இனவாதக் குழுக்களைத் தடைசெய்யக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர், ‘இந்துத்துவம் என்பது மதம் கிடையாது. அது சமூகப்படிநிலைகளில் இருக்கும் ஒரு பிரிவு மட்டுமே. அது பெண்களை எப்போதும் சமூகத்தின் இரண்டாம் தர உயிரினங்களாகவே நடத்தி வந்திருக்கிறது’ என கடுமையாக விமர்சித்தார். 

தனது தந்தை நடத்தி வந்த பத்திரிகையைப் போலவே, தனது பத்திரிகையிலும் விளம்பரங்களை கௌரி ஒருபோதும் வெளியிட்டதில்லை. அது நியாயமான விஷயங்களைப் பேசுவதற்கு தடையாக இருக்கும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்துத்துவத்தின் வளர்த்தெடுப்பான பாஜகவை நேரடியாக விமர்சித்து வந்த கௌரி, அதில் இணைந்து கொண்டதற்காக தனது நண்பரான பிரகாஷ் பெலவாடி உடனான 35 ஆண்டுகால நட்பினை உதறித்தள்ளினார். நக்சல்பாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சரணடையச் செய்வதற்கான குழுவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கௌரியை உறுப்பினராக நியமித்தது. அப்போது பாஜக நக்சல்பாரிகளின் விசுவாசியான கௌரி அந்தக் குழுவில் இருக்கக்கூடாது என குற்றம்சாட்டியது. ஆனால், கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா இதனை ஏற்க மறுத்தார். 

தமிழ் நாவல்களில் சமீபத்தில் மிகப்பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்திய, மாதொருபாகன் நாவலின் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு இந்துத்துவவாதிகளின் எதிர்ப்பு கிளம்பிய சமயம். 81வது கன்னட சாகித்ய சம்மேளனம் என்ற இலக்கியக் கூட்டத்தில் இந்துத்துவவாதிகளின் எதிர்ப்புகளையும் மீறி பேசிய கௌரி, ‘பார்ப்பனீயத்தைத் தூக்கிப்பிடிக்கும் எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பர்வா நாவலில் நியோகா முறை பற்றி அவர் எழுதியிருப்பதை இங்கு இருப்பவர்கள் மறுக்க முடியுமா? மாதொருபாகனின் கருத்துக்கும் பர்வாவின் கருத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? அப்படியென்றால், பெருமாள் முருகனை எதிர்ப்பவர்கள் பைரப்பாவையும் எதிர்க்க வேண்டுமல்லவா?’ என கேள்விகளை சரமாரியாக அடுக்கி வாயடைக்க செய்தார்.

(பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலில் கணவன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண் அடையாளம் தெரியாத ஆண் முலம் குழந்தை பெற்றுக் கொள்வதை மையமாக கொண்டிருந்தது. இதே கருத்தையே கன்னட இந்துத்துவா எழுத்தாளர் பைரப்பா எழுதிய பர்வா நாவலும் கொண்டிருந்தது என்று கௌரி லங்கேஷ் கூறினார்)

2008ஆம் ஆண்டு தனது பத்திரிகையில் ‘தரோடிகிலாடா காலு’ என்ற தலைப்பிட்ட கட்டுரையை வெளியிட்டார் கௌரி. அதில் பாஜக தலைவர்களான பிரகலாத் ஜோஷி, உமேஷ் துஷி, சிவானந்த் பாட் மற்றும் வெங்கடேஷ் மேஸ்த்ரி ஆகியோரால் நிகழ்த்தப்பட்ட மோசடிகள் மீதான குற்றச்சாட்டுகளையும், கண்டனங்களையும் கௌரி பதிவு செய்திருந்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் கௌரிக்கு ஆறுமாதம் சிறைதண்டனை வழங்கி கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதே நாளில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த கௌரி, சாட்சியங்களைத் திரட்டி மீண்டும் நீதிமன்றத்தில் சந்திப்பேன் என எச்சரித்துவிட்டுச் சென்றார்.



இந்தநிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர், இந்தப் படுகொலையில் நிச்சயம் சதி இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு கர்நாடகாவில் கொல்லப்பட்ட எழுத்தாளர் எம்.எம்.கல்புகர்கியின் கொலைக்குற்றவாளிகள் இன்னமும் கைதுசெய்யப்படாதது குறிப்பிடத்தக்கது. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புகர்கி வரிசையில் இன்று கௌரி லங்கேஷின் உயிரையும் குடித்திருக்கிறது எதேச்சதிகாரம்.

கௌரியின் இனவாத எதிர்ப்பும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவும், இடதுசாரி அரசியல் முன்னெடுப்புகளும் நிச்சயம் சிலரை எரிச்சலூட்டியிருக்கக்கூடும். தான் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், ‘நாம் ஏன் நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்? நமது ‘மிகப்பெரிய எதிரி’ யாரென்று தெரியும். அதனை எதிர்ப்பதில் கவனம் செலுத்தலாமா?’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கௌரியைத்தான் கொன்றிருக்கிறார்கள். அவர்சார்ந்த கொள்கையையல்ல!

- ச.ப.மதிவாணன் 

சார்ந்த செய்திகள்