Skip to main content

உலகப் புகழ் அல்வா அதிபர் தற்கொலை... காரணமான கரோனா!!! 

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
nellai iruttukadai alwa...

 

நெல்லையின் டவுன் காந்திமதி அம்மனின் ஆலயம் எதிரே உள்ளது இருட்டுக் கடை அல்வா. சுவை, பாரம்பரியம் குறையாத சரக்கின் குவாலிட்டி காரணமாக அல்வா கிண்டும் உலகில் பெயரெடுத்தது டவுன் இருட்டுக் கடை அல்வா. சின்னஞ்சிறிய மரக்கடை சைஸ் அளவு கொண்ட கடையில், காலப்போக்கில் குன்றாத சுவை, தரம் காரணமாகப் புகழ்பெற்ற இந்தக் கடையின் அல்வா உலக அளவில் பெயர் வாங்கியிருக்கிறது. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் தற்போது விண்ணுக்குப் போன நிலையில், தங்களது அல்வா கடையின் புராதனத்தை வெளிப்படுத்தும் வகையில் கடையை நவீனமாக்கினால் கஸ்டமர்களுக்கும், வரும் வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும். வியாபாரம் குறைந்துவிடும் என்பதால் அல்வா கடையின் பழமையான சைஸை மாற்றாமல் இன்றளவும் தொடர்கின்றனர். மேலும் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு 20 வாட்ஸ் பல்ப்பின் வெளிச்சத்திலேயே அல்வா வியாபாரம் செய்த இதன் நிறுவனர் இன்றளவும் 20 வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தின் அளவை மிகப்பெரிய சைஸ் அளவுக்குக் கூட மாற்றவில்லை. அதனாலேயே இருட்டுக்கடை அல்வா என்ற உலகப் பாரம்பரியப் பெயர் இன்றளவும் தொடர்கிறது.

அனுதினமும் மாலை மூன்று மணிக்குத் தொடங்கும் அல்வா வியாபாரம் கூடிப்போனால் 7 அல்லது 8 மணிக்குள்ளாகவே விற்றுத் தீர்ந்துவிடும். மாலையில் அல்வா வாங்குவதற்கே மலைக்கவைக்கும் அளவுக்கு க்யூ நீண்டிருப்பது இருட்டுக்கடையின் மகிமை என்கிறார்கள். 5, 10 கிலோ என்று ஆரம்பித்து தற்போதைய அளவில் அன்றாடம் நூற்றுக்கணக்கான கிலோ விற்பனை வரை நீண்டிருக்கிறது.

 

nellai iruttukadai alwa...

 

இருட்டுக் கடையை உருவாக்கியவர்களின் வரலாறு இதுதான், என்பதை இதன் தொன்மைப் பற்றி அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

பலவகை இனிப்புகள் தயாரிப்பின் சுவையின் தரத்தால் பெயர் பெற்றவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த லாலா வம்சம். பிழைப்பின் பொருட்டு 80 வருடங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தின் சொக்கம்பட்டி ஜமீன் வம்சத்திற்கு இனிப்பு சமையல் செய்யும் பொருட்டு வந்தவர்கள். அதன் மூலம் பெயர் பெற்றனர். அந்த வம்சத்தில் வந்த பிஜிலிசிங் என்பவர் 80 வருடங்களுக்கு முன்பே, நெல்லைப் பகுதியின் மத்திய எக்ஸைஸ் துறையில் அதிகாரியாகப் பணியிலிருந்தவர். இருப்பினும் தங்கள் குடும்ப பாரம்பரியம் போய்விடாமலிருப்பதற்காக, பிஜிலிசிங் அப்போதைய நிலையில், அரசின் அனுமதி பெற்று நெல்லையில் சிறிய அளவில் (தற்போது வரை அதே சைஸ்) லாலா கடை அமைத்து வியாபாரத்தை 20 வாட்ஸ் (அப்போது அந்த லைட் தான் பிரபலம்) வெளிச்சத்தில் தொடங்கினார். வியாபாரம் வருமானம் வசதிகள் பெருகினாலும் தனது கடையின் பாரம்பரியத்தையும் பண்பையும் வெளிச்சத்தின் தன்மையையும் அவர் கைவிடவில்லை.

தனது வம்சாவழிகுல தெய்வமான கல்லகநாடி அம்மனின் படத்தை மட்டுமே தனது கடையில் மாட்டியிருப்பார். இந்த ஆலயம் சொக்கம்பட்டி அருகே கிருஷ்ணாபுரக் காட்டில் உள்ளது.

 

nellai iruttukadai alwa...


பிஜிலிசிங்கிற்கு வாரிசுகளில்லாமல் போனதால் அவரது மறைவிற்குப் பின்பு அவரது மருமகனான ஹரிசிங், மற்றும் அவர் மகனும் இருட்டுக் கடையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தங்களது கடையின் குவாலிட்டி பாரம்பரியம் கெடாமலிருக்க, நெல்லைன்னா அல்வாதான் என மனிதர்களுக்கு நினைவு வருகிறதைப்போல, மற்றவர்கள் தங்கள் கடைப் பெயரை டூப்ளிகேட் செய்துவிடக்கூடாது என்பதற்காக இருட்டுக் கடை அல்வா என்ற பெயரை டிரேட் மார்க்காக ரிஜிஸ்டர் செய்துள்ளனர்.

 

nellai iruttukadai alwa...


இந்த நிலையில், கொடூரக் கரோனா வைரஸ், அந்தக் கடையிலும் புகுந்துவிட்டது. தொற்று கடையின் இரண்டு அதிபர்களுக்கும் பரவ, சோதனையில் கரோனா பாசிட்டிவ் என்று வர, உடனே இருவரும் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் அல்வா கடையிலும் அவரது மற்றொரு கடையிலும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. தயார் செய்யப்பட்ட அல்வா மூலம் தொற்றுப் பரவலைத் தடுக்க அதுவும் அழிக்கப்பட்டுள்ளதாம். தனது கடை, இந்த அளவுக்குப் போன மன அழுத்தம் காரணமாக இன்று மதியம் மருத்துவமனையிலே தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பெரியவர்.

சோதனையில் கரோனா பாஸிட்டிவ் என கண்டறியப்பட்டதால் தொற்றைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார் முறையான விசாரணை நடக்கும் என்கிறார் மாநகர டி.சி.யான சரவணன். அல்வா உலகை ஆண்ட இரண்டு தலைமுறைப் பாரம்பரியம் சோகத்தில் முடிந்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.